என் உருவம்
பவுத்த அய்யனார் .
என் உருவம் நானே செதுக்கிக் கொண்டது
நீங்கள் பயப்பட வேண்டியதில்லை
குற்றத்தின் சாயல் படிந்த உருவம்
பயப்படவே வைக்கும்
சாயல் என்பது உண்மையல்ல
புகைப்படங்களில் நான் பார்த்த
கொலையாளிகளின் உருவம் மிகமிக அழகானவை
தோற்றம் என்பதும் உண்மையல்ல
காலங்காலமாகச் சொன்னாலும்
தோற்றம் நம்மை ஏதோ செய்கிறது
என்னை அறியாத நீங்கள் பார்த்தவுடன் பதட்டம் கொள்கிறீர்கள்
நீங்கள் காவல்துறை பணியாளர் என்றால்
கூடுதல் கவனத்துடன் பார்க்கிறீர்கள்
மூன்றுவயதேயான எங்கள் மகனும்
மொட்டை என்றே அழைக்கிறான்
மரியாதையுடன் பேசச் சொன்னால்
மொட்டை சார் என்கிறான்
எனக்கும் முடி இருந்ததறிந்த நாவிதர் பிச்சை இறந்து 15 ஆண்டுகளிருக்கலாம்
சிறுவயது நண்பர்களுக்கும் மறந்துவிட்டது
என்தலையில் முடி இருந்ததற்கு சாட்சியங்களைத் தேட முடியாது
ஏற்றுக்கொள்ளுங்கள் என் மொட்டைத்தலை முகத்தை
வேறெந்த பிம்பத்தையும் ஒட்ட வைக்காது
புத்தம் சரணம் கச்சாமி.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|