வற்றாதிருக்கட்டும் தர்மக்குளம்
ந.பெரியசாமி
முத்துமீனாளின் தன்வரலாற்று நூலின் ஒருபகுதி புதுவிசை யில் வெளியானபோதே கவனம் பெறத் தொடங்கிவிட்டது "முள்". தன்னை கருவிலே அழிக்க நினைத்த அம்மாவை சந்தோசப்படுத்த பெண்ணாய் பிறந்து, எப்பப்பாரு காக்காவா கரையிது, கம்மாக்கரையில போடுங்க என பாட்டியின் வெறுப்புக்கு ஆளாகி, பின் பாட்டியின் செல்லப்பிள்ளையாக மாறிய முத்து மீனாளின் வாழ்வனுபவங்கள் நூலாக விரிவு கொள்கிறது.
தண்ணி எடுக்கும் குளத்திற்கு தர்மம் என்று பெயராம். (குளத் திற்கு இப்படி ஒரு பெயர் இருப்பதை இந்நூல்தான் தெரிய வைக்கிறது)
உடன் படித்த தோழிகள், அக்கம் பக்கத்தினர், உறவினர்களின் துயரங்களின் ஊடாக, தனது துயர்மிகு வாழ்வில் பொதிந்து கிடக்கும் அனுபவங்களையும், படிப்பினைகளையும் இயல் பாக முன்வைக்கும் நுட்பம் பிடிபட்டிருக்கிறது முத்து மீனாளுக்கு.
எந்த குழந்தையின் உடலிலாவது தழும்பைப் பார்த்தால் கை அனிச்சையாக கிள்ளிப்பார்த்து அது பால் தழும்பு என்றறிந்த பின் நிம்மதிகொள்கிற மனம் அவருக்கு. தொழுநோய் உண் டாக்கிய பயம் அப்படி. சின்னஞ்சிறு வயதில் பெற்றோர், உற்றார், உறவினர், தோழிகள், தன் கிராமம் என அனைத்தை யும் பிரிந்து விடுதியில் போய் சேர்ந்து நோயை வெற்றி கொள்வதோடு படிப்பிலும் கவனம் செலுத்துகிறார்.
வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள் சற்றே இளைப்பாறலாம் என்ற இயேசு வின் அழைப்பை செபிப்பவர்களின் மதச்சூழலில் வளர்ந்து, சிகிச்சை பெற்று, உண்டு, உறங்கி படிக்க கருணையையும், உதவிகளையும் கணக்கற்று வழங்கியபோதும் இவர் எச்சூழலிலும் மதம் மாறும்படி கட்டாயப்படுத்தவில்லை. மதம் மாறாத போதும் குறைவற்றே இவரை பாதுகாத்த மதர், சிஸ்டர்கள் போற்று தலுக்கு உரியவர்கள்தான். அன்பொழுகப் பேசி, உதவிகள் செய்து பின் மதம் மாற்றிவிடுவார்கள் என்ற பொதுப்புத்தி எவ்வளவு பொய்யானது என்பதை நூல் உணர்த்தியது.
தன் காதலுக்கு இடையூறாக இருந்த மகளின் தலையில் சமூக பயத்தால் கொதிக்கும் மீன் குளம்பை ஊற்ற நேர்ந்த அவலம், தான் விரும்பியவனை மணம்கொள்ள முடியாதுபோக அரளி விதைக்கு பலியான மல்லிகாவின் துயரம், மதரிடமும் சிஸ்ட ரிடமும் தன் காதல் தெரிந்துவிட அவமானப்பட்டு நின்ற சங்கரி அக்காவின் வலி... பாதருக்கு படிக்கிற பையனை வளைச்சுப் போடுறா இவள்லாம் ஒரு பொண்ணா என சபிக்கப்பட்ட மேரி அக்கா...
திருமண நேரத்தில் தொழுநோய் வந்துவிட , சக மனிதர்கள் வெறுத்து ஒதுக்க எதிர்காலம் குறித்த கேள்வியோடு சுருண்டு போகாது கிறிஸ்துவ பள்ளியில் சம்பளம் பெற்றுக்கொள்ளாது தன் வாழ்வை குழந்தைகளுக்காக பாடம் சொல்லிக்கொடுக்க மாற்றிக்கொண்ட தமிழாசிரியை புனிதா.. அம்மாவிற்கு பிடிக் காவிட்டாலும் தான் விரும்பியவனோடு வாழ நகை வேண்டி அம்மாவை பயமுறுத்த எலி மருந்து குடித்து மாண்டு போன செல்வி... அவளில்லாது எனக்கு வாழ்வில்லை என சுடுகாட் டில் திரிந்து அவள் செத்த முப்பதாம் நாள் தன்னையும் மாய்த்துக்கொண்ட பழனி...தான் அவலட்சணத்தோடு இருப்பதால் அழகான தன் மனைவி மீது சந்தேகப்பட்டு எந்நேரமும் வார்த்தைகளால் கணவன் கொத்த துடித்துக் கிடக்கும் மீனா... - என தன்னோடு வாழ்ந்து வளர்ந்தவர்கள் குறித்த அக்கறை அவரின் பதிவுகளில் வெளிப்படுகிறது. எத்தனை பெண்களுக்கு விரும்பியதுபோல் வாழ்வு அமைந் திருக்கிறது. பெரும்பாலானவர்கள் தங்களுக்குத் தாங்களே சமரசம் செய்துகொண்டுதானே வாழ்கிறார்கள்.
காதலித்தவனோடு வாழமுடியாது கட்டாயத்தில் கட்டி வைத்தவனோடு வாழ... அவனோ பேசும் அத்தனை ஆம்பளைகளோடும் படுத்து எழுந்திரிச்சியா என அடித்து உதைத்து மண்டை பிளந்து கொடுவாளால் உடலை ஆங்காங்கே கொத்தி சித்தரவதை செய்யும் கொடுமையை சகிக்க முடியாது அக்கம்பக்கத்துப் பெண்கள் ‘என்னத்தக் கண்ட அவனிடம் வாழ்ந்து பேசாம நாலுமொழம் பூ கட்டியாவது வயித்த கழுவிக்கோ’ என கூறியதோடு அல்லாமல் ஒன்றுகூடி வௌக்கமாத்தால் அவனை அடித்து விரட்டியத் துணிவு, சுயமரியாதையுடன் வாழநினைப் பவர்கள் கைக்கொள்ள வேண்டியதாய் இருக்கிறது.
விடுதியில் இடம் கிடைக்கும் முன் தன்தோழியின் வீட்டில் தங்குவதற்கு கேட்க, இதுவும் நம்ம பொண்ணுமாதிரிதானே நம்ம வீட்டிலே தங்கிக் கட்டும் எனக்கூறி வீட்டில் யாரும் இல்லாத போது தவறாக நடந்துகொள்ள முயன்ற சுகந்தியின் அப்பாவுடைய வக்கிரம்... ஜாதகம் பார்க்க வரும் பெண் களிடம் மந்திரிக்கிறேன் என்று உணர்வுகளைத் தூண்டி கைக் கொள்ளத் துடிக்கும் பூசாரிகள் என நம்பிக்கையை காவு கொண்ட அருவருப்புகளையும் அம்பலப்படுத்தியுள்ளார்.
அடுத்தவர்களின் அந்தரங்கங்களில் நுழைந்து அவர்களை இழிவுபடுத்தி உண்டாகும் போதையில் தன்னை ஒழுக்கசீல னாகவும் உயர்ந்த பண்பாளனாகவும் காட்டிக்கொள்பவர் களை வேணி, சித்ரா இருவரும் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருப்பதை எல்லோர் முன்னால் கூனி குறுகி நிற்க வைத்து இழிவுபடுத்தும் விடுதி காப்பாளர் மூலம் வெளிக் காட்டியுள்ளார்.
ஒரு பெண்ணை கட்டிக்கொடுக்க பெற்றோர்களுக்கு ஏற்படும் சிரமம் குறித்து நிறைய படித்தும் கேள்விப்பட்டதுமாய் இருக்க சீக்கிரம் மாப்பிள்ளை கிடைத்துவிட வேண்டும் என வேகமாக படிக்க வேண்டியதாகிவிட்டது. ஐநூறு, எட்நூறு பக்கங்களில் நாவல்கள் வந்து கொண்டிருக்கும் சூழலில் , ஒரு நூலின் வெற்றி தடிமனில் இல்லை என்பதை முள்உணர்த்துகிறது.
முள்
-முத்துமீனாள்
ஆழி பப்ளிஷர்ஸ்
12, முதல் பிரதான சாலை,
யுனைடெட் இந்தியா காலனி
கோடம்பாக்கம், சென்னை- 24
விலை:ரூ.50
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|