அந்தக்கணம்
மதிஇலக்யா
மூச்சுக் குழலை பிரித்துக் காட்டினால்
மூன்று மதிப்பெண்கள் கூடுதல்
இரைப்பை பெருங்குடலின் இணைப்பை
தனியாகக் காட்டுபவர்களுக்கு
இன்னும் சற்று கூடுதல் மதிப்பெண்கள்
மலவாயையும் மலக்குடலையும்
தனித்துக் காட்டாதவர்களுக்கு
இரண்டு மதிப்பெண்கள் குறைக்கப்படும்
என்றார்கள் ஆசிரியர்கள்
உதரவிதானத்தை அறுத்தபோதோ
இதயத்தைக் கிழித்தபோதோ
என்னுள் எந்த வேட்கையும் இல்லை
குடல்களின் மென்மையும்
மூச்சுக்குழாயின் தன்மையும்
என் உயிரில் ஊசி குத்தியது
இருந்தும் என் அழுகையெல்லாம்
வேண்டாம் என்று ஒதுக்கிவிட்ட
எலியின் இதயமும்
என்னிடமிருந்து நீக்கப்பட்ட இதயமும்
சந்திக்குமா என்ற கணத்திற்காகத்தான்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|