தலையங்கம்
போனவருடம் செத்த ஒரு இலக்கியப்பிணத்தை இன்னும் புதைக்காமல் ஊர்ஊராய் தூக்கிப்போய் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்க, அடுத்ததாய் கிடைத்தி ருக்கிறார் நகுலன். இலக்கியவாதிகளின் கண்ணீரில் எல்லா பத்திரிகைகளும் நைந்துவிட்டன. இந்த ஒப்பாரி அரசியலைப் பற்றிய உணர்வேதுமின்றி இதே தருணத் தில் இறந்துவிட்டார் ஏ.பி.வள்ளிநாயகம். கதை கவிதை என்று தத்துபித்தாக எதையாச்சும் எழுதித் தொலைக்காமல் ஒடுக்கப்பட்டோரது வரலாற்று மீட்புக்கான ஒரு சமூகநீதி எழுத்தாளராகவே வாழ்ந்து மறைந்துவிட்ட தால் இலக்கியவாதிகள் தரப்பு ஈ காக்கையும் எட்டிப் பார்க்கவில்லை. சாவிலும் சாதி பார்க்கிறதோ இழி மனம்? அமரர்கள் வள்ளிநாயகம், நகுலன் இருவருக்கும் அஞ்சலி செய்கிறது புதுவிசை.
இடதுசாரி கட்சிகளுக்கு ஆதரவளிக்கும் எழுத்தாளர் களுக்கு 'இலக்கியத்தில் கால் நனைப்பு கொண்ட அரசியல்வாதிகள்' என்ற அவப்பெயர். ஆளுங்கட்சிக்கு ஜய்யாங்ஜப்பாங் என்று ஜால்ரா அடித்து தலையங்கமோ, முதல்வர் வீட்டாளுகளைத் துதித்து ஆறேழுபக்க கட்டுரையோ எழுதுவோரை என்னவென்று அழைக்க? இலக்கியத்தில் காலையும் மற்றதையும் முழுதாக நனைத்துக்கொண்ட- அரசியல் நோக்கமற்றவர்கள் என விளிக்கலாம்போல. திராவிட இயக்க அரசியலை எப்போதும் அசூயையோடு விமர்சித்த ஒரு பத்திரிகை இப்போது பொழியும் பாராட்டுமழையில் அண்ணா அறிவாலயமே அடித்துக்கொண்டு போய்விடும்போல. ‘காக்காப் பிடி இலக்கியம்’ என்ற இந்த புதுவகைமை நமக்கு பிடிபடாவிடினும் எதற்கும் இருக்கட்டுமெனச் சொல்லிவைப்போம்- கனிமொழிக்கு ஆயிரம் ஜெ. (இதுவேறு ஜெ)
பொத்தாம்பொதுவானதாக கம்யூனிஸ்ட் கட்சி இருக்க முடியாது. அது பறையன், பள்ளன் கட்சி என்று அதன் எதிரிகளால் மிகச்சரியாகவே இதற்கு முன் விளிக்கப் பட்டது. சரியாகச் சொல்வதெனில் அதை அருந்ததியர் கட்சியெனச் சாதிவெறியர்களும், பெண்களின் கட்சியென ஆணாதிக்கரும் இழித்துரைக்கும் நிலையை நோக்கி அக்கட்சி இன்னும் வேகமாக தலைகுப்புற வர வேண்டும் என்பதே ஒடுக்கப்பட்ட மக்களின் பெரு விருப்பம். அருந்ததியர் வாழ்வுரிமைக்காக சிபிஐ-எம் நடத்திய சென்னைப் பேரணி அவ்விருப்பத்தின் முன்னறிவிப்பு. கையால் மலமள்ளுவதை ஒழித்தல், மாற்றுத்தொழில், உள் ஒதுக்கீடு ஆகிய அருந்ததியர் கோரிக்கைகளுக்கு புதிய அழுத்தம் பிறந்திருக்கிறது.
காலத்திற்கேற்ற மாற்றங்களுக்கான முன்மொழிவையோ கருத்துச் சுதந்திரத்தையோ எல்லாமதங்களின் அடிப்படைவாதிகளும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்தில் குடிக் கலாச்சாரம் என்ற கட்டுரையை எழுதியதற்காக ஹெச்.ஜி.ரசூல் மதவிலக்கமும் ஊர்விலக்கமும் செய்யப்பட்டுள்ளார்.
இந்துத்வாவின் இஸ்லாமிய எதிர்ப்பு துவேஷங்களை எதிர்கொள்ளும் தற்காப்புணர்வில், அதேவகைப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதம் தலை தூக்கும் என்பதின் வெளிப்பாடான இந்நடவடிக்கையை புதுவிசை வன்மையாக கண்டிக்கிறது. குர்ரானிய வசனங்களின் அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ள இக் கட்டுரை எவ்வகையிலும் இஸ்லாத்திற்கு எதிரானதல்ல என்று அவர் அளித்த விளக்கத்தை ஏற்று அவர் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டுமென்று சம்பந்தப்பட்ட தக்கலை ஜமாத்தாரை கேட்டுக்கொள்கிறோம்.
- ஆசிரியர் குழு
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|