Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஏப்ரல் - ஜூன் 2008

மெலுஞ்சி
டி.அருள் எழிலன்
.

தலையையும் சேர்த்து இழுத்துப் போர்த்தியிருந்த சாக்கை விலக்கிவிட்டு வந்து எழுப்பியவனைப் பார்த்தான் மெலுஞ்சி. உறக்கத்தின் முனகலும் எரிச்சலும் அவனது பேச்சில் தெரிந்தது. உச்சி வெயில் ஏறியிருந்தால் அந்த சாக்கைத்தான் மெலுஞ்சி குடையாக பிடித்துப் போவான். அதுவே குளிர்காலம் என்றால் போர்த்திக்கொண்டு ஊதக்காற்றில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவும் இரவுநேரங்களில் அதை போர்வையாகவும் பயன்படுத்தினான். வந்து எழுப்பியவன் ஊர்க்கிழவன் சேத்தி இறந்துபோன செய்தியைச் சொல்லி துக்க மணியடிக்கச் சொன்னான். துட்டிச் செய்தியைச் சொல்ல ஊரெங்கும் போய் உறவுக்காரர்களுக்கு சொல்லிவர மெலுஞ்சி வந்திருந்தவனால் நிர்பந்திக்கப்பட்டான்.

அப்படியே எழுந்து தேவாலயத்தை நோக்கி நடந்தவனுக்கு நடைக்கொருதரம் இருமல் நெஞ்சைப் பிளந்தபடி வந்தது. இனி சேத்தியின் மரணத்துக்காக மணிக்கொருதரம் மணியடிக்க வேண்டும். சாயங்காலம் துட்டி (மரணச் செய்தி) சொல்ல இந்த கடல்புறத்து கிராமங்கள் எங்கும் கால்நடையாய் செல்ல வேண்டும். புனித ஜெபமாலை மாதா தேவாலயத்தின் வெண்கல மணியை இழுத்து அடித்து மூச்சை நிறுத்தியவன், மணிக்கயிற்றை இலகுவாக விட்டான். அது மூன்றுமுறை அடித்து சேத்தி என்னும் தொண்ணூறூ வயதுவரை வாழ்ந்த கிழவனின் மரணத்தை அந்த கிராமத்துக்குச் சொன்னது. அப்படியே மணிக்கயிற்றுக்குக் கீழே குந்தி தரையோடு பதிந்து அமர்ந்தான். இனி அவன் அந்த மணிக்கயிற்றை விட்டு சேத்தியின் அடக்கம் முடிகிறவரை அகல முடியாது.

ஒரு மார்கழி மாத இரவில் மெலுஞ்சி வயதான தன் தாயோடும் தகப்பனாரோடும் அந்த கடலோர மீனவ கிராமத்துக்கு வந்து சேர்ந்தான். பெரிய வசதி என்று இல்லாவிட்டாலும் இரண்டு தறி போட்டு வயிற்றைக் கழுவிய வாழ்க்கையும் கிழிந்து போனது. பஞ்சம். சனமெல்லாம் ஊரைக் காலி செய்தது. பிழைப்புக்கு வழியில்லாமல் தறிகெட்டுப் போனது நெசவும் வாழ்க்கையும். அடிவானம் தொட்டு கண்ணுக்கெட்டிய தூரம் நெருஞ்சிக்காடு வளர்ந்து கிடக்கும் வள்ளியூர்தான் மெலுஞ்சியின் பூர்வீகம். அவர்கள் தன் ஒரு மகனோடு வள்ளியூரில் இருந்து இடம் பெயர்ந்த காலத்தில் நெடுஞ்சாலையோரம் முழுக்கப் பூத்திருக்கும் ஆவாரம் பூக்கள் மஞ்சளை இழந்து வாடிக் கிடந்தது. வயிற்றுக்கில்லாமல் போன ஒரு பஞ்ச காலத்தில் அவன் இவ்விதமாய் அந்த கடலோர கிராமத்துக்கு தன் தாய் தந்தையோடு வந்து சேர்ந்தான்.

அவர்கள் மீனவர்கள். கடலைப் போல ஆவேசமானதும் அமைதியாலானதும் அவர்களின் வாழ்க்கை. ஒரு அரயன் அந்த கடல்புரத்தில் பிறக்கும் போது கடல் மட்டுமே பின்னாளில் அவனது வாழ்வைத் தீர்மானிக்கும் சக்தி. கடல் கொட்டிக் கொடுப்பதை வைத்து பிழைத்துக் கொள்வது அரயத்தியின் கையில் இருக்கிறது. மூன்றாம் சாமத்தில் கட்டுமரத்தோடு கடலுக்கு இறங்கும் ஒரு கடலோடி நல்லபடியாய் கடலாடினால் அவனது வாழ்க்கைப்பாடுகள் நன்றாய் இருக்கும். அதுதான் கொண்டாட்டமான ஆர்ப்பாட்டமான அவர்களது வாழ்வைத் தீர்மானிக்கும்.

ஒரு அரயன் கடலோரத்தில் பிறக்கும்போது அவனுக்கென்று ஒரு கட்டுமரம்கூட இருப்பதில்லை. பங்குக்கு அடுத்தவருடன் சேர்ந்து கடலுக்குச் செல்வான். பின்னர் கொஞ்சம் பணம் கிடைத்தால் மரம் இறக்குவான். குடிப்பான். வருமானத்தில் பெரும்பங்கை தேவாலயத்துக்குக் கொடுப்பான் பின்னர் ஒருநாள் மரித்துப் போவான்.

மெலுஞ்சியும் தாய் வள்ளியூர்க்காரியும் தந்தை ஜோசப்பும் இந்த கடலோர கிராமத்துக்கு வந்தபோது அவர்கள் அந்த கிராமத்தின் தேவாலயத்தில் தங்கிக் கொண்டார்கள். பாவப்பட்டு வந்தவர்களுக்கு சோறு போட்ட மக்களை பிடித்துப் போக, அவர்கள் அந்த ஊரில் தங்கி விடுவதென்று முடிவெடுத்தார்கள்.

வள்ளியூர்க்காரிக்கு ஊர்த்தேரியில் குடிசை போட்டுக் கொள்ள பாத்தியம் கொடுக்கப்பட்டது. மெலுஞ்சிக்கு சந்தோசம் நிம்மதியாக படுத்துத் தூங்க ஒரு இடம் கிடைத்துவிட்டது. மெலுஞ்சியின் தகப்பனும் கோவில் பிள்ளையாகிவிட்டார். அந்த தேவாலயத்தில் சரியான நேரங்களில் மணியடிக்கவும் ஊர்ச்சேதி சொல்லவும் துட்டி சொல்லவும் அந்த கடல்புரத்துக்கு ஒரு ஆள் கிடைத்துவிட்டான்.

விவசாயிக்கு கால்காணி நிலம், தையல்காரனுக்கு ஒரு தையல் இயந்திரம் என்றால் மீனவனுக்கு கட்டுமரம் தானே? மொத்த கட்டு மரமும் அலை கிழித்து கரை வந்து சேர்ந்தால் ஒமல்ஒமலாக (பனை ஓலைக்கூடை) மீன் வந்து இறங்கும். ஒற்றையாக எண்ணுகிற பழக்கமெல்லாம் கிடையாது. நூறுநூறாகக் குவித்து மொத்தமாக ஏலம் விடுவார்கள். மீன் குட்டை வண்டிகள் சாரைசாரையாக வந்து குவியும். ஏலம் எடுப்பதிலும் ஏலம் கூறுவதிலும் நடக்கும் போட்டி கள்ளுக்கடை வரை சண்டையாய் விரிந்து பரவும். உச்சி வெயில் தாண்டி வெயில் தாழும் நேரத்தில் கிராமத்தின் அத்தனை வீடுகளிலும் ஒருசேர மீன்குழம்பு வாசம் வீசும். அந்த கிராமத்துக்கு வந்த பிறகு வள்ளியூர்க்காரியின் வீட்டிலும் மீன்குழம்பின் வாசம் வருகிறது.

வள்ளியூர்க்காரி ஒவ்வொரு கட்டுமரமாய் போவாள். ஒவ்வொரு மரத்திலும் ஒரு வெள மீனோ பாறை மீனோ அவளுக்குக் கிடைக்கும். மீன்பாடில்லாத நாட்களில் மரத்துக்குப் பக்கத்தில் நெருங்க முடியாது. சில நாட்களில் கறிக்குப் போக மீதம் மீன் இருந்தால் அதை உப்பு போட்டு கடல் மணலில் காய வைத்தாள். காய்ந்த கருவாடுகளை வள்ளியூர்க்காரி விற்கலாம் எனத் தீர்மானித்தாள். தலைச்சுமட்டில் கருவாடு விற்க அவள் வடக்கு ஊர்களுக்குப் போனாள். ஆனாலும் வள்ளியூர்க்காரிக்கு மீன் விற்பதில் அரயத்தியின் லாவகமோ நம்பகத்தன்மையோ இல்லை. ஆனாலும் கடந்த காலத்தின் துன்பச் சூழலிலிருந்து வெளியேறும் புதிய நம்பிக்கையை வள்ளியூர்க்காரிக்கும் அவளது கணவன் ஜோசப்புக்கும் மெலுஞ்சிக்கும் அந்த கடற்கரை வழங்கியிருந்தது.

அதிகாலை ஐந்து மணியாகியும் மாதாக்கோவிலில் மணியடிக்காது போனதால் கட்டுமரங்கள் கடலுக்குள் போகும் நேரம் தப்பிப்போனது. மீன்பிடி தளவாடங்களோடு கடற்கரைக்கு வந்தவர்கள் அவனைத் திட்டினார்கள். ‘‘எளவுடுப்பான் குடிச்சிப் போட்டு தூங்கியிருப்பான்’’ என்று வைதனர். குடிசைக்குள் எரிந்த சிம்னி விளக்கைத் தூண்டிவிட்டு வள்ளியூர்க்காரி திரிகால மணியடிக்க கணவன் ஜோசப்பை எழுப்பினாள். சிறிது நேரத்தில் அந்த குடிசைக்குளிருந்து கிழவியின் அழுகுரல் கேட்டது. மெலுஞ்சியின் தந்தை மரித்துப் போனான்.

ஊர்க்கமிட்டியின் கூட்டத்திற்கு மெலுஞ்சி அழைக்கப்பட்டான். ‘‘கோயில்ல மணியடிக்க ஆளில்லை. உனக்க தகப்பனார் இருந்தவரை அவர் அடிச்சார். இப்போ நீ அடிக்கணும் என்ன சொல்றே?” ஊர்த்தலைவர் கேட்டுவிட்டு அவனது சம்மதத்துக்காக காத்திருந்தார். ஒருமுறை அவனது அப்பாவுக்கு உடம்பு முடியாமல் போனது ‘‘எல மக்கா இன்னைக்கு மட்டும் போய் மணி அடில’’ என வள்ளியூர்க்காரி மகனிடம் கெஞ்சியபோதும் ‘‘பொன்னத் தந்தாலும் போ மாட்டேன்’’ என்று மறுத்தவன் இன்று ஊரார் முன்னிலையில் தலை கவிழ்ந்து நின்றான். அவன் சம்மதம் சொல்லவும் இல்லை அவனது சம்மதத்தை வேண்டி ஊரார் காத்திருக்கவும் இல்லை. மெலுஞ்சி செய்யவேண்டிய கோவில் கடமைகள் அவனுக்குச் சொல்லப்பட்டது.

காலையில் ஐந்து மணி, மதியம் பன்னியிரண்டு மணி, இரவு எட்டு மணி என திரிகாலமும் மணியடிக்க வேண்டும். காலையிலும் மாலையிலும் தேவனை நினைத்து பிரார்த்தனை இரவு எட்டுமணிக்கு குடும்ப ஜெபமாலை என திருச்சபை அவர்களின் பிராத்தனை நேரத்தை ஒழுங்கு செய்து கொடுத்திருந்தது. ஆனால் அவர்கள் அதை பின்பற்றியதாகத் தெரியவில்லை. அந்த மக்கள் காலை மதியம் இரவு என மூன்றுவேளை குடும்ப ஆராதனையில் ஈடுபட்டாலும் படாவிட்டாலும் மெலுஞ்சி மணியடிக்க வேண்டும். அது அந்த கடற்கரையில் அவன் வாழும் காலம் முழுக்க செய்ய வேண்டிய கடமை.

கிட்டத்தட்ட நூறு வருட பழமையான மாதாகோவிலின் மணியும் பழமையானதுதான். மயிலாடியில் இருந்து அந்த காலத்தில் செம்பு கொடுத்து செய்துவந்தாக சொல்வார்கள். அலைஅலையாக அது தவழ்ந்து மணியோசை ஊர் மக்கள் மனதில் இன்பம் சேர்க்க மெலுஞ்சி அந்த மணிக்கயிற்றோடு போராடினான். ஒருமுறை இழுத்துவிட அவன் மூச்சு ஒவ்வொரு முறையும் திணறியது. ஆனாலும் இது மாதாவுக்கு செய்கிற சேவை அல்லவா?

அடிக்கடி கூடும் ஊர்க்கமிட்டியின் முடிவுகள்தான் ஊர் முடிவு. ஊரில் செல்வாக்கான பணக்காரரின் முடிவு தான் கமிட்டியின் முடிவும். அன்றும் அப்படித்தான் ஊர் கூடியது. ஊரார் முன்னிலையில் சேசடியான் நிறுத்தப்பட்டிருந்தான். தீர்ப்புச் சொல்லுகிற பட்டங்கட்டிக்கு மட்டும் ஒரு நாற்காலி போடப்பட்டிருந்தது. சேசடியான் எவ்விதமான பதட்டமோ பயமோ ஊராரிடம் அவனுக்கு இல்லாதது போலவே இருந்தான். அவன் கைகட்டி கூனி தன்னை பயந்த சுபாவம் உள்ளவனைப்போல பாவனைப்படுத்திக் கொண்டான். ஊராருக்கு தக்க மரியாதையை கொடுத்தாக வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ள ஒரு சிறந்த அரயன் அவன். சேசடியான் மீதான குற்றப் பத்திரிகையை வாய்மொழியாக கொழும்பான் சொன்னான். ‘‘யவே ஜெஸிந்தா இருக்காள்லியா அவ மூத்த மொவ மெல்கி மோளுறத இந்த கூதிவுள்ள ஒளிஞ்சி நின்னு பாத்திரிக்கான். இந்த இறப்பாளி நாய என்ன செய்யணும்ணு சொல்லுங்க’’ என்று கொழும்பான் குற்றப்பத்திரிகையை வாசித்தபோதே தண்டனையும் கடுமையாக இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தான்.

‘‘ஏ அந்த கள்ளக் கூதிவுள்ளக்கி ஆயிரம் ரூவா தெண்டம் போடுங்கவே... தெண்டம் கட்ட முடியாட்டி கரும்புள்ளி செம்புள்ளி குத்தி ஊரச் சுத்தணும்’’ என்று தீர்ப்பு சொல்லப்பட்டது. சேசடியான் பணம் கட்டுவதில்லை என்ற முடிவோடு வந்திருந்ததால் கரும்புள்ளி செம்புள்ளி குத்தப்பட்டு ஊர் சுத்தத் தயாரானான்.

ஊர்க்கமிட்டிக்காரர்களால் சேசடியானுக்கு வழங்கப்பட்ட தண்டனையை பறை போட்டுச் சொல்ல மெலுஞ்சிக்கு சொல்லப்பட்டது. அவன் பல பறைகளைச் சொல்லியிருக்கிறான் தாசன் வாத்தியார் வீட்டில் செல்லம் கோழி திருடிய தண்டனைப் பறை, ஊர்த்தோப்பில் அந்தோனி தேங்காய் திருடியது தொடர்பான தண்டனைப் பறை, மெனக்கெடு நாளான ஞாயிற்றுக் கிழமை மத்தியாஸ்தாத்து வலையைக் கொண்டு மீன்பிடித்தது தொடர்பான தண்டனைப் பறை, சம்படி குளத்தில் குளித்த லீனாவை மறைந்திருந்து பார்த்தது தொடர்பான தண்டனைப்பறை, பங்குப்பாதிரியை கனகம் கல்லெடுத்து அடித்தது தொடர்பான தண்டனைப்பறை என தந்தையின் மரணத்துக்குப் பிறகு அவனும் ஏராளமான பறைகளை சொல்லியிருக்கிறான். சேசடியானுக்கும் அவன் சொன்னான். ‘‘ஜெசிந்தா மொவ மெல்கி மோளுரத பாத்ததுக்காக சேசடியானுக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்தேய். இது ஊர்க் கமிட்டியின் முடிவு’’ என வீதிக்கு வீதி சொன்னான்.

‘‘எல இவஞ் சொல்றது சரியா காதுல உளல சத்தமா கூவச் சொல்லி இவன மொதல்ல ஊர் சுத்த சொல்லணும்’’ என நக்கலாய் கேளிக்கையாய் சில வார்த்தைகள். ஒரு தெருவில் மூன்றுமுறை சொல்வதற்குள் முப்பதுமுறை இருமித் தீர்த்தான் மெலுஞ்சி. அவனுக்கு சளித் தொல்லை இருந்தது. இடைவிடாது இருமிக் கொண்டிருந்தான். மார்கழியில் கடலின் மீதிருந்து வீசும் ஈரப்பதமான காற்று அவனை வாட்டி எடுத்து விடும். இவ்விதம் உடல் உபாதைகளுடன் அவன் வாழ வேண்டிய சூழலாயிற்று.

கணவனின் மரணத்துக்குப் பிறகு மெலுஞ்சி என்றழைக்கப்பட்ட தனது மகன் ஜோசப்புக்காக வாழ்ந்தாள் வள்ளியூர்க்காரி. தலைச்சுமட்டில் மீன் விற்று வந்தவளுக்கு தனது மகன் திருமண வயதை கடந்துவிட்ட நினைவுகள் அவளைக் கொஞ்சம் துன்புறுத்தத் தொடங்கியது. மகனுக்காக வள்ளியூர்க்காரி பெண் பார்த்தாள். திட்டுவிளையிலிருந்து லூசியம்மாவை பிடித்து வந்தாள். தான் இதுவரை எந்த தேவாலயத்தில் மணியடித்து வாழ்ந்து வந்தானோ அந்த தேவாலயத்தில் அவனுக்கும் லூஸியம்மாளுக்கும் திருமணம் நடந்தது. ‘‘இன்பத்திலும் துன்பத்திலும் நோயிலும் நொடியிலும் வாழ்விலும் சாவிலும் ஒருவர் ஒருவரை விட்டு பிரியாதிருக்க உறுதியளிக்கிறோம்” என திருச்சபைக்கு உத்திரவாதம் கொடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

‘‘கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்’’ எனச் சொல்லி மெலுஞ்சிக்கும் லூஸியம்மாளுக்கும் பங்குத்தந்தை திருமணம் செய்து வைத்தார். அன்றைய மெலுஞ்சியின் திருமணத்துக்கு யாரும் மணியடிக்கவில்லை கேஸியோவில் எலக்ட்ரானிக் மியூசிக்கை கசிய விட்டனர் பாடல் குழுவினர்.

லூசியும் மெலுஞ்சியும் சகாயமாதா கோவிலுக்குப் போனார்கள். உப்பும் மிளகும் காணிக்கையாக போட்டு விட்டு வந்தார்கள். மெலுஞ்சிக்கு மாதாவிடமும் சரி லூஸியிடமும் சரி எதுவிதமான வேண்டுதலும் இருக்கவில்லை. கடல்புறத்தில் மீன் அதிகமாக படுகிறபோது வள்ளியூர்க்காரிக்கு மீன் அதிகமாகக் கிடைத்தது. விற்றது போக மீதியை அன்றே கீறிக் கிழித்து உப்புக்கண்டம் போட்டு கடல் மணலில் காயவைத்து கருவாடாக்கினாள். தொழிலை விஸ்தாரமாக்கினால் நாமும் கொஞ்சம் பணம் சேர்த்தால் ஒரு அரயனைப் போலவும் அரயத்தியைப் போலவும் வாழலாம் என நினைத்தாள்.

வள்ளியூர்க்காரி லூஸியம்மாவை மீன் பெட்டி தூக்கச் சொன்னாள். லூஸி மறுத்து விட்டாள். ‘‘எந்த சொத்தக் கொண்டு இங்க சோறு உண்டாக்குகது. என்ன இருக்கு உண்டாக்குகதுக்கு இந்த சவத்த மீன் பொட்டி தூக்கச் சொன்னா. அவளுக்கு கேவலமா வுல்லா இருக்கு. வவுத்துக்கு கேவலம் தெரியுமா.. இல்ல வாய் தான் கேவலம் பாக்குமா? இவளுவளுக்கு குண்டி காயணும்’’ என்றவள் லூஸியை ‘‘சரியான மினுக்கி’’ என்றாள். ஆமாம் வள்ளியூர்க்காரி லூஸிக்கு மினுக்கி என்றே பெயர் வைத்துவிட்டாள்.

இப்படியாய் ஊர்த்தேரி மேட்டில் இருந்த அந்த ஒற்றைக் குடிசைக்குள் நாள்தோறும் சிக்கலும் சிணுங்கலுமாய் மூன்று ஜீவன்களின் வாழ்க்கை கழிந்து வந்தது.

இரண்டு மாதம் கழிந்த ஒரு மாலையில் லூஸியமமவுக்கும் வள்ளியூர்க்காரிக்கும் வந்த சண்டையில் லூஸி மெலுஞ்சியை ‘‘பொட்டப் பயல உங்கோத்தாள வெச்சுக்கல தருமக்காரிக்க மொவன’’ என மெலுஞ்சியைத் திட்டிவிட்டு ஓடிப் போனாள். மெலுஞ்சி எழுந்து எதுவும் பேசாமல் கடற்கரைக்கு கடன் கழிக்கப்போனான்.

ஊர்ச்சனமெல்லாம் மெலுஞ்சியைக் கிண்டல் செய்தது. ‘‘எல மெலுஞ்சி இன்னொரு கல்யாணம் பண்ணு’’ அதனாலென்ன இன்னொரு திருமணம் செய்துவிட்டால் போகிறது வள்ளியூர்க்காரி இரணியலில் இருந்து விக்டோரியாவை அழைத்து வந்தாள். ‘‘சாமி இவள எம் மொவனுக்கு கல்யாணம் பண்ணி வைப்பியளா?” என பங்குப் பாதிரியாரிடம் கேட்டாள் வள்ளியூர்க்காரி. ‘‘அதெல்லாம் முடியாதம்மா அதுக்கெல்லாம் ஒருமுறை இருக்கு ஒரு தடவை திருச்சபையில் கல்யாணம் ஆனா அந்த தீர்ப்பை மாற்றி எழுத முடியாது. கல்யாணம் செய்து கொண்ட இருவர் உயிரோடு இருந்து பிரிந்து வாழ்வதை திருச்சபை ஏற்றுக் கொள்வதில்லை. கோர்ட்டுக்குப் போய் சட்டப்படி நீங்க பிரிஞ்சி வந்தாலும் அதை திருச்சபை ஏற்றுக்கொள்ளாது. ஆகவே உங்க மகனுக்கு இப்போ ஆலயத்தில் திருமணம் சாத்தியமில்லை’’ என திருச்சபையின் ஷரத்துக்கள்படி பங்குத் தந்தை பேசி வள்ளியூர்க்காரியை அனுப்பி வைத்தார்.

வள்ளியூர்க்காரி தன் மகனுக்கு தனக்குப் பிறகு ஒரு துணை வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தாள். அது ஒரு தாயின் கடமையுமல்லவா? இணைந்து வாழ்தல் குறித்த எவ்வித ஒப்பந்தமும் இல்லாமல் விக்டோரியாவுடன் தேரிமேட்டின் குடிசையில் இன்னொரு முறை வாழத் துவங்கினான் மெலுஞ்சி.

மெலுஞ்சி மணியடித்தான், பறை சொன்னான், அந்த கடலோரத்தில் வாழ்ந்து இறந்து போகும் ஒவ்வொரு உயிர்களுக்காவும் துக்கச் செய்திகளை சுமந்து அந்த கடலோர பட்டினங்கள் முழுக்க அலைந்தான். மீதிநேரம் தன் தாயாரோடு மீனெடுக்க கடற்கரைக்குப் போனான். தன் வயதான தாயாரைப் போல அவனால் நடக்க முடியவில்லை. முதுகு கூன் விழுவதற்கு முன்னால் கன்னம் கூன் விழுந்தது. ஆஸ்துமா தொல்லை அவனைத் துன்புறுத்தியது. விக்டோரியா வள்ளியூர்க்காரிக்கு ஒத்தத் துணையாக இருந்தாள் மீன்களை பதப்படுத்தி சேமிப்பதில் அவள் திடமான பெண்ணாக விளங்கினாள். வள்ளியூர்க்காரியை விட மீன் பெட்டி எடுத்து அதை விற்பதில் கெட்டிகாரி என பெயரெடுத்தாள். ஆனால் சௌகரியமாக வாழ குடும்ப வாழ்க்கையில் இது மட்டுமே போதுமானதாக இல்லை. அவள் மெலுஞ்சியின் மீது இரக்கமும் கரிசனமும் கொண்டிருந்தாள். தகித்துக் கிடக்கும் உடம்பை என்ன செய்ய.... மூன்று மாதம் கழித்து அவளும் போய்விட்டாள் தனக்கான இன்னொரு வாழ்க்கையைத் தேடி அவள் சென்றிருக்கக் கூடும்.

காலம் தன் மீது நிகழ்த்தும் கோரமான தாக்குதல்களைப் பற்றி கலங்காதவன் அவன். மெலுஞ்சி தனக்கு ஒரு வாழ்க்கைத் துணை வேண்டும் என எப்போதும் வள்ளியூர்க்காரியை கேட்டதில்லை. கொடுங்காற்றில் இருந்தும் கடல் அரிப்பில் இருந்தும் தனது குடிசையை காப்பாற்றிக் கொள்வதும், உணவும், போர்த்திக் கொள்ள ஒரு போர்வையுமே அவனுக்கு அத்தியாவசியமான தேடுதலாக இருந்தது.

வள்ளியூர்க்காரிக்கு தலைச்சுமடு மீன் குறைந்துவிட்டது. ஐநூறாக இருந்த கட்டுமரம் நூறாக அந்த கடற்கரையில் குறைந்தது. கடலை நம்பி வாழ்ந்த மீனவர்கள் கடன் வாங்கி அரபுநாடுகளுக்கு வேலைக்குப் போக பல கட்டுமரங்கள் பனியத்துக்குள் சென்று பதுங்கிக் கொண்டது. கட்டுமரங்கள் கரை நோக்கி வரும் காலைவேளையில் அவள் கூடையோடு போய் கடற்கரையில் காத்திருந்தாள். இடது கையால் அவள் தலையைத் தாங்கி குந்தி அமர்ந்திருந்தாள். எழுந்து சென்று ஒவ்வொரு கட்டுமரமாக ‘‘நான் உங்க சேவைக்காரி வந்திருக்கேன்’’ எனச் சொல்லி மீன் கேட்க நினைக்கிறாள் முடியவில்லை. காத்திருந்தவளுக்கு அன்றும் மீன் எதுவும் கிடைக்கவில்லை.

வெறுங்கூடையோடு அவள் தேரி மேட்டை நோக்கி நடந்தாள் அந்த நடையில் ஏமாற்றம், தள்ளாட்டம், பரிதவிப்பு எல்லாம் இருந்தது துக்கமும் இருந்தது. அந்த துக்கம் மறைந்து போன தன் கணவன் ஜோசப் பற்றியதாகவோ தன் மகன் மெலுஞ்சி பற்றியதாகவோ இருந்திருக்கலாம்.

துட்டி சொல்ல வள்ளவிளைக்குப் போய் வந்த மெலுஞ்சி குடிசைக்கு வெளியில் இருந்து கம்மிய குரலில் தன் வயதான தாயை அழைத்தான். ‘‘யாதே’’ பதிலேதும் இல்லாமல் போனதால், ‘‘இந்நேரத்துக்கு எங்கப் போயிருக்கும்’’ என்ற யோசனையில் குடிசைக்குள் போனவன் சுருண்டு கிடந்த வள்ளியூர்க்காரியை எழுப்பினான். பதிலேதும் இல்லை அசைவில்லை முனகல் ஏதுமில்லை. அவளைத் தொட்டுப் பார்த்தவன் அண்டி வாழ்ந்த மனிதரை அழைத்தான். அவர்கள் வந்து பார்த்துவிட்டு வள்ளியூர்க்காரி இறந்து போனதாக சொன்னார்கள். தனது தாயாரின் பிணத்துக்குப் பக்கத்தில் தலையில் கைவைத்தபடி அமர்ந்திருந்தான். குடிசையின் மேல்கூரை கிழிசல் வழியே ஊடுருவிய சூரிய ஒளி கிடத்தப்பட்டிருந்த வள்ளியூர்க்காரியின் முகத்தில் விழுந்தது. அவன் அந்த முகத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

அவனுக்காக வாழ்ந்த அந்த ஒரு ஜீவனும் தன்னை உலகத்திலிருந்து விடுவித்துக் கொண்டது. ஒரு மாட்டு வண்டியின் பின்னால் தொங்கவிடப்பட்ட அசைந்தாடிய லாந்தர் ஒளியைப் பின்பற்றி அவன் தன் தாயோடு அந்த ஊருக்கு வந்ததையும் அவளது எந்த ஒரு நடவடிக்கையும் மகனின் நன்மையின் பேராலே நடத்தப்பட்டது என்பதையும் அவன் நினைத்துப் பார்த்தான். அவனுக்கு இப்போது அழுகை வரவில்லை. அவன் அழுது யாரும் பார்த்ததும் இல்லை. அவன் தனது துன்பமான இந்த வாழ்வு குறித்தும் யாரிடமும் புலம்பியதில்லை. மனைவியாக வந்தவர்கள் சில மாதங்களில் ஓடிப் போன போதுகூட அவன் கலங்கவில்லை.

‘‘உனக்கு நா இருக்கமுல மக்கா. நா கண்ண மூடுறதுக்கு முன்னால் உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணிப் பாத்துட்டுத்தான் நான் போவேன்’’ என்று சொன்னவள் இப்போது கட்டையாகக் கிடந்தாள். கிழவி உயிரோடு இருந்தவரை மெலுஞ்சிக்கு பெரிதாக ஒன்றும் பிரச்சனை இருக்கவில்லை. தலைச்சுமட்டில் மீன் பெட்டி சுமந்தவள் அவனுக்காக மூன்றுவேளையும் சமைத்துப் போட்டாள். எப்போதாவது டவுனுக்குப் போனால் அவனுக்கு காரச்சேவும் பூந்தியும் வாங்கி வருவாள். ஒரு குழந்தை மாதிரி தின்பவனை கண்களை இடுக்கியபடி பார்த்திருப்பாள். அவனது இரண்டு கால்களையும் யாரோ வெட்டி எடுத்துச் சென்றது மாதிரி இருந்தது அவனுக்கு.

தேரிக்குடிசையின் வாசல் வழியே தேரி மேட்டைப் பார்த்தான். நீண்ட கடற்கரை. ஏராளமான மனித தடங்கள். இந்த வெறும் கடல் மணலில் நடக்கப் பழகுவதே சிரமம். இந்த கடல்புறத்தில் பிறந்தவர்களைத் தவிர புதிய மனிதர்கள் மண் பழக வேண்டும். மண்ணில் புதையும் கால்களை எடுத்துப் போட்டு வேகமாக நடக்க வேண்டும். உதிரியான சொறி மணல் தணலைக் கொண்டு வந்து காலில் கொட்டிய மாதிரி இருக்கும். அனைத்துக்கும் பழக வேண்டும். அவனுக்கு அந்த கடல் மணலில் நடக்கப் பழகும் நம்பிக்கை கொடுத்தது அவனது தாய்தான். தன் தாயில்லாத அந்த மணல் வெளியில் இனி நடக்கப்போவதை நினைத்தான்.

வள்ளியூர்க்காரியின் பிணம் கல்லறைத்தோட்டத்தில் புதைக்கப்பட்டது பிறப்பு இறப்பு பற்றிய எந்த குறிப்புகளும் இல்லாமல் நித்திரை அடைந்ததை நினைவுறுத்தும் சிலுவைக் குறி மட்டும் அவளின் கல்லறை மீது சாத்தப்பட்டிருந்தது. அந்த கல்லறைக்குப் பக்கத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தான். பின்னர் தன் குடிசையை நோக்கி நடந்தான். மணல்மேட்டில் தெரிந்த குடிசையை தூரத்தில் இருந்து பார்த்தவனுக்கு முதன்முதலாக கண்ணீர் வந்தது. விபரமறிந்து தன் தாய்க்கு தான் உழைத்து ஒரு பருக்கை சோறுகூட போட முடியாத வக்கத்தத்தனம் அந்த கண்ணீரில் இருந்தது.

இரண்டு நாட்களாக மெலுஞ்சி கோவிலுக்கு மணியடிக்க செல்லவில்லை. குடிசைக்குள் முடங்கிக் கிடந்தவனுக்கு பக்கத்து வீட்டு சில்வி சோறு கொண்டு கொடுத்தாள். அதை ஓதுக்கி வைத்து விட்டு தூங்கினான். பின்னர் அதை எடுத்து உண்டான். கோவிலில் மண் சேர்ந்துவிட்டதால் மெலுஞ்சியை வந்து வேலையைப் பார்க்க சொன்னார்கள். அவனும் போய் தன் கடமையை அந்த ஊராருக்குச் செய்தான்.

அவனுக்கு இப்பொழுதெல்லாம் ஒருவேளை உணவு கிடைப்பதே அரிதான கடினமான ஒன்றாக இருக்கிறது. கிடைத்த போது உண்டான், கிடைக்காதபோது தாயின் சவக்குழியிலோ குடிசையிலோ கோவிலிலோ போய் படுத்துக் கொண்டான்.

ஊரில் யாருக்காவது திருமணம் என்றால் அவனுக்கு உணவு கிடைக்கும். பந்தி போடும் இடத்தின் வாசலில் போய் நின்று கொள்வான். அனைவரும் உண்டபின் கடைசி பந்தியில் அவனுக்கு ஓர் இருக்கை கிடைக்கும். அப்படி கிடைத்தாலும் யாரும் அவனருகே போய் அமர்ந்து உண்ணப் பயப்படுவார்கள். ஏனென்றால் காசநோய்க்காரனான அவனுக்கு அருகில் அமர்ந்து யார்தான் உணவருந்துவார்கள்? முன்பெல்லாம் யாருக்காவது திருமணம் என்றால் கோடி கொடுப்பார்கள். கோடி என்றால் புதிதாக சட்டையும் வேட்டியும் கிடைக்கும். மெலுஞ்சியின் தகப்பனார் இருந்தவரை அவருக்குக் கிடைக்கிற கோடிகள் எல்லாம் அவனுக்குத்தான். ஆனால் அவரின் மரணத்துப் பிறகு அப்படி கோடிகள் எதுவும் அவனுக்குக் கொடுக்கப்படுவதில்லை. அவனும் கோடிகளுக்காக யாரிடம் போய் நின்றதில்லை. பசிக்கிற காரணத்தால் மட்டுமே பந்தியில் போய் காத்திருக்கிறான்.

அவன் அந்த கடலோரத்துக்கு வந்து நாற்பதாண்டுகள் ஆகிவிட்டது. இந்த நாற்பது வருடத்தில் அவன் வேறு அந்த கிராம மக்கள் வேறல்ல. ஊருக்கெல்லாம் சேதி சொன்னான். இழப்பின் வலியை மணிக்கொருதரம் மணியடித்து ஊருக்குச் சொன்னவனுக்கு ஒரு மீன் தர இப்போது நாதியில்லை. அவன் கையேந்தாமல் அவர்களிடம் இறந்து வாழ்கிறான்.

நினைவுகளெல்லாம் கரைந்து போயின... ஆலய மணிக்குக் கீழே குந்தியிருந்தவனுக்கு ஊர்க்கிழவன் சேத்தியின் மரணத்துக்கு அடுத்த மணியடிக்க வேண்டியது நினைவுக்கு வர விட்டு விட்டு அவன் முறையாக அடித்தான் சேத்திக்கான துக்க மணியை. பின்னர் சேத்தியின் உடல் கல்லறைத் தோட்டத்தில் புதைக்கப்பட்டு சிலுவைக்குறி நடப்பட்டது. ‘‘முடிவில்லாத தேவனின் ஒளி சேத்தியின் மீது ஒளிர சேத்தி மண்ணுக்குள் புதைக்கப்பட்டான்’’. கல்லறைக்கு வெளியே கையேந்தி நின்றவனுக்கு இரக்கமுள்ள மனசுக்காரமார் ஐம்பது காசு ஒரு ரூபாய் நாணயங்களைக் கொடுத்துவிட்டுப் போனார்கள். அதை மிக்க பணிவோடு அவன் பெற்றுக் கொண்டான்.

வாடைக்காற்று வீசும்போது ஒரு திசையிலும் சோழக்காற்று வீசும்போது ஒரு திசையிலும் இழுத்துச் செல்லும் கடல் அலையைப் போல அவன் இன்னும் அந்த கடலோரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அந்த மக்களுக்கும் மாதாவுக்கும் செய்ய வேண்டிய பணிவிடைகளை அவன் தவறாமல் செய்து கொண்டிருந்தான். ஒருநாள் ஏதாவது ஒரு மீனவன் வந்து சொல்வான் ‘‘எல மெலுஞ்சி தேறிப் பெறக்குள்ள மெலுஞ்சி செத்துக் கிடெக்கானாம்’’ என்று. அவனது மரணத்தை ஊருக்குச் சொல்ல தேவாலயத்தின் மணி அடிக்கப்படலாம் அல்லது அடிக்கப்படாமலும் போகலாம். ஊரின் கல்லறைத் தோட்டத்தில் அவன் அடக்கம் செய்யப்படலாம். அப்பனின் வாரிசாக கோவில் பிள்ளை ஆனவன் தனக்கொரு வாரிசு இல்லையே என ஒருபோதும் வருந்தியதில்லை. அந்தத் திருப்தியோடு அவன் நாளை மரித்துப் போவான். இவைகள் எதையும் அறியாதது போல பேரிரைச்சலையும் கொந்தளிப்பையும் தன்னுள் செரித்துக் கொண்டு மிகச் சாதுவாய் நுரைத்துக் கொண்டிருக்கும் அவர்களது அரபிக்கடல்.

ஆனால், அந்த ஊர் மக்களுக்கு விடை தெரியாத கேள்விதான் இன்றும் அவர்களை உறுத்திக் கொண்டிருக்கிறது. அது, ‘‘மெலுஞ்சி செத்துப் போயிட்டாம்னா இனி யாரு நம்ம கோவில்ல மணியடிப்பா?” என்கிற கேள்விதான்.

(தென்திசை பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் ‘ஒன்றும் ஒன்றும் இரண்டல்ல’ என்ற டி.அருள் எழிலனின் கட்டுரைத் தொகுப்பிலிருந்து.)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com