தேன்மொழி.எஸ் கவிதைகள்
ஆன்மாவின் தாலாட்டு
புல்லாங்குழலுக்குள்
என் மூச்சுக்காற்றை
சேகரிக்கும் பணி
ஆத்மார்த்தமானதாயும்
ஆனால்
அவசியமற்றதாயும்
விமர்சிக்கப்படுகிறது
ஓசைகளற்ற ஒரு நாளில்
காற்று கலைத்தமர்ந்த பொழுதில்
மழை குளிராக வெயில் வெப்பமாக
தன் உச்சத்தை தொடும் வேளைகளில்
தொட்டில் மறந்த தாலாட்டிற்காக
ஆன்மாவின் குழந்தை
அடம்பிடிக்கும் தருணங்களில்
புல்லாங்குழலில் அடக்கிவைக்கப்பட்ட
மூச்சுகாற்றை அவிழ்க்க நேரும்போது
தொட்டில்கள் நிரம்பி வழிகிறது
ஆன்மாக்களால்.
என் அறைகளில் சேகரித்திருக்கிறேன்
நானாவித மொழியின் எழுத்துக்களை
ஆகாசமாய் விரிந்து கிடக்கும் பெண்மை
உற்பத்தி செய்யும் வார்த்தைகளை
வேண்டிய பொழுதுகளில்
வெளிப்படக் கூடும் அவை
வழிகளில் கவனமற்று
புகையாய் துளியாய்
மழையாய் அடையாய்
வரும் அதனிடம்
உங்களின் தொலைந்து போன
முகங்கள் கிடைக்கக் கூடும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|