ஒரு விசித்திரத் தீர்ப்பு
குமுதம், 24-6-2009 ஓ பக்கங்களில்.... ஞாநி
இந்தியத் தேசியக் கொடியை எரிக்க முயன்று கைதான தமிழ்த் தேசிய அமைப்பைச் சேர்ந்தவர்களை ஜாமீனில் விடுவிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒரு விசித்திரமான நிபந்தனை விதித்திருக்கிறார். இந்த உத்தரவை ....தனமான உத்தரவு என்றுதான் சொல்ல வேண்டும். (நீதிமன்ற அவமதிப்பு என்று சொல்ல முடியாத ஒரு வார்த்தையை அங்கே நீங்களே நிரப்பிக் கொள்ளலாம்.)
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் வீட்டு முன்னால் ஒரு கொடிக் கம்பம் நட்டு, ஒரு வாரத்துக்கு தினசரி காலை 6 மணிக்கு இந்திய தேசியக் கொடியை ஏற்றி மாலை 6 மணிக்கு அதை இறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. கொடியை ஏற்றியதும் சல்யூட் அடிக்க வேண்டுமா வேண்டாமா என்பது குறிப்பிடப்பட வில்லை.
தேசியக் கொடியின் புனிதம், மாட்சிமை பற்றியெல்லாம் குற்றவாளிகள் உணர வேண்டும் என்று நீதிபதி விரும்யவபியதால் இவ்வாறு நிபந்தனை விதித்திருப்பதாகத் தெரிகிறது. நீதிபதிகளுக்கு இன்னும் ஆழமான அரசியல் அறிவு தேவைப்படுகிறது. இந்தியக் கொடியை எரிக்க முற்படும் ஒரு தமிழ் தேசியர் என்பவர், இந்திய தேசியத்தையே ஏற்காதவர். அவரை ஒரு வருடம் தினசரி கொடி ஏற்றச் சொன்னாலும் அந்தக் கொடி மீது அவருக்கு மதிப்பும் மரியாதையும் வந்துவிடப் போவதில்லை. அவர் தன் கொள்கையில் உறுதியாக இருந்தால், தொடர்ந்து இந்திய தேசிய எதிர்ப்பாளராகத்தான் இருப்பார். ஒவ்வொரு முறை கொடியை ஏற்றும்போதும் மனசுக்குள் அதை அவர் திட்டிக்கொண்டே கூட இருக்க முடியும். அதை எந்த நீதிபதியும் கண்டுபிடித்து தண்டனை விதிக்கவே முடியாது.
தினசரி இந்த எட்டு தமிழ் தேசியர்களும் கொடி ஏற்றுவதை போலீஸ் கண்காணிக்க வேண்டும் என்று வேறு உத்தரவு. அதாவது காலை 6 மணிக்கு எட்டுப் பேர் வீட்டுக்கும் எட்டு போலீசார் போக வேண்டும். திரும்ப மாலை 6 மணிக்கும் போக வேண்டும். அரசு ஊழியர்களின் நேரம் சக்தி, சம்பளம் எப்படியெப்படியெல்லாம் வீணாக்கப்படுகின்றது பாருங்கள். ஜாமீன் கொடுப்பதற்கு இந்த மாதிரி நிபந்தனைகள் எல்லாம் விதிக்க எந்த சட்டப்பிரிவு, நீதிபதிக்கு அதிகாரம் தருகிறது என்று யாராவது சட்ட வல்லுநர்தான் விளக்க வேண்டும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|