Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஏப்ரல் - ஜூன் 2009

தொள்ளாயிரம் சரிகளும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான காயங்களும்
தமயந்தி

எந்நாளும் கடவுளாம் உம்மை நினைத்துப் பெருமை கொண்டடோம்

என்றென்றும் உமது பெயருக்கு நன்றி செலுத்தி வந்தோம்

ஆயினும் இப்போது நீர் எங்களை ஒதுக்கித் தள்ளி விட்டீர். இழிவு படுத்திவிட்டீர்

எங்கள் படைகளுடன் நீர் செல்லாதிருக்கின்றீர்

எங்கள் பகைவருக்கு நாங்கள் புறங்காட்டி ஓடும்படி செய்தீர்

எங்களைப் பகைப்போர் எங்களைக் கொள்ளையிட்டனர்

உணவுக்காக வெட்டப்படும் ஆடுகளைப்போல் எங்களை ஆக்கி விட்டீர்

வேற்றினத்தாரிடையே எங்களைச் சிதறியோடச் செய்தீர்

நீர் உம் மக்களை அற்ப விலைக்கு விற்று விட்டீர்

அவர்கள் மதிப்பை மிகவும் குறைத்து விட்டீர்

எங்களை அடுத்து வாழ்வோரின் பழிப்புக்கு எங்களை ஆளாக்கினீர்

எங்கள் சுற்றுப்புறத்தாரின் ஏளனத்துக்கும் இகழ்ச்சிக்கும் உள்ளாக்கினீர்

வேற்றினத்தாரிடையே எங்களை ஒரு பழிச்சொல்லாக்கினீர்

ஏனைய மக்கள் எங்களைப் பார்த்து தலையசைத்து நகைக்கின்றனர்

(திருப்பாடல்கள்; 44: 8-14)

சித்திரையைச் சுட்டெரிக்கும் கத்திரிவெய்யிலில்

கெட்டில்; பெரியமுனங்கின் கரும்பாறைகள்

கொல்லன்பட்டறை அடுப்பாய் கொதித்துக் கிடக்கும்



சொந்தமாயரு வள்ளம் வைத்திருக்க வக்கற்றதோர் கடலவன்

அலைவாய்க் கரையில் இறங்கிப் பட்டியிழுத்து

முனங்கில் கடிப்புத் தட்டி துடிப்பானதை பறியெடுத்துப்போக

சீண்டவோர் காகம்கூட இல்லாத சாபக்கேடாய்

சாதாளைகளும் காரற்குஞ்சுகளும் முனங்குப்பாறையில் பொரிந்து கிடக்கும்



எனது மண்டையோட்டினுள் கிடக்கும் தேய்ந்துபோன மூளையுமதுபோல்

காரல்கருவாடாய் காய்ந்து கனக்கும்

மூக்குத்துவாரங்களுள் மூளைப்புழுதி மணக்கும் ஆயினும்

என்னுடல்மீது எண்ணையை ஊற்றி கொளுத்துமளவிற்கு

எந்தச் சலவையும் இன்னமும் எனது மண்டையை

ஆளுமை கொள்ளவில்லை என்பது மட்டும் நிசம்



வன்னியில் இருபகுதியும் போர் பொருத அவர்களும் இவர் களும் சொற்பம் சொற்பமாய் சாகிறார்கள். இருபகுதிகளுக் குமிடையில் மாட்டிக்கொண்ட எனதூர்ச் சனங்களோ அவர் களையுமிவர்களையும்விட அதிகமாகவே சாகிறார்கள். என்ன நடக்கிறது, ஏன் சாகிறோம் என்பதெதுவும் தெரியாமலே சிதறிச் சாகிறார்கள்.

இந்த உத்தரிப்பு ஸ்தலத்துக்குள் எப்படி மேய்த்து வரப்பட் டார்கள் என்ற சூட்சுமத்தைக்கூட இந்த நொடிவரை அறிந்தி லார். யாழ்ப்பாண வெளியேற்றத்தின் போதிலிருந்தே இது இவர்களுக்குப் புரியாத புதிர் மட்டுமல்ல இவர்களது வாழ்வுக்கும் தொழிலுக்கும் எந்தக் காலத்திலும் சம்பந்த மில்லாத நிலமும்தான்.

சிங்கமும் புலியும் இவர்களுக்கான வாழ்வை வைத்திருக்கி றார்களோ இல்லையோ, ஆனால் உப்புச்சோளகத்தில் கறுப் பும் சிவப்புமாய் கொப்பு மொய்த்துக்கிடக்கும் ஈச்சம் பழங்களைப்போல் மடிநிறைய மரணங்களை வைத்திருந்து நேரகாலபேதமின்றி அள்ளியள்ளியே வழங்குகிறார்கள்.

'ஐயோ என் சனமே! இந்த ஈனக்கொலைச்சாதியால் கொத்தும் குலையுமாய் கொல்லப்படவோ கொண்டு செல்லப்பட்டீர்?' என ஒவ்வொரு கணமும் மனம் ஒப்பாரி யிட்டுக் கொண்டிருக்கும்.

வன்னிக்காட்டில் மிருகங்களின் மத்தியில் சாவைச் சுமந்த லையும் என் சனங்களோடு கொஞ்சம் என்னைப் பேச விடுங்கள். நாளை அவர்கள் இருக்க மாட்டார்கள் என்றென் புத்தி சொல்கிறது. அதற்குள் அவர்களது நினைவுகளோடு சற்று நான் பேசியாக வேண்டும்.!

*

அல்வீன். நல்ல வடிவான கருப்பி. என்ர அம்மாவின்ர ஒண்டுவிட்ட அண்ணன் யோசையின்ர மூணாவது மகள். எனக்கு மச்சாள். என்னைவிட ரெண்டு வயசு மூத்தவள். ஆனால் என்னோடதான் அஞ்சாம் வகுப்பு மட்டும் படிச்சுப் போட்டு பாதியிலயே நிண்டிட்டாள். என்னைவிட கெட்டிக் காரியெண்டுஞ் சொல்லலாம். எண்டாலும் அவள் பாதி யிலயே பள்ளியால நிண்டிட்டாள். ஏனென்டு கேட்டால் பேரன் பேத்தி வயசானதுகளாம், தனிய ஒரு கொட்டிலில இருக்குதுகளாம், அதுகளுக்குத் தோதா உதவிக்கிருக்கச் சொல்லி யோசைமாமா அவளப் பள்ளிக்கூடத்தால மறிச்சுப் போட்டார். என்னில சரியான நேசமானவள். பவுண் மச்சான், பவுண் மச்சான் எண்டு அவள் என்னக் கூப்பிடேக்க யெல்லாம் எனக்கெண்டால் சரியான வெக்கமாயுங் கூச்சமா யிமிருக்கும். அதோட பயமாயுங் கிடக்கும். ஏனெண்டால் ஈஸ்வரராசன், எட்மன்ட் எண்டு ரெண்டு வளந்த மாடுகளும் எங்களோட படிச்சவங்கள். ரெண்டும் சரியான அம்மண முத்தையாக்கள். 'மச்சான், மச்சான்' எண்டு இவள் என்னக் கூப்பிடுகிறதக் கவனிச்சாங்களெண்டால் அவ்வளவுதான். என்னையும் அல்வீனையும் ஒண்டாக்கிப் பட்டந் தெரிப்பாங்கள்.

இதில ஈஸ்வரராசன் கொஞ்சம் பரவாயில்ல. தூசணம் சொல்லுவானே தவிர குரங்கு வேலயள் காட்டமாட்டான். எட்மன்ட் பொல்லாதவன்.அடிப்பான்.கண்டதுக்கெல்லாம் சும்மா நொட்டுவான். சுவருகளிலயெல்லாம் கரியால, செங்கட்டியால தூசணம் எழுதி வைப்பான். மாஸ்ரர்மார் உடனயே கண்டுபுடிச்சுப் போடுவினம். செவுள் அடியும் வாங்குவான். பள்ளிக்கூடம் முழுக்க இவங்கள் ரெண்டு பேற்ற ஆட்சிதான்.

எங்கட பள்ளிக்கூடத்துக்கு வாற மாஸ்ரர் டீச்சர்மார் எங்கட கிணத்துத் தண்ணி குடிக்க மாட்டினம். இவயளுக்கு தண்ணி யெடுத்துக்கொண்டு வாறதுக்கெண்டே மூண்டு சாராயப் போத்தல் பள்ளிக்கூடத்தில இருக்கு. ஒண்டரக் கட்டைக்கு நடந்துபோய் பறையன்கேணி ஒழுங்கைக்குள்ள இருக்கிற ஆசைமுத்து எண்ட வெள்ளாளவீட்டுப் பைப்பிலதான் தண்ணி எடுத்துக்கொண்டு வரவேணும். இவங்கள் ரெண்டு பேருந்தான் அதுக்கும் போவாங்கள். மாரிகாலத்தில தண்ணிக்குப் போயிற்று வாற வழியில எல்லாப் போத்திலு களிலயும் ரெண்டு ரெண்டு மிடறு தண்ணி குடிச்சுப் போட்டு, வழியில தொட்டந் தொட்டமாக் கிடக்கிற மழத் தண்ணியில கையால தெளிச்சு அள்ளி போத்தலுகளுக்க விட்டுக்கொண்டு வருவாங்கள். சிலவேளயில எச்சில் துப்பிக்கொண்டு வருவாங்கள். இவங்கள் தண்ணி யெடுத்துக்கொண்டு வாறதுக்குள்ள சமயபாடம் முடிஞ்சு, தமிழும் பாதி முடிஞ்சு போயிரும்.

எட்மன்ட் எல்லாப் பாடத்துக்கும் அடி வாங்குவான். விழு கிற அடி நோகாமலிருக்கிறதுக்காக ஒவ்வொருநாளும் காற் சட்டைக்குமேல இன்னொரு காற்சட்டை போட்டுக் கொண்டு வருவான். இன்ரேவல்ல கிளித்தட்டு விளையா டேக்க இவங்கள ஒருத்தரும் அவுட்டாக்கக் கூடாது. அப்பிடி ஆராவது அவுட்டாக்கினால் அடிப்பாங்கள். சரியான அட்டூழியம் புடிச்சவங்கள்.

எனக்கு வெல்லக்கட்டியெண்டால் சரியான விருப்பம். அப்பயெல்லாம் எங்கட இடங்களில இந்த அச்சுவெல்லம் லேசில கிடைக்காது. இது இந்தியாவிலயிருந்து வல் வெட்டித்துறையாற்ற கள்ளக்கடத்தல் போட்டுகளிலதான் வரும். இடைக்கிடை யோசை மாமா வல்வெட்டித் துறை ஆரோய்க்கியசாமியின்ர போட்டில ஓட்டியாப் போய் வருவேர். யோசைமாமா வீட்டில எந்த நேரமும் அச்சு வெல்லம் இருக்கும். எனக்கு வெல்லக்கட்டியெண்டால் விருப்பமெண்டு தெரிஞ்சு பள்ளிக்கூடத்துக்கு வரேக்க அல்வீன் மச்சாள் நெடுகக் கொண்டு வருவாள். வெல்லம் மட்டுமில்ல ஒவொரு நாளும் ஏதெண்டாலும் கள்ளத்தீன் கொண்டுதான் வருவாள். ஊர்நெல்லிக்காய், கறுவாப் பட்டை, மாங்காய், இலந்தப்பழம், பால்ரொட்டி... இப்பிடி. இன்ரேவல் நேரத்தில ஈஸ்வரராசனுக்கும் எட்மன்ட்டுக்கும் தெரியாமல் ரெண்டுபேரும் பங்கு போட்டுத் தின்னுவம். அல்வீன். நல்ல வடிவான கருப்பி.

ஒருநாள் ராஜகுமாரி கூத்து ஒத்திகய எங்கட அண்ணாவியார் வாசகசாலைக்குள்ள நடத்திக் கொண்டிருந்தேர். அதில பொம்பிளத்தளபதி வேசம் எனக்கு. ஊரை விட்டு நான் வெளிக்கிடுகிறவரைக்கும் எனக்குப் பொம்பிள வேசம் தான் கிடைக்கிறது. ஒத்திக முடிய இருட்டாகீற்று. இண்டைக்குவர கரண்ட் இல்லாத ஊர்தான் எங்கட ஊர். காப்போரெத்தினம் எலக்சனுக்காக ரெண்டு கரண்டுக் கட்டயக் கொண்டு வந்து ஊர் வாசலில நட்டதோட சரி. அவருக்கு வோட் பண்ணயில்லயெண்டதுக்காக இண்டைக்கு வரைக்கும் கரண்ட் கணைக்சனே இல்ல.

தமிழரசுக் கட்சிக்கோ இல்லாட்டிக்கு கூட்டணிக்கோ இந்த ஊரச்சனம் வோட்டுப்போட்டு நானறியன். ஏனெண்டு சொன்னால் இவங்கள் வந்து 'கிழக்கு மேற்கு, சூரியன் உதயம், ரெத்தத்திலகம் தனிராச்சியம்...' இப்பிடிச் சொல் லுற ஒரு தாலியறயும்; சனத்துக்கு விளங்கிறதுமில்ல, தேவயுமில்ல. கடலையும் கரையயும் விட்டா அதுகளுக்கு வேறையரு புருவத்தோரியும் தெரியாது. இதெல்லாந் தேவயுமில்ல, என்ன சவத்துக்கு.. எண்ட எண்ணம் சனத்துக்கு. தங்களுக்கு வோட் போடுறதில்லயெண்டு இந்தக் கிராமத்த கூட்டணிக்காரர் எவ்வளவு பழி வாங்கினாங்க ளெண்டது ஊர்ச்சனம் எல்லாத்துக்கும் தெரியும். குடி தண்ணிக்கே சனத்தத் தவிக்க விட்டவங்கள். உப்புத் தண்ணியக் குடிச்சுத்தான் முழுக் கிராமமுமே உயிர் வாழ்ந்ததுகள் எண்டால் நம்ப மாட்டீங்க.

வாசகசாலயிலயிருந்து எங்கட வீடு கொஞ்சம் தூரம். அல்வீன் வீடு பக்கத்தில. அவள் எந்த ஏமஞ்சாமமெண்டா லும் பயப்பிடமாட்டாள். தனியத் திரிவாள். பேய்க்குப் பயப் பிடயே மாட்டாள். அல்வீன் வீட்டப் போனால் அவளயும் துணைக்குக் கூட்டிக்கொண்டு எங்கட வீட்ட போகல்லாம் எண்ட ஐடியாவில அங்க போக வெளிக்கிட்டன். கச இருட்டு. வாசகசாலயிலயிருந்து அல்வீன் வீட்ட சரியா லெக்குப்பாத்து மண்டேக்குள்ள பதிச்சுப்போட்டு, கண்ண இறுக்கி மூடிக்கொண்டு ஓடினன். லெக்கு கொஞ்சம் கணக்குப் பிசகி டேவிற் பெரியையா வீட்டு முள்ளுக்கம்பி வேலிக்குள்ள நேர போய்ச் சொருகீற்றன்.

முள்முடி அறைஞ்ச யேசுநாதர் மாதிரி முகமெல்லாம் ஒரே ரெத்தக்காடு. கைவிளக்கு வெளிச்சத்தில என்ர கோலத்தப் பாத்திற்று அல்வீன் கத்த வெளிக்கிட்டாள்&. சரியாத்தான் பதகளிச்சுப் போயிட்டாள். அயலட்டமெல்லாங் கூடிப் போச்சு. அப்பதான் தெரிஞ்சுகொண்டன் அல்வீன் மச்சாள் என்னில சரியான பாசமெண்டு. அவள் அண்டைக்குக் கத்தின கத்தும் துடிச்ச துடிப்பும் இப்பவும் என்ர மண்டேக்குள்ள வலிச்சுக் கொண்டுதான் கிடக்கு.

**

ஆண்டு:1980 , மாதம்: மார்கழி திகதி: 3 ,கிழமை: புதன் , நேரம்: 7.15 காலை. காலநிலை: மெல்லிய மப்புமந்தாரம். மழையின் அறிகுறியாய் வாயூறியபடி.



களங்கண்டி வலையிழுக்கப்போன ஐயா கடலாலை வந்திருவேர். வாறதுக்குள்ள புட்டவிச்சு கறியையுங் கூட்டி முடிச்சிட்டால் ஐயா கடலால வந்தோண்ண அடுப்பில வச்சிரலாம். ஐயா களங்கண்டியிழுத்து துடிக்கத்துடிக்கக் கொண்டுவாற குஞ்சுக் கணவாயில எடுத்து மைக்கூடும் போட்டு அம்மா அல்லது ஆச்சி புளியவியல் வச்சினமெண் டால் ஒரு தூக்குத் தூக்கி சிரசில அடிக்கும்.

'பவளம் மாமாவின்ர கடைக்கு ஓடிப்போய் தேங்காய், வெங்காயம், செத்தல்மிளகாய், புளி வாங்கிக்கொண்டு கெதியா ஓடிவா ராசா' எண்டு அஞ்சுரூவாயத் தந்து அம்மா அனுப்பி வச்சா. சட்டெண்டு மூளையில ஒரு பொறி தட்டிச்சுது. சரியா ரெண்டுவருசக் கனவு.

இவ்வளவுகாலமும் வீட்டுக்குத் தெரியாமல் இயக்கத்தின்ர கல்விவட்டத்துக்குப் போய் வந்து கொண்டி ருந்த நான் வீட்டவிட்டு வெளிக்கிட்டுப்போற துக்கு நல்லவளம் பாத்துக் கொண்டிருந்தன். 'இது தான் தரணம் வெளிக் கிடடா சிங்கா' எண்டு அம்மா தந்த அஞ்சு ரூவா என்ர கையிலயிருந்து கரண்ட் அடிக்கிற மாதிரி நல்லொரு மணம் மணந்து சுரண்டிச் சுரண்டிச் சிக்னல் குடுத் துது. அதோட மழ வாற துக்கு அறிகுறியா புழுதியும் நாசிக்குள்ள அடிச்சுது. தேக மும் ஒருமாதிரியாக் குளுந்துகொண்டு வந்துது. அதொரு பயமில்லாப் பதட்டமாயும், நல்லாயுமிருந்துது. மசிரவிட் டான் சிங்கன். தங்கச்சியின்ர மொனிட்டர் கொப்பி யில ஒரு ஒற்றயக் கிழிச்சு 'நான் நாட்டுக்கு சேவை செய்யப் போகி றேன் தேடவேண்டாம்' எண்டமாதிரித்தான் ஏதோ சரியா ஞாபகமில்ல, எழுதி கொடியில கிடந்த ஐயாவின்ர சேட்டுப் பையுக்குள்ள வச்சுப் போட்டு உடுத்தியிருந்த சாரத்தோ டயே 180ம் நம்பர் 8மணி பஸ் எடுத்து யாழ்ப்பாணம் போனனான்தான், (அப்ப எனக்கு 18வயசும், 7மாசமும், 24 நாளும், 9மணித் தியாலமும் முடிஞ்சிருந்துது. எண்ட மட்டில நான் குழந்தப் போராளியில சேர்த்தியில்ல )

இயக்கத்துக்கு நான் ஓடிப்போய் 56நாளுக்குப் பிறகிட்டு 28.01.1981 புதன்கிழம காலம்பிற பத்தேமுக்கால்போல ரெண்டு தோழர்மாரயுங் கூட்டிக்கொண்டு எங்கட கிராமத் துக்குள்ள வந்துகொண்டிருக்கிறன். லவுட்ஸ்பீக்கர் பாடிக் கேட்டுது. நாங்கள் வாறது தெரிஞ்சு கொஞ்சச் சனம் எங்களத் தேடி ஓடி வந்திச்சினம். தவமண்ணன், ரெத்தினமண்ணன், துரையண்ணன், பூவானத்தான், சில்வேஸ்ரர் சின்னையா, கிறிஸ்தோப்பு மாமா, முத்துக்கிளி மச்சாள், ராசமணியக்கா, தங்கச்சி யூடித்... இப்பிடிக் கனக்கச் சனம். எல்லாம் சொந்தக் காரச்சனம்தான். என்ர கிராமத்தில இருக்கிற எல்லாச் சனமுமே எப்பிடித்தான் சுத்திச் சுத்திப் பாத்தாலும் எனக்கு ரெத்த உருத்துகள்தான்.

குய்யோமுறையோ எண்டு கத்திக்கொண்டு ஓடிவந்த சனங் கள் என்னையும் ரெண்டு தோழர்மாரயுந் தூக்கித் தலைக்கு மேல வச்சு சுற்றுப்பிரகாரமாக யோசை மாமாவின்ர வீட்டுப் பக்கம் கொண்டு போச்சினம். ஊர்ச்சனம் முழுக்க யோசை மாமா வீட்டைதான். யோசைமாமா வீடு பந்தல் போட்டு வடிவாச் சோடிச்சிருந்துது.

அல்வீனுக்கு கலியாணம். இருபது வயசிலயே அவளுக்குக் கலியாணம் முடிஞ்சுப்போச்சு. எங்கட ஊரப்பொறுத்த மட்டில பொம்பிளைக்கு இருபது வயசு பக்குவத்தோதான வயசுதான்.

முந்தியெல்லாம் அப்பிடியில்ல. பன்ரெண்டு பதின்மூணு வயசிலயே கலியாணங் கட்டி வச்சிருவினம். ஆம்பிளப் பிள்ளயளண்டால் பதினாறு பதினேழு வயசே போதுமெண் டிருந்துது. ஏனெண்டால் அந்த வயசிலயே அவர் ஒரு முழுத் தொழிலாளியாப் போயிருவேர். இப்ப சரியான மாற்றம். சின்ன வயசிலயே கடல்தொழிலுக்கு அனுப்பாமல் தங்கட பிள்ளயளயும் படிப்பிக்க வேணுமெண்ட கொள்க சனத்துக்கு வந்திட்டுது. இப்ப இருபது இருபத்தஞ்சு வயசு வந்தேப்பிறகிட்டுத்தான் கலியாணம்.

பந்தலுக்குள்ள நான் போகமுதலே கலியாணப் பொம்பிள, அவளரு தேவதை மாதிரியே அச்சொட்டாய் ஓடிவந்தாள். ஆக்களுக்கு முன்னாலயே கட்டிப்புடிச்சுக் கொஞ்சினாள். 'என்ர ஆசமச்சான், என்ர பவுண் மச்சான், நீ கட்டாயம் என்ர கலியாணத்துக்கு வருவாயெண்டு எனக்குத் தெரியுமடா' எண்டு அவள் சொல்லிக்கொண்டே கண்ணெல்லாங் கலங்கிப்போனாள். எனக்கும் சரியான சங்கடமாயிருந்துது. கால்ப் பாதங்கள் ரெண்டும் வேர்த்துக் கசிஞ்சு பாட்டாச் செருப்பு வழுக்கிறமாதிரி வந்திற்றுது. கலியாணச்சாப்பாடு. நினைச்சால் இப்பவும் வாயூறுது. நல்ல கொழுத்த மாட்டி றைச்சிக்கறி. அல்வீன் மச்சாள் என்னயுந் தோழர்களயும் பக்கத்தில இருந்து விழுந்து விழுந்து கவனிச்சாள்.

இதை எழுதிறபோதுதான் கிட்டடியில நடந்த ஒரு விசயம் நினைவுக்கு வருகுது. தோழர் ஒருத்தரோட ஒருநாள் கதைச்சுக்கெண்டிருக்கேக்க சொன்னன் 'எங்கட கிராமத் தில கலியாணவீடுகளில கட்டாயம் மாடு வெட்டுவம் தோழர்' எண்டு. அவரால நம்பவே ஏலாமல்ப் போச்சு. அவருக்கெண்டால் பெரிய ஆச்சரியமாத்தான் இருந்துது.

இப்பவுந்தான் வெளிநாடு வந்ததுக்குப் பிறகும் எங்கட ஊர்ச்சனங்களின்ர கலியாணங் கொண்டாட்டங்களில கட் டாயம் மாட்டுக்கறி சமைப்பம். இங்க வெளிநாடு வந்ததில யிருந்து வேற ஊராக்களின்ர கனக்கக் கலியாணங்களுக்குப் போயிருக்கிறன். வெறும் மரக்கறிதான். இங்க இருக்கிற தமிழரும் சொல்லுகினம் 'சீ... கொண்டாட்டங்களுக்கு மாட்டுக்கறியா...'எண்டு. எனக்கு ஒரே சிரிப்பாத்தான் வரும். இங்க வெள்ளயளின்ர கலியாணவீடுகளுக்குப் போற எங்கடயாக்கள், அவன் அரையவியலாக் குடுக்கிற மாட்டுச் சீவல அள்ளிவச்சு கழுத்துமுட்டக் கட்டுவினம். ஆனால் வெளியால வந்து ஒண்டுந் தெரியாத ஆக்கள் மாதிரி 'சீ... மாட்டுக்கறியா...?' எண்டு தாளம் போடுவினம். அதென் னவோ எனக்குத் தெரியாது மாட்டுக்கறி இல்லையெண் டால் அது கலியாணம் மாதிரியே எனக்குப் படுகிறதில்ல.

*

இன்று 27.02.2009.

'அவர்களின் வாய் பேசுவதும், நா உரைப்பதும் பாவமே. அவர்கள் தற்பெருமை அவர்களைச் சிக்க வைப்பதாக. அவர்கள் சபிக்கின்றனர். அடுக்கடுக்காய் பொய் பேசுகின் றனர்.' (திருப்பாடல்கள்; 59:12)

உக்கிரமடைகின்றது வன்னிப்போர்.

முன்னேற முடியாமல் சிங்களப்படைகள் முடக்கம்.

3 நாட்களில் தொள்ளாயிரம் படையினர் பலி.

இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காயம்.

(தமிழ்வின்- வெள்ளிக்கிழமை, 27பெப்ரவரி 2009, 03:47.55பி.எம்)

போன்ற செய்திகளையும், இன்னும் இதேபோல் இன்று இங்கெல்லாம் மனித மூளைகளை மண்டையோட்டினுள் ளிருந்து நாயிழுவை பேயிழுவையாக இழுத்து வெளியில் போட்டு மேய்ந்து கொண்டிருக்கும் இணையத் தளங்கள் சிலவற்றோடும் மாரடித்தோய்ந்து, பிடரிவலி தொடங்கு வதையுணர்ந்து எழுந்திருக்க எண்ணிய போதுதான்; அந்தக் காட்சி பார்வையில் கிடைத்தது.

கைதேர்ந்த ஒளிப்பதிவாளரின் கேமராமொழி கச்சிதமாயும், மிக நிதானமாயுமிருந்தது. உக்கிரப் போர் நிலம் என்கிறார் களே...? மக்கள் அவலத்தோடு கொந்தளிக்கிறார்கள் என்கி றார்களே...? பதுங்குகுழிகளை விட்டு வெளியே வந்தால் மக்கள் கொத்துக்கொத்தாய் கொல்லப்படுகிறார்கள் என்கி றார்களே...?, படம் பிடிப்போர் மட்டும் எப்படி நிதானமாய் தங்கள் பணியில் முனைப்போடு இயங்குகிறார்கள்? ஒரு கேமராக்காரனாய், ஒரு போர்ப் படப்பிடிப்பாளனாய் இருந்துகூட யோசித்துப் பார்க்கிறேன். முடியவில்லை. குஞ்சுகுருமான்கள், கிழடுகட்டைகள் முதற்கொண்டு எலும் பும் தோலுமான மக்கள், கும்பல் கும்பலாய் பிணங் களை விலத்தி குடி தண்ணீருக்கும், ஒரு குவளை கஞ்சிக்கும் ஆலாய்ப் பறக்கிறார்கள், ஆனால் இந்த களப்படப்பிடிப்பா ளர்கள் எந்த பலத்தின் பின்னணியில் நின்று சூட்டிங் நடத்து கிறார்கள் என்ற கேள்வி எழுமிடத்து: கொழுப்பெடுத்து, கொலைத் தினவெடுத்துத் திரிந்துவிட்டு, பஞ்சப்பட்ட சனங்களை பலியாடுகளாய் கந்தகத்தீயில் தள்ளிவிட்டு ஓடி ஒளிந்துகொண்ட தலைவனையும், தளபதிகளையும் எண்ணிக் கொல்லும் கோபம்தான் எழுகிறது.

ஊர்களில் அவர்கள் ஒளிந்து காத்திருக்கின்றனர்.

சூதறியாதவர்களை மறைவான இடங்களில் கொலை செய்கின்றனர்.

திக்கற்றவர்களைப் பிடிப்பதிலேயே அவர்கள் கண்ணாயிருக்கின்றனர்.

குகையிலிருக்கும் சிங்கம்போல் அவர்கள் மறைவில் பதுங்கியிருக்கின்றனர்.

எளியோரைப் பிடிப்பதற்காகவே அவர்கள் பதுங்கியிருக்கின்றனர்.

தம் வலையில் சிக்க வைத்து இழுத்துச் செல்கின்றனர்.

அவர்கள் எளியோரை நலிவுறச் செய்து நசுக்குகின்றனர்.

அவர்களது கொடிய வலிமையால் ஏழைகள் வீழ்த்தப் படுகின்றனர். (திருப்பாடல்கள் 10: 8-10)

Title: The Life and distress of the displaced people in Mullaitivu district.

Date filmed: 24.02.2009, Date uploaded: 25.02.2009

கேமரா ஊர்ந்து செல்கிறது.

ஒரு தற்காலிக கொட்டகை போடப்பட்ட இடத்தில் கஞ்சி கொடுக்கிறார்கள். சிறுவர்கள், முதியவர்கள், பெண்க ளென்று பலநாள் பட்டினியில் வாடிப்போன உடலங்களாய் மக்கள் கூட்டம் ஒரு குவளை கஞ்சிக்காக கையில் கிடைத்த தட்டுகள், கோப்பைகள், செம்பு, குவளை என்று ஆளுக் கொன்றை ஏந்திப் பெறுகிறார்கள். அந்த மக்களின் முகங் களைத் தேடி இடையிடையே காமெரா குளோஸ்-அப்பில் செல்லும்போது முகங்களால் வழிந்தோடும் அவமானங் களையும் துடைத்துக்கொண்டு எஞ்சியிருக்கும் குழந்தை குட்டிகளின் உயிர்களைக் காத்தால் போதும் என்பதாய் ஒரு குவளை கஞ்சியைக் கையேந்திச் செல்கிறார்கள்.

கட்.

'பால்குடி மறவாத மழலைகளின் நாவு தாகத்தால் அண்ணத்தில் ஒட்டிக் கொள்ளும்!

பச்சிளம் குழந்தைகள் கெஞ்சுகின்ற உணவுதனை அளித்திடுவார் யாருமிலர்!' (புலம்பல் 4:4)

68,70 வயது மதிக்கத்தக்க, ஒட்டியுலர்ந்த, ஒரு துணிக்கைய ளவேயான உயிரைச் சுமந்த ஒரு பெண்ணிடம் கேமரா செல் கிறது. நிலத்தில் குந்தியிருந்தபடியே ஒப்பாரியிட்டு அழு கிறாள். அந்த முதியவளின் ஒப்பாரிகளுக்கிடையில் கொட்டுண்டு சிதறும் வார்த்தைகளையும், அவளையும் ஆடாமல் அசையாமல் கேமரா நிதானமாய் பதிப்பித்துத் தருகிறது.

'மருமகனுக்குப் பேர் செல்லத்துரை. அவருக்கு ஒரே வருத்த மும் காச்சலும்... சுருண்டு கிடந்தவர். என்ர பேத்தி, பன்ரெண்டு வயசு... அதுகளுக்குத் தண்ணி எடுப்பமெண்டு வந்தன்... தண்ணிக்குப்போனா தண்ணி தர மாட்டனெண் டுட்டுதுகள்.. அதோட இங்க நல்ல தண்ணிக் கிணறிருக்காம் எண்டு சொல்லிச்சுதுகள்..... ஓட்டவாளியால உரஞ்சி உரஞ்சிக் கொஞ்சத் தண்ணி..... ஒரு வாளிக்க நிறயக் கொண் ணந்தன்.. ஒரு கடயில கொண்ணந்து வச்சிற்று... என்னால தாங்கேலாமல்ப் போச்சு நெஞ்சுக்குத்து... இந்தத் தேச மெல்லாம் போனன்.... தெரியாது எண்டிட்டினம்.... பேந்து அங்கால இருக்காமெண்டு போக.... அதுக்க கடல்..... ஐயோ...கடல் கடல் கடல்......'

'அம்மா அவயளக் காணயில்லயா....?' (மிகத் தெளிவான ஒலிப்பதிவில் இது ஒரு உசாரான இளம் பெண் குரல்)

'இல்லே... என்ர புள்ளயளக் காணே...ன். இந்தத் தேசமெல் லாந் திரியிறேன்... ஒரு கொட்டில் மாதிரி தறப்பாள் போட்டு...செல்லடிக்கு பயத்தில பங்கர் வெட்ட ஏலா தெண்டு... மருமகனுங் குந்திக்கொண்டிருக்கிறேர்... தண்ணி விடாயில வந்தனான்... சமைக்கவுமில்ல, ராத்திரியும் சாப் பாடில்ல, ஒண்டுமேயில்ல அரிசி சாமான் ஒண்டுமேயில்ல ஐயோ.... என்ர பிள்ளயளுக்கு தண்ணி குடுப்பார் ஆருமில் லயே...அந்தக் குஞ்சு... சின்னப் பேரப் பிள்ளக் குஞ்சும் அதுக்க.... ஐயோ.... எல்லாரட்டயுங் கேட்டுட்டே..ன்....'

'உங்கட சொந்தக்காரர் ஒருத்தரயுங் காணயில்லயா....?' (அந்த இளம் பெண்). 'ஐயோ... இல்ல..., இரணடுமடுவில இருந்தே என்ர சொந்தக்காரரக் காணயில்ல.... எல்லாரும் எங்க எவ்விடமெண்டில்ல....'

.......................

வன்னிச்சண்டை தொடங்கியதிலிருந்து தினமும் ஒப்பாரி களாலும், மனித ஓலங்களாலுமே மலிந்து நிரம்பி வழிகின் றன தமிழ்த் தொலைக்காட்சிகளும், இணையத்தளங்களும். ஆனால் இன்று இந்த முதிய பெண்ணின் அவலக்குரல் எனது அடிவயிற்றை ஏதோ செய்து கொண்டிருந்தது. பிடரி நரம்பில் சுள்ளென வலித்தது. அறிமுகமான சுடுமணலின் வாசம் ஒன்று நாசித் துவாரங்களுக்கள் ஊர்ந்து சென்றது.

கேமரா தொடர்ந்து நகர்கிறது. அதே நிதானத்துடன். மேலும் பல மனிதர்களின் அல்லோலகல்லோலமான காட்சிகள்.

'எங்கள் காலடிகள் உம் வழியினின்று பிறழவில்லை.

ஆயினும் நீர் எங்களை கொடிய பாம்புகள் உள்ள இடத்தில் நொறுங்கும்படி விட்டுவிட்டீர்.

சாவின் இருள் எங்களைக் கவ்விக் கொண்டது'

(திருப்பாடல்கள்; 44:19)

மீண்டும் மீண்டும் அந்த முதுமையின் அவலமான ஒப்பாரி யும் ஓலமும் நெஞ்சைப் பிசைந்தது. இரத்த நாளங்களை விட்டு இதயத்தைத் தனியாக அறுத்தெடுத்து தரையில் போட்டது. மீண்டும் எனது மண்டைக்குள் அதே வலி.

'அவர் என் வலிமையைக் குன்றச் செய்தார்.

நான் எழ இயலாதவாறு என் தலைவர் என்னை அவர்கள் கையில் ஒப்புவித்தார்.

என் தலைவர் என்னிடமுள்ள வலியோர் அனைவரையும் அவமதித்தார்.

என் இளைஞரை அடித்து நொறுக்க அவர் எனக்கு எதிராக ஒரு கூட்டத்தை வரவழைத்தார்.' (புலம்பல் 1: 14-15)

இணையத்தளங்களை நிறுத்திவிட்டு, அறுந்து தொங்கும் நெஞ்சக்கூட்டை புகை யால் நிரப்ப ஒரு சிகரட்டை எடுத்து மூட்டிக் கொண்டேன். புகை வளையங்களும் ஒப்பாரியிட்டபடியே காற்றில் கரைந்தன.

'நாங்கள் தரைமட்டும் தாழ்ந்துவிட்டோம்.

எங்கள் உடல் மண்ணோடு ஒட்டிக்கொண்டுள்ளது'

(திருப்பாடல்கள் 44:25)

தொலைபேசி மணி. தங்கை யூடித். அழுகை விசும்பலுக்கி டையே 'அண்ணே... அல்வீன் மச்சாளப் பாத்தனி யாண்ணே....?' எனக்கேட்டாள். 'எங்கேயடி....?' என்றேன். நான் பார்த்த அதே வீடியோக் க்ளிப்பைச் சொன்னாள்.

'அதில எங்கயடி....?' கேட்டேன். 'அதில கிழவியண்டு குளறிக் கொண்டிருக்குதண்ணே..., அதுதானண்ணே....'

'விசர்க் கதை கதைக்காத. உனக்கார் சொன்னது..?'

'மன்னாரிலயிருந்து ராசுக்குஞ்சியப்பு இப்ப கொஞ்சத்துக்கு முதல்த்தான் எடுத்தவர். அவர்தானண்ணே சொன்னவர். இப்பிடித்தான் சனமெல்லாம் எலும்புந் தோலுமா இருக் காம்... எங்கட கனக்கச் சனம் எங்கெங்க இருக்குதெண்டே தெரியாதாமண்ணே. அந்தக் கவுண்டு போவானுக்கு ஒரு கொள்ளநோயும் வராதா பாலதீவு அந்தோனியாரே? அவன்ர தலயில இடி விழாதா மடுவுமாதாவே...?!' ஒரு கிழவிபோல் திட்டினாள். ஒரு குழந்தைபோல் தேம்பி அழுதாள்.

வாயில் எரிந்து கொண்டிருந்த சிகரட் ஆட்லறியாய் வெடித்துச் சிதறியது. சிதறித் தெறித்து சுவரெல்லாம் ஒட்டிக்கொண்ட என் இறைச்சித் துண்டங்களை ஒரு ஒப்பாரி வந்து கூட்டி அள்ளிக் கொண்டிருந்ததை எனது வீட்டுக்கூரையின் மீதிருந்து நான் பார்த்துக்கொண்டிருந் தேன். அது அல்வீன் மச்சாளின் ஒப்பாரி. எனது அழகிய கருப்பியின் ஒப்பாரி.

28.02.2009, நேரம்: 00:07

தொள்ளாயிரம் சரிகளும், இரண்டாயிரத்துக்கும் அதிகமான காயங்களின் சமன்பாடுகளும்.

என் வாயிலிருந்து வெடித்த ஒரு ஆட்லறியில் சுக்கல் சுக்கலாய் சிதறிப் போயின.

'வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்!

அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்!' (திருப்பாடல்கள் 46: 8-9)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com