அகச்சேரன் கவிதைகள்
குறிதெரிய வலம்வருகிறான் பைத்தியக்காரன்
ஜென்ம விரோதியாகவோ கட்டுவிரியனாகவோ
பீப்பீங்கானாகவோ புலப்படத் தொடங்குகிறான்
இப்பூமியிலிருக்கும் இவனை என்ன செய்வதென்ற திகைப்பு
அனைவர் விழிகளிலும்
ஒரு குவளை தேநீர்க்காகவும்
கொஞ்சம் எச்சிற் சோற்றுக்காகவுமே
உலகை ஏறிடுகிறான் திரிதல் நிறுத்தி
ஸ்தம்பித்துப்போன தன் வாழ்வு குறித்த அவனின்
ஓயாத பேச்சுகளுக்கு
பூச்சுபெயர்ந்த தூண் விகாரமாய்ச் சிரித்து வைக்கிறது
செங்கல் தெரிய.
2.
எல்லா அரசுப் பேருந்துகளிலும்
சம்பிரதாயமாகப் பயணிக்கிறார் திருவள்ளுவர்
ஒரு பயணியாக அவரை அலையவிட்டிருக்கிறது
நவீனச் சமூகம்
தான் எழுதிய கவிதைகளை அவரே
தூக்கிக் கொண்டு அலைவது
பார்ப்பதற்குக் கஷ்டமாக இருக்கிறது
இரண்டு வரிகளில் எழுதியதால் எவ்வளவு
அசௌகரியங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது அவர்
ஒரு கண்திருஷ்டிப் பொம்மையின் பிம்பம் படிவதன்
அபாயமுணராமல் அவரும் பயணம் செய்து கொண்டேயிருக்கிறார்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|