கோசின்ரா கவிதைகள்
.
பாசிஸ்டுகளின் அறை
பாசிஸ்டுகளின் அறைகள்
காலியாக இருப்பதில்லை.
யாராவது ஒருவன்
அறையை காலி செய்யும்போது
இன்னொருவன் புகுந்துக் கொள்கிறான்.
காத்திருந்தவன் போல.
யாரும் எளிதில்
காலிசெய்வதில்லை
தாளிடப்பட்ட அறைக்குள்
யாராவத ஒருவனை
வன்முறைக்குள்ளாக்குகின்றான்.
அவனறையில்
பிணங்கள் ஏதுவுமில்லை.
தடயங்கள் எதுவுமில்லை.
களைத்து போகின்றாள்
வன்முறை செய்தே.
அவன் பெயரில் ஜனநாயகத்திலும்
சில அறைகளை வைத்திருக்கின்றான்.
ஒரு அறையின்
முகத்தையோ
நிர்வாணத்தையோ
இன்னொரு அறைக்கு கடத்துவதில்லை.
ஜனநாயக அறைக்குள்
கூட்டிச் செல்லாத பெண்களை
பாசிசத்தின் அறையின் சந்திக்கின்றான்.
அவனிடம் இப்போது
அவனுக்கென்று ஆன்மீக அறைகளிருப்பது தெரிகிறது.
வன்முறைக் கென்று
பிரத்யேக அறை இருக்கிறது
எல்லா அறைகளும்
சுரங்கப் பாதைகளோடு இணைக்கப்பட்டிருக்கிறது.
ஒரு அறையிலிருந்து
இன்னொரு அறைக்கு
விநாடிக்கும் குறைவான நேரத்தில் பயணிக்கின்றான்.
ஆனாலும் மக்களை
மரங்களடர்ந்த பூங்காவில்
எல்லோரும் வேடிக்கை பார்க்க
எளிமையான தோற்றத்தில்
அறையேதும் இல்லாதவன் போல் சந்திக்கின்றான்.
நவீன அரசியல் பாகன்
அரசியல் யானையின்
பாகனைச் சந்தித்தேன்.
யானையின் காலிடப்பட்ட சங்கிலியை
கழுத்தில் மாட்டியிருந்தான்.
யானையை பராமரிப்பது
கடினமாக இல்லையாவென்று கேட்டேன்.
சாதியெனும் யானையை
ரகசியமாய்
பராமரித்த பழக்கமிருந்ததாக சொன்னான்.
சாதி யானைகளின் உணவும்
அரசியல் யானைகளின் உணவும் வேறுவேறானவை.
அவனுடைய வீட்டைச் சுற்றியிருந்த
ஒவ்வொரு மரத்திலும்
ஏதோவொரு மிருகம் கட்டப்பட்டிருந்தது.
அவனுடைய அறிக்கைகளால்
பின்னப்பட்ட காகிதப்புலி
ஒரு மரத்தை சுற்றி வந்தது.
ஆசையோடு வளர்க்கும்
மண் குதிரைகள்
கோட்டையை சுற்றி வலம் வருகின்றன.
அவன் வளர்க்கும்
கலாச்சார தொட்டிகளில்
மீன்கள்
காதலர் தினம் கொண்டாடுவதில்லை.
அவனை யானைப் பாகனென்று
யராவது அழைத்தால்
கூட்டத்தோடு வந்து மறியல் செய்வான்.
அவனிடம்
ரத்தம் குடிக்கும் வௌவால்களிருக்கின்றன.
திரும்பி வந்தடையும்
புறாக்களிருக்கின்றன.
பழைய சரித்திரம்
தெரியாதென்பதால்
அவன் அரசியல் புத்தனாக புலப்படுகிறான்
அவனை குற்றம் சொல்வதில்லை.
அரசியல் பூதங்களை ஆளுகிறவர்கள்
அரசியல் நரிகளை பராமரிக்கிறவர்கள்
அரசியல் கடவுளுக்கு பூஜையிடுபவர்கள்
அரசியல் கடமையே கடைந்தவர்களுக்கிடையில்
இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றான்.
இவனை பின் தொடர்ந்து
ஒரு உலகம் வந்துக் கொண்டிருக்கிறது
கடவுள்கள் எச்சில் படுத்தாத உலகம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|