இழந்த வார்த்தை பா.தேவேந்திரபூபதி .
எனது நடை வண்டி
நான்கு சக்கர வாகனமாக மாறிய காலத்தில்
உன்னோடு எனது முதல் பிணக்கு ஏற்பட்டது
அன்று தான் என்னிடம் சொல்லாமல் செல்லும்
முடிவையும் நீ எடுத்திருக்க வேண்டும்
நான் உனக்கான ஆடைகளை அளவிட்டு
வாங்கிக் கொண்டிருக்கும்போது
உனது புனித யாத்திரை கண்காணா
தேசத்தை கடந்து கொண்டிருக்கும்
பிறகும் நீ விரும்பியது
அந்திமக் கால இறைமை மட்டுமா
உன் பயணத்தில் நீ எடுத்துச்சென்றது
யாருடைய பிஞ்சு விரல்கள்
உருவத்தின் அமைதியின்மையே
உனது உபதேசங்களாக
அதை நான் என் வாழ்வின்
விரைவுப் பகுதி என்பேன்
நீ ஒரு சொல்லைப்போல
என்னை விட்டுச் சென்றிருக்கிறாய்
அதன் அர்த்தத்தை
நான் பேரகராதி முழுக்கத் தேடுகிறேன்
இருப்பினும் உனது கைகள் அகல் விளக்காய்
என்னை ஏந்துகின்றன.
உனது நடை வண்டி தானே நான்
நான்கு சக்கரங்களும் உன் உபதேசத்தின் வேகம்.
(அன்புத் தந்தையின் நீங்காத நினைவுகளுக்கு)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|