அய்யப்ப மாதவன் கவிதைகள்
.
1.
வரும் ஒவ்வொருவரும்
வழுக்கைத் தலையாயிருக்கின்றனர்
இளைஞன் என்பவன் இச் சூழலில்
விக் வைத்து அலைகிறான்
பெண்ணை படுக்கையில் கிடத்த
மொட்டை மாடியின் படிகளில் சத்தம்
இரவு வேறு
காலியான இரண்டாவது மாடியில்
நிர்வாணங்கள்
நகரின் ஒதுக்குப்புறமான தெருவில்
ஓர் ஆண் ஒரு பெண்
பூட்டாத பள்ளி அறைக்குள்
ஓயாத இருளில் காமத்தின் இமைகள்
மூடவே இல்லை
தூரத்தில் ஒரு நட்சத்திரம் மினுங்கியது
சிணுங்கியது
தாபத்தில் செத்து கனவில் மிதந்தது
பல நாட்களில் விரகத்திலிருந்த உடலை
தனிமையிடம் ஒப்படைத்தல் நிகழ்ந்தது
ஒன்றும் புதிதல்ல
வழுக்கையான மைதானத்தில்
யுவதிகள் தூரத்திலிருந்து
வேடிக்கை பார்க்கின்றனர்.
2.
கடலின் விளிம்பில்
நின்றிருந்த படகின் மேலிருந்து
சூரியனின் செந்நிறக்கதிர்களைக் கண்கள்
கண்டடைந்தாயிருந்தது நேற்றைய இரவு
கத்தி பாய இருந்தவன்
மீண்ட வேளை அவனுள்ளிருந்து
அணைக்கும் பச்சைக் கொடியொன்று
தவிப்புடன் படர்ந்தது
மடித்த காகிதங்களுக்குள்
புதைந்த அர்த்தங்களை விரித்தபோது
தூய ஆன்மாவின் ஒளி தெரிந்தது
விலகிச்சென்றவனின் உருவம்
நீள் உடல்விட்டு அகலாமல்
தலை வழியே கசிந்து இறங்கியது
இரத்தம் ஏறிய காகிதத்தினுள்
கபடமற்றவனின் இதயம் ரீங்காரத்துடன்
வெளியெங்கும் நிழலாடும்
அவன் கறுத்த பேச்சுகளைக் கேட்டதன் வழியாய்
முகத்தினில் சினத்தைக் கொப்பளித்திருந்தான்
சாந்தப்படுத்தவோ கோபத்தைத் தூண்டவோ
முற்படாதபோது
காலம் தாழ்த்தி நேரவிருக்கும் சம்பவத்தில்
குரல்வளையைக் கடிப்பது உறுதியாயிற்று
கவிவழி வந்து வாலையாட்டுதலை ஒழித்து
கவிமனம் புரியாத தெருநாய்கள்
எச்சில் உணவுகளை
தின்று கொழுத்துத் திரியட்டும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|