தோழர் பொழிலனைச் சிறையில் பார்த்தபின் எழுதிய கவிதை
இனமே உயிரித்திடு
பரணிப்பாவலன்
தந்தையை விஞ்சும் தனையனாய் - ஈன்ற
தாய்க்குப் புகழேந்தும் தலைவனாய் - தொல்வரவுச்
சிந்தைக்கு வற்றா நிலவனாய் - செந்தமிழ்
சிறக்கச் செய்திடும் புலவனாய் - இந்திய
மந்தைக்குப் பணியா வலவனாய் - பூம்பொழில்
மண்ணைக் காக்கும் உழவனாய் - அறிவில்
முந்தைக்குக் குறையாத் தமிழனாய் வாழ்ந்திடும்
முகிலே, பொழிலே வாழிய! வாழியவே!!
வேழம் மிரளும் நடையும் - காட்டு
வேங்கை அஞ்சும் கதைப்பும் - என்றும்
தாழாத் தமிழின் எடுப்பும் - அழகிய
தாமரை இதழின் நகைப்பும் - நாட்டை
ஆழமாய் எண்ணிடும் நோக்கும் - உறங்கா
ஆழ்கடல் காட்டும் சீற்றமும் - பகைக்கும்
தோழமை செப்பிடும் விழியும் கண்டு நான்
தோற்றேன் தோல்வியால் அகம்நெகிழ் வுற்றேன்.
கடுஞ்சிறைக் கம்பிக்கு உள்ளே - குறளைக்
கனிவாய் நடத்தும் பாங்கும் - கற்சுவர்
தடுப்பறை அடைத்து இருந்தும் - சங்கத்
தமிழைப் பரப்பும் பண்பும் - என்றும்
விடுப்பு இல்லா விழியும் - எங்கும்
விடுதலை முழங்கும் துடிப்பும் - சிறையைப்
படிப்பறை ஆக்கிய முதிர்வும் பார்த்து நான்
பசியற்றுப் போனேன் பித்தாய் அலைந்தேன்.
சிறைக்குள் இருப்பது பொழிலன் இல்லை!
சிதறிய மக்களாய் நாம்தான் - மூடிய
உறைக்குள் வாழ்வது மறமே இல்லை!
உயிர்க்கா சருகாய் நாம்தான் - வீட்டுக்
கரைக்குள் இருப்பது நாம்தான் - அவனோர்
காலக் கண்ணாடி! நிலத்தில் மண்ணில்
மறைந்து வாழ்வது நாம்தான் - அவனோ
“மறை”யாய் வாழ்வதைப் பாராய்! பாராய்!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|