சீமோன்தீ கவிதைகள்
குயில்களின் சோகம் கலந்த அதிகாலையில்
முட்கள் தொண்டையில் இறங்கியது போன்ற
அந்தக் கத்தல்கள்
நெஞ்சினுள் ஏதோ நெருடல்
றோட்டின் ஆரவாரத்தில்
இன்னுமொரு ‘கலவரத்தின்’ சாயல்களைக் கண்டு
திடுக்குற்றிருந்தன நெஞ்சங்கள்
உங்களுக்குத் தெரியுமோ? அவர்கள்
எமது சூரியப் புதல்வர்கள்
அழுகிப் போன சிதழ்க் கூடுகளின் மேல் நின்று
எடுத்துக் கொண்ட சத்தியப் பிரமாணங்கள்
இன்று இரத்த ஆறாய் நாடு முழுவதும்...
இறுதி மூச்சை இழுத்துப் பிடித்து
அதீத கந்தகக் கதிர்களின் வெப்பத்தில்
உருக்குலைந்து போன
ஆன்மாக்களின் குருதிகள்
விழிகளுக்கெட்டியும் எட்டாமலும்
அநாதரவாய் ஊர்திகளின் கீழ்
ஒழுகிக் கிடந்தன
என்னிடம் எழுந்த பெருங்கோவத்தில்
நரம்புகள் புடைத்து நாளங்கள் வெடிக்கும்வரை
கத்த வேண்டும் போலாகிறது
எனது கோபத்தை வன்முறையாக்காதீர்கள்
நிராதரவாக்கப்பட்ட மக்களின் பெருங்கோவமது
சாகடிக்கப்பட்ட ஆத்மாக்களின்
கடைசி ஆசையென
நினையுங்கள்
என்னுடைய கோவம் அடையாளமற்று அழிந்து மடியும் போது
அது கானலாகித்தான் போகுமென்று நீங்கள் நினைக்கிறீர்கள்
ஆனால் என்றொரு நாள் அழகிய புரட்சிக்கு
வழிவகுக்காதென்று சொல்ல முடியுமா உங்களால்?
உங்களால் அவமானப்படுத்தப்பட்ட
எங்களின் குழந்தைகளால்
அது வழி நடத்தப்படலாமென்பதை
மறவாதீர்!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|