கென் கவிதைகள்
.
1.
பொழுதின் முடிவுகளில்
மசமசக்கிறது இரவின் நிறம்
கரிய சிறகுகளில்
மூடி மறைக்க முயல்கிறது
ஏதோ அங்கொன்றின்
மினுமினுப்புகளில் தெரிகிறது
விரவிட இயலாதது
கூகையின் அலறலில்
திடுக்கிடுகிறது உச்சிக்கிளைகளுடன் ராட்ஷசனாய்
தூரத்தெரிவது
எச்சத்தில் விளைந்ததாம்
வேர்களின் வியர்வைக் குளியல்கள்
கூர்நாக்குகளுக்கு தெரிவதில்லை
எல்லாம் மறைத்த
அகங்கார கருமையை
கிழக்கின் வெளுப்பு உடைக்குமாம்
பரிகசித்து எழுந்தோடுகிறது
கொண்டைச்சேவல்.
2.
கரைகளின்
உரசலில் நனைதலில் இருக்கலாம் அலைகளின் ஓலம்
வெண்மையின் கரிப்பில்
கரைதலில் இருக்கலாம் கடலின் கண்ணீர் தீராத வாழ்தலின் ருசி
தனித்திருப்பவனோடு சேர்த்து வைக்கிறது சிலநினைவுகளை
சில முத்தங்களை
பிரிதலின் பிரக்ஞை
இற்றுப்போகையில்
சொல்லப்படாத வார்த்தைகளின் முனைகள் கோட்டையின் பாழடைவில்
வௌவால்களோடும்
புழங்கத் துவங்குகின்றன தாய்மையின் முலைக்காம்புகளில் பூசப்படும் வேம்பின் கசப்பு
தெரிவதில்லை பால்குடி மறக்கவியலா மழலைக்கு.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|