அ.இலட்சுமிகாந்தன் கவிதைகள்
பாம்பாட்டியை சுற்றி பயமகலா
விழிகளோடு நிற்கிறோம்.
விஷப்பல் பிடுங்கப்பட்ட பாம்பை லாவகமாக
கையாள்கிறான் வித்தைக்காரன்.
வார்த்தைகளால் நம் பையிலிருந்து
காசைப் பிதுக்கியெடுக்கும்
சூட்சும வித்தைக்காரர்கள்
உலா வருகிறார்கள் நகரெங்கும்.
ஆணவத்தின் கிரீடம் கொண்டு
அம்மணத்தை சூடிக் கொள்ளும்
இராஜாதி இராஜாக்கள்.
நட்பையும், அன்பையும் புதைத்த
சவக்குழியின் மேல் நடக்கும்
விழாக்களில் உப்புக்கரிக்கும்
தேநீரை பகிர்கிறோம்.
புதைத்த குரோதங்கள் கை, கால் முளைத்து
உயிர் பெறுகிறது நம் வீடுகளில்.
குழந்தையின் கன்னம் தடவும்
பாறையின் கைகள்.
இருளைப் பிழிந்த பின் மிச்சமிருக்கும்
பகலில் நேர்கிற மரணம்.
பிசைந்து சாப்பிட்டு புணர்ந்து உறங்கி
மனப்பற்கள் நறநறக்க விழித்தெழுகிறோம் காலை...
****
நான் சந்திக்க வந்தேன்
நீ சந்தித்துக் கொண்டிருந்தாய்
விழிகளை மூடுகிறது உறக்கம்
படுக்கைகள் மடிக்கப்படுகின்றன
குற்றவுணர்ச்சியற்ற புன்னகையால்
கேலி செய்கிறாய்
நடுங்கும் இதயத்தை.
அழுகலின் வாசனை மறைக்கப்பட்ட
துரோகம் நம்மீது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|