இரா.தனிக்கொடி கவிதை
நீர் நுழையும் பாதையை
'வரத்து' என்றார்கள் எங்களூர்க்காரர்கள்.
அதன் வழி வந்திருக்கலாம்
கிடைபோட வந்தவனை
'வரத்தாட்டுக்காரன்' எனும் பதம்.
'சமயம்' பார்த்து அவன், நம்
ஊன்றுகோலையும், செங்கோலையும் வைத்து
கிளை உலுக்கி கிடைகாக்கிறான்.
தளிர்களை ஒடித்துப் போட்டவன்
ஒருபோதும் கவலைப்பட்டதில்லை
உதிரும் மலர்களையும், கனிகளையும்.
கேட்டதில்லை நாமும்
நம் நாவில் மாட்டியிருக்கும்
அவன்கை தொரட்டிபற்றி இன்று வரை.
கிடை அடைத்துக் கிடக்கிறது
புழுக்கைக்காக நம் நிலம்.
எப்போதும் கையிருப்பாய் வைத்திருக்கும்
வைக்கோல் புறாவின் இறகு பிடிங்கி
கிரீடங்களுக்குக் கொடுத்துவிட்டு
காது குடைந்து கொள்கிறான் அலாதியாய்.
பயணங்களின் நெடும்பாதை எதிரில்
மந்தைபற்றி வருபவனின்
வழிவிடுதலுக்காய்
காத்திருக்கும்படி ஆகிவிட்டோம்.
'ஒதுங்குகிறதா பார்' என்கிறான் அவன்
சேர்ந்தே அதட்டுகிறோம் நாம்...
எப்படி இருக்கிறது பாருங்கள் கதை.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|