மிகப் பெரிய லட்சியப் போர்!
"நம்முடைய அமைப்பு, நமது குறைபாடுகளை மட்டுமே போக்குவதற்கான அமைப்பு அல்ல; மாறாக, அது ஒரு சமூகப் புரட்சியை உருவாக்கும் நோக்கம் உடையது. அந்த சமூகப் புரட்சியானது, சமூக உரிமைகளைப் பொருத்தவரையில் - மனிதர்களுக்கிடையே எந்தப் பாகுபாடும் காட்டாததாக இருக்கும். அதோடு, வாழ்வின் உச்சபட்ச நிலையை எட்டும் வாய்ப்பை அனைவருக்கும் சமமாக அளிப்பதன் மூலம், சாதி உருவாக்கியுள்ள செயற்கைத் தடைகளை நீக்கக்கூடிய ஒரு புரட்சியாகவும் அது இருக்கும். நமது அமைப்பானது, ஒற்றுமைக்கும் ஆற்றலுக்குமானதாக, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் இவற்றிற்குமான அமைப்பாகும். நாம் நமது அமைப்பை எந்த அளவிற்கு அமைதியாகக் கொண்டு செல்ல இயலுமோ, அந்த அளவிற்கு அமைதியாகவே கொண்டு செல்ல விழைகிறோம். இருப்பினும், வன்முறையின்றி இருக்க வேண்டும் என்ற எங்கள் உறுதியானது, மேலதிகமாக எங்கள் எதிரிகளின் மனப்போக்கைப் பொருத்தே உள்ளது.
"இருண்ட காலத்தில் உருவாக்கப்பட்ட சாஸ்திரங்களாலும், ஸ்மிருதிகளாலும் கட்டுப்படுத்தப்படுவதை நாங்கள் ஏற்க மறுக்கிறோம். மாறாக, எங்களை நீதி மற்றும் மனித நேயத்தின் அடிப்படையில் கட்டமைத்துக் கொண்டுள்ளோம். தீண்டத்தகாதவர்கள், வர்ணாசிரமம் ஒழிய வேண்டும் என விரும்புகின்றனர். உரிமைகள், பொறுப்புகள் மற்றும் சமூக நிலை ஆகியவை - பிறப்பு என்ற விபத்தின் அடிப்படையில் அல்லாமல், தகுதியின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும் என்றும் அவர்கள் விழைகின்றனர். தீண்டத்தகாதவர்கள் ஒரு மிகப் பெரிய சமூகப் புரட்சியை தங்கள் லட்சியமாகக் கொண்டுள்ளனர்.''
- டாக்டர் அம்பேத்கர், 25.12.1927 அன்று மகத் குளப் போராட்டத்தின்போது...
ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று நாம் வீறுகொண்டு போராடும்பொழுது, "யாருங்க இப்பல்லாம் ஜாதி பாக்குறாங்க'' என்று இந்து சமூகம் சாதியை மூடி நாடகமாடும். இந்துக்கள் மனிதர்களாய் வாழவில்லை; ஜாதிகளாய் வாழ்கிறார்கள் என்று ஆதாரத்துடன் அறைந்தால், "ஜாதியை அவ்வளவு சீக்கிரம் ஒழிச்சுற முடியுமா?'' என்று ஏகடியம் பேசும். இதுதான் இந்து சமூகத்தின் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். சாதி (இந்து) பண்பாட்டின் உயிர்நாடியைக் கண்டறிந்து, அதன் இயங்கு தளத்தையே தகர்த்திடும் மாபெரும் வரலாற்றுப் பணியைத்தான் - பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் Annihilation of Caste (‘சாதியை ஒழிக்கும் வழி என்ன?' என்று நாம் தலைப்பிட்டிருக்கிறோம்) என்ற நூலில் செய்துள்ளார்.
இந்நூலை அம்பேத்கர் எழுதி 70 ஆண்டுகள் கடந்து விட்டன. அது மட்டுமல்ல, அம்பேத்கர் லட்சோப லட்சம் மக்களுடன் தாம் வாழும் காலத்திலேயே சாதியை ஒழித்தும் 50 ஆண்டுகள் (14.10.1956) நிறைவடைந்து விட்டன. இருப்பினும், சாதியை ஒழிப்பது குறித்தும்; தீண்டாமையை அழிப்பது குறித்தும் - நாம் புதுப்புது வழிகளில் போராடிக் கொண்டும், விவாதித்துக் கொண்டும் இருக்கிறோம். ஆனால், அம்பேத்கரின் வழியை நாம் பின்பற்றினோமா? என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வதற்கான தருணத்தை, இந்த நூலை மீண்டும் வெளியிடுவதன் மூலம் உருவாக்குகிறோம். ‘தலித் முரசி'ன் ஓர் இதழை இதற்காக நாம் அர்ப்பணித்திருக்கிறோம். நம் லட்சியத்தைப் பிரகடனப்படுத்துவதோடு, தொல்குடி மக்களின் சீரிய செயல் திட்டமான இச்சிந்தனையை, திக்கெட்டும் பரப்புவதும்தான் நம் தலையாய நோக்கம்.
சாதியை ஒழிக்கத் தங்களையே இழக்கத் தயாராக இருக்கும் போராளிகள்கூட, அதை எப்படி ஒழிப்பது என்று திக்கற்று, நிழல் யுத்தம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இயக்கங்களும்கூட, சாதியைக் கடைப்பிடிக்கும் மக்களைத்தான் மூர்க்கத்துடன் எதிர்க்கின்றன. ஆனால், சாதியின் மூலத்தை ஆராதிக்கவே செய்கின்றன. பல நூற்றாண்டுகளாக நிலைத்து நீடித்து இயங்கும் சாதி அமைப்பின் வெளிப்பாடுதான் தீண்டாமை. ஆனால், இதை மட்டுமே எதிர்த்துப் போராட தலித் இயக்கங்கள் நிர்பந்திக்கப்படுகின்றன. இச்சதித் திட்டத்திற்கான முக்கியக் காரணங்கள்: 1. தலித்துகளின் இழிவுக்கும் வன்கொடுமைக்கும், சாதிப் படிநிலையில் அவர்களுக்கு சற்று மேலிருக்கும் மக்களையே காரணமாக்கி, எளிதில் தலித்துகளின் சீற்றத்தை தனிமனிதர்கள் மீது திசை திருப்ப முடிகிறது 2. தலித்துகளின் இழிவுக்கு மூலகாரணமான பார்ப்பனியம் சேதாரமின்றி - இந்து மத உதவியுடன் பாதுகாக்கப்பட்டு, பலப்படுத்தப்படுகிறது.
சாதி ஒழிப்புக்கானப் போராட்டங்கள், தீண்டாமையால் பாதிப்புக்குள்ளாகின்றவர்களுக்கு மட்டுமேயானது என்ற அலட்சியப் பார்வையால்தான், பிற்படுத்தப்பட்ட மக்கள் இதில் தங்களை இணைத்துக் கொள்ள மறுக்கின்றனர். தங்களின் பிறவி இழிவான சூத்திரத் தன்மையை வரித்துக் கொண்டிருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் சாதியை ஒழிக்கும் சுரணையை ஏற்படுத்தி - பார்ப்பனியத்திற்கு எதிராகப் போராடத் தூண்டுவதே இந்நூலின் நோக்கம். இப்பெரும்பான்மை மக்களின் துயரங்களுக்கான முதன்மை முரண் - சாதியன்றி வேறென்ன? ‘தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்துக்கள் அல்லர்' என்பது வரலாற்று உண்மை. ஆனால், நடைமுறையில் அவர்களை இந்துக்களாக இருக்கும்படி இந்நாட்டின் சட்டமும், பார்ப்பனிய மேலாதிக்கமும் கட்டாயப்படுத்துகின்றன. ஒருவருடைய சாதி அவருடைய பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதால், அது இறப்பிற்குப் பிறகும் பன்னூறு தலைமுறைகளாக நீடிக்கிறது. இப்பிறவி இழிவுக்குத் தீர்வு காண வேண்டாமா?
மக்களின் அனைத்துச் சிக்கல்களுக்கும் ‘சர்வரோக நிவாரணி'யாக அரசியல் தீர்வே அவர்கள் மீது திணிக்கப்படுகிறது. தமிழர்களின் நலன் காக்கத் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் பரிணாம வளர்ச்சிகளும், அவை சார்ந்த இயக்கங்களும்; தமிழ்த் தேச தன்னுரிமைக்கு முன்னுரிமை அளிக்கும் பல்வேறு இயக்கங்களும் - தமிழர்களின் பிறவி இழிவை ஒழிக்கும் செயல் திட்டத்தைத் தன்னகத்தே கொண்டிருக்கவில்லை. நாற்பது ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் திராவிடக் கட்சிகளால், தமிழர்களின் சூத்திரத் தன்மையையும், பஞ்சமத் தன்மையையும் ஒழிக்க முடியவில்லையே ஏன்? இன்றைக்கு இந்தியா முழுவதும் அரசியல் தளங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களே கோலோச்சுகின்றனர். இருப்பினும் இந்த அரசாங்கத்தைப் பயன்படுத்தி, தங்களின் பிறவி இழிவை அவர்களால் போக்க முடியாததற்கு என்ன காரணம்?
நாடாளுமன்ற ஜனநாயகத்தினாலோ, பாட்டாளிகளின் சர்வாதிகாரத்தினாலோ, ஆயுதப் புரட்சியினாலோ, வேறு எவ்வகைத் தத்துவங்களாலோகூட, சாதியை வேரறுக்க முடியாது. ஏனெனில், இது அடிப்படையில் சமூக - மத - பண்பாட்டுப் பிரச்சினை. எத்தகைய சமத்துவ, ஜனநாயக, சோசலிச குடியரசை நிர்மாணிக்க முனைந்தாலும், அதற்கு முன் நிபந்தனையாக சாதி ஒழிக்கப்பட வேண்டும். இதைத்தான் இந்நூல் ஆழமாகப் பேசுகிறது. பிறவி இழிவான சாதியை ஒழிப்பதற்கு, அம்பேத்கர் செம்மையான தீர்வை இந்நூலில் முன்வைத்திருக்கிறார்.
ஜாதி என்ற பிறவி இழிவை அம்பேத்கரின் வழியிலன்றி, வேறு வழிகளில் ஒழிக்க முடியாது. ஏனெனில், பேரறிஞர் ஆனாலும், உலகின் முதல் செல்வந்தனாக மாறினாலும், நாட்டின் உயரிய அரசுப் பதவியை அடைந்தாலும், ஒருவனுடைய ஜாதி மட்டும் மாறவே மாறாது. மறைந்த குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. மெத்தப் படித்து, இந்திய ஆட்சியதிகாரத்தின் உயரிய பதவியை அடைந்தும், அவர் "கீழ் சாதி'யாகத்தான் அறியப்பட்டார். அவர் தன்னை இந்து அல்லாதவராகப் பிரகடனப்படுத்திக் கொள்ளாததால், அவர் மறைந்த பிறகும் - "கீழ் சாதி'யாகவே அறியப்படுகிறார். ஆனால், பாபாசாகேப் அம்பேத்கர் தம் பிறவி இழிவை ஒழித்த காரணத்தால் - அவரை எவரும் இந்துவாகவோ, கீழ் சாதியாகவோ எந்தக் காலத்திலும் அடையாளப்படுத்திவிட முடியாது.
அம்பேத்கரின் இந்நூல், சாதி இந்துக்களுக்கானது மட்டும் அல்ல. இந்த சமூகத்தில் யாரெல்லாம் தங்களை இந்துக்களாகக் கருதிக் கொள்கிறார்களோ - அவர்கள் ஆண்டைகளாக இருந்தாலும், அடிமைகளாக இருந்தாலும் - அவர்களுடைய ஆதிக்கத்திற்கும், அடிமைத்தனத்திற்கும் இந்நூல் வெடி வைக்கிறது. பெரும்பான்மை தலித்துகள் இந்து உளவியலில் இருந்து மீள மறுப்பதால்தான், சாதி இழிவுகளை வெட்கமின்றி சுமந்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல, பிற்படுத்தப்பட்ட மக்களும் கூச்சநாச்சமின்றி சூத்திரப்பட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
சாதிப் பட்டத்தை சுமக்கும் அடிமைகளிடம் - "நீ ஓர் அடிமை என்று சொல்; அவன் கிளர்ந்தெழுவான்'' என்றார் அம்பேத்கர். சாதி இந்து திமிருடன் தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களிடம் - "நீ மேல் ஜாதி அல்ல; சூத்திரனே'' (விபச்சாரியின் மகன்) என்று அவர்களை கீழ் சாதிகளாக்கி - அவர்களுக்கு மேலே இருப்பவர்களை எதிர்க்கவும், கீழே இருப்பவர்களை மதிக்கவும் வலியுறுத்தியவர் பெரியார். இவ்விரு புரட்சியாளர்களின் அணுகுமுறையே - சாதி அமைப்பை நிர்மூலமாக்குவதற்கான வழி. சாதி ஒழிப்பு செயல்பாட்டிற்கான தத்துவமும், விளக்கக் கையேடும்தான் இந்நூல். இந்நூலை அம்பேத்கர் வெளியிட்ட அடுத்த ஆண்டே, பெரியார் மொழிபெயர்த்து வெளியிட்டது, தற்செயலானது அல்ல. ஆழ்ந்த புரிதலுடன்கூடிய நீண்ட நெடிய செயல் திட்டத்திற்கான வெளிப்பாடே அது.
தோழர்களே! சாதி என்னும் பிறவி இழிவை முற்றாக ஒழிக்கும் புரட்சிக்கு நீங்கள் தயாரா? ஆம் எனில், அதற்கு முதலில் இந்நூலை ஆயுதமாக்குங்கள்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|