புதிய அவனின் இரவு சலனமற்றுக் கடக்கிறது
ஸ்நேகிதன் .
பல்ராம் ஜோகீஸ்வர் என்னுமவன்
வரைபடத்தின் புள்ளியாகவுமில்லாத கிராமத்திலிருந்து
பிழைப்பிற்கான தேடலில்
ஏமாந்தலைவதாகவும்
ஒளிரும் முகங்கொண்ட மனைவியும்
பசியில் சுருங்கிய குழந்தைகளும்
அங்கிருப்பதாய்ச் சொன்னான்
நைந்து போன ஆடைகளும்
சவரமழிந்த முகமும்
பரிதாபகரமானவனாய்க் காட்டியது
எதிர்பார்ப்பும் பெரிதொன்றுமல்ல
பேருந்துக்காகவன்றினும்
போக்கு லாரியில் இடம் பிடிக்கவாவது
கொஞ்சம் பணம் அவ்வளவுதான்
சுனையைப் போல சிலர் கசிந்ததில் மலர்ந்தவன்
வார்த்தைகளை நன்றியாய் மலர்த்தி
முகவரிகளை வாங்கிக் கொண்டான்
கடிதமிடுவதாய்க் கூறி தெருமுனையில் மறைந்தான்
பிறகொரு மாலையில்
உயிர்ப்பின் சுவாச அடையாளங்களோடு
மதுபானக் கடையொன்றின் வாசலில் கிடந்தான்
சொல்வதற்கேதுமில்லை
பழுத்த வெயில் தரையில் நழுவிக் கொண்டிருக்கும் நத்தையைப் போல
நகருமிவ்விரவைக் கடக்க
எங்களைப் போல
அவனுக்கும் தேவைப்பட்டிருக்கலாம்
சில மிடறு மதுவும்
வறுத்த மீனின் நடுப்பகுதித் துண்டொன்றும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|