Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Unnatham
Unnatham Logo

ஒரு கதையும் ஒரு பாடலும் - கன்னட நாட்டுப்புறக் கதை
ஏ.கே. ராமானுஜன்

வீட்டுக்காரிக்கு ஒரு கதை தெரியும்; கூடவே ஒருபாடலும் தெரியும். ஆனால் அக்கதையை அவள் யாருக்கும் கூறியதில்லை. பாடலைப் பாடிக் காட்டியதில்லை. அவைகளை அவள் தனக்குள் வைத்திருந்தாள்.

அவளுக்குள் சிறை வைக்கப்பட்ட கதையும் பாடலும் மூச்சுத் திணறின. விடுதலை பெற விரும்பின. வெளியே தப்பியோடப் பார்த்தன.

ஒருநாள் அவள் வாயைத்திறந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது கதை தப்பித்தது. அவளுக்கு வெளியே குதித்தது. காலணிகள் வடிவத்தை எடுத்து வீட்டின் கதவுக்கு வெளியே காத்திருந்தது. பாடலும் தப்பித்தது. மேலே போடும் சட்டை வடிவெடுத்தது. கொக்கியில் சென்று தொங்கியது.

பெண்ணின் கணவன் வீடு திரும்பினான். மேல் சட்டையையும் காலணிகளையும் பார்த்தான். ‘யார் வந்திருக்கிறார்கள்’ என்று அவளைக் கேட்டான்.

‘யாருமில்லையே’ என்றாள் அவள்.

‘இந்த கோட்டும் செருப்பும் யாருடையவை?’

‘எனக்குத் தெரியாதே’ என்ற பதிலளித்தாள் அவள். அந்தப் பதிலால் அவன் திருப்தியடையவில்லை. அவனுக்குச் சந்தேகம் எழுந்தது. எனவே அவர்களது பேச்சில் அப்புறம் சந்தோசம் இல்லாமல் போயிற்று. அந்தச் சந்தோசமின்மை சண்டைக்கு இட்டுச் சென்றது. கணவன் கோபத்தால் துடித்தான். போர்வையைத் தூக்கிக் கொண்டு தூங்குவதற்காக ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்றான்.

என்ன நடந்தது என்று அந்தப் பெண்ணால் அறிய முடியவில்லை. இரவு முழுதும் தனியாகப் படுத்தே கிடந்தாள். ‘யாருடைய கோட்டும் செருப்பும் இவை?’ என்ற அதே கேள்வியை அவள் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டாள். சோர்ந்து போய், சந்தோசமற்று, விளக்கை அணைத்துவிட்டுத் தூங்கிவிட்டாள். அந்த ஊரில், விளக்குகள் அணைக்கப்பட்டவுடன் எல்லாத் தீபச்சுடர்களும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு வந்து கூடுவது வழக்கம். வம்புகள் பேசி இரவை அங்கே அவை கழிக்கும்.

இந்தக் குறிப்பிட்டநாளில் எல்லா வீடுகளைச் சேர்ந்த எல்லாத் தீபச்சுடர்களும் அங்கே வந்து சொலித்துக் கொண்டிருந்தன - ஒன்றைத் தவிற. அது நேரம் கழித்தே வந்தது. அது தாமதமாக வந்ததைப் பற்றி மற்றவை கேள்வி கேட்டன: ‘இன்றைக்கு நீ ஏன் இவ்வளவு தாமதம்?’

‘எனது வீட்டுத் தம்பதிகள், இரவு வெகு நேரம் சண்டையிட்டுக் கொண்டார்கள்’ என்றது சுடர்.

‘எதற்காகச் சண்டை?’

‘கணவன் வீட்டில் இல்லாதபோது செருப்புகள் வராந்தாவில் விடப்பட்டிருந்தன. கோட்டொன்று எப்படியோ வந்து தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது. அவை யாருடையவை என்று கணவன் கேட்டான். தனக்குத் தெரியாது என்று வீட்டுக்காரி சொன்னாள். எனவே அவர்கள் சண்டை பிடித்துக் கொண்டார்கள்’.

‘எங்கிருந்து அந்தக் கோட்டும் செருப்புகளும் வந்தன?’

‘எனது வீட்டுப் பெண்ணுக்கு ஒரு கதையும் ஒரு பாட்டும் தெரியும். அவள் யாருக்கும் அந்தக் கதையைச் சொன்னதில்லை. பாட்டைப் பாடிக் காட்டியதில்லை. கதையும் பாட்டும் உள்ளுக்குள்ளேயே புழுங்கி மூச்சுத் திணறின. எனவே அவை தப்பித்து வெளியேறின. செருப்புகளாகவும் கோட்டாகவும் மாறின. இவ்வாறு அவை பழி தீர்த்துக் கொண்டன. அந்தப் பெண்ணுக்கு இன்னும் இது தெரியாது.’

கோபித்துக் கொண்டு கோயிலுக்குப் போய் போர்வைக்குள் முடங்கிக் கிடந்த கணவன், தீபச்சுடரின் விளக்கத்தைக் கேட்டான். அவனது சந்தேகம் தொலைந்தது. அவன் தனது வீட்டுக்குத் திரும்பியபோது விடிந்துவிட்டது. தனது மனைவியிடம் அந்தக் கதை பற்றியும் பாடல் பற்றியும் கேட்டான். ஆனால் அவள் அந்த இரண்டையும் மறந்து போயிருந்தாள்: ‘எந்தக் கதை? என்ன பாட்டு’ என்று கேட்டாள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com