பா.திருச்செந்தாழை கவிதைகள்
மதுவிடுதியின் பின்னிரவில்
மரித்துவிட்ட கருந்திராட்சைகள் துளிர்க்கும்
வேரற்ற தாவரத்திற்கு உடலை யீந்தவன்
ஆணுறையில் உலகை வரைகிறான்
சிறுமியின் விரல்களையொத்த கிளைகள்
சூரியனின் சாம்பல்குழிப் புண்களை
வருடுகையில் முளைக்கும்
இறந்தகால கசப்பு ததும்பும் கனிகள்
உருகத் துவங்கிய மொழியின் நதியில்
ஒதுங்கும் மீன்முட்டை ரகசியங்களை
எதிர் இருக்கை மதுக்கிண்ணங்கள்
நாளையின் கர்ப்பத்தில் பதுக்குகின்றன
ஐந்தாம் நாள் பிறையின் கூர்முனை
பற்றிய தாவரம் அழைக்கிறது
அட்டவணையற்ற பிரதேசம் நோக்கி
சிறகுகளரும்பிய உடலுடன்
புவியின் கடைசிக் குவளையென்றபடி
பருகியவன் ருசிக்கவியலா இறுதி
துளியின் மீதான துக்கத்தை
யுணர்ந்த கணம்
இறந்த ஸர்ப்பமென வீழும்
தாவரத்தின் மேல் வெண்ணிற மணலாய்
உதிர்கிறது நிலவு.
(நடராஜனின் ப்ரியத்திற்கு)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|