10X8 அளவுள்ள என் வசிப்பறையுள்ளிருந்து அருள்குமார் .
10X8 அளவுள்ள என் வசிப்பறையுள்ளிருக்கிறது
உலகாதிசயாமொன்றும் என் குழந்தைக்கென
புனையப்பட்டிருந்த காற்சோரும் தூரங்களும்
மற்றும் சில விலங்குகளும்.
குழந்தையை தோளில் சாய்த்து
மின்மினிகள் குறுக்கிடாத தூரங்களில் பரவுமென்
காலடிச்சத்தம் தூரத்தில்
குரைக்கச் செய்கிறது உறங்காத நாய்களை.
இளஞ்சிவப்பு நிறத்திலொளிர்ந்த
உலகாதிசயத்தின் கீழ் தொய்ந்த கணம்
மூர்க்கத் தாக்குதலொன்றை பிரயோகித்து
அவ்வுலகாதிசயத்தை பொடிந்து போகச் செய்கிறதென்
குழந்தை.
சற்றும் சளைக்காது பிளிறாத யானையொன்றின்
தலையை யொடித்ததோடு
வனம் புகாத மான்களையும்
வானமேறாத பறவைகளையும்
தொடர்ந்திம்சித்து அறையெங்கும்
பிணங்களாய் குவிக்கிறது.
பேரிரைச்சலோடு வந்த விமானமொன்றையும்
புரட்டிப் போட்டு மூச்சிறைக்கிறது.
அதன் மூர்க்கத்தை கட்டுக்குள்ளாக்குமென் முயற்சியாய்
அதனைப் போலவேயுள்ள குழந்தையொன்றை
நீட்ட சாந்தப்பட்டதாய் இமைக்காத அக்குழந்தையைப்
பற்றி உற்று உற்று நோக்கியபடி தன்மார்போடு
பத்திரப்படுத்துகிறது.
அதன் தலைக்கு மேலே இரத்தம் சொட்டச் சொட்ட
அறுக்கப்பட்ட மனிதத் தலையொன்றை
புவியெங்கும் காட்டியபடி உக்கிரம் தாளாது
நர்த்தனமாடிக் கொண்டிருந்தாள் காளி.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|