பொருளியல் கல்வித் தொடர் -22
பாடம் ஒன்று – சரக்கு தியாகு
அடிமைச் சமூகத்தின் பண்டப் பரிமாற்றம் உணர்த்துவது என்ன?
சரக்குகளின் மாய்மாலம் என்று மார்க்ஸ் எதைச் சொல்கிறார் என்று பார்த்தோம். இந்த மாய்மாலம் சரக்குப் பொருளாக்க அமைப் பிற்கே உரியது. பண்டங்கள் சரக்கு களாக - சந்தைக்கான விற்பனைப் பொருள்களாக - ஆக்கம் செய்யப் படாத நிலைமைகளில் மாய்மாலம் தோன்றுவதே இல்லை. இதற்கு எடுத்துக்காட்டாக ராபின்சன் குருசோவின் கதையைப் பார்த்தோம். கதைச் சான்றிலிருந்து மெய்ச் சான்றுகளுக்கு வருவோம். முதலில் அடிமைச் சமூகத்தை எடுத்துக்கொள்வோம். இச்சமூகத் தின் ஒரு முனையில் அடிமைகளும் மறுமுனையில் அடிமையுடைமை யாளரான ஆண்டைகளும் உள்ளனர்.
அடிமைக்கும் ஆண்டைக்கு மான உறவு சார்புநிலை உறவாகும். அடிமைச் சமூகத்தின் எல்லா உறவுகளும் இதே போன்ற சார்புநிலை உறவுகளே. பண்ணை யடிமைகளுக்கும் பிரபுக்களுக்கு மான உறவு, பாளையக்காரர் களுக்கும் மாமன்னர்களுக்குமான உறவு, பாமர மக்களுக்கும் பாதிரிமார்களுக்குமான உறவு... எல்லாம் சார்புநிலை உறவுகளே.
அடிமைக்கு ஆளுடைமைச் சுதந்தரம் (Personal liberty) இல்லை. ஆளுடைமைச் சுதந்தரம் என்பதைக் காட்டிலும் ஆள்வகைத் தன்னுரிமை (Personal liberty) என்பது பொருத்தமாய் இருக்கும் என நினைக்கிறேன். தான் தனக்குச் சொந்தமாய் இருக்கும் உரிமையே தன்னுரிமை. அடிமைக்கு அவரின் உடல், உள்ள ஆற்றல்கள் சொந்த மில்லை. அவர் ஆண்டைக்குச் சொந்தமென்றால், அந்த ஆற்றல்களும் ஆண்டைக்கே சொந்தம். அடிமை என்பவர் ஆண்டைக்கு எல்லா வகையிலும் சொந்தமான ஒரு மாட்டைப் போன்றவர். அடிமை மனிதப் பிராணியே தவிர ஆள்(Person) அல்லர்.
ஆள்வகைத் தன்னுரிமையற்ற சார்புநிலைதான் அடிமைச் சமூகத்தில் நடைபெறும் பொருளாக்கத்தின் தனித்தன்மையாகும்.
முதலாளியச் சமூகத்தில் ஒரு கூலித் தொழிலாளி உழைத்தாக வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அவரை யாரும் அடித்து வேலை வாங்க முடியாது. ஆகவே அவரது உழைப்பைக் கட்டாய உழைப்பு என்று சொல்வதற்கில்லை. அவர் தானும் தன் குடும்பமும் உயிர் வாழ்வதற்காக உழைப்பது தவிர வேறு வழியில்லை என்பதற் காகவே உழைக்கிறார். பட்டினிச் சவுக்கு அவரை வேலை செய்யும் படி விரட்டுகிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.
அடிமையின் நிலை வேறு. உழைக்கலாமா, வேண்டாமா என்று முடிவு செய்யும் உரிமை சுதந்திரத் தொழிலாளிக்குள்ள உரிமை - அவருக்கு இல்லை. அவரது உழைப்பு கட்டாய உழைப்பு ஆகும். அடிமை உழைத்து ஆக்கிடும் பொருள் நேரடியாக ஆண்டைக்குப் போகிறது. அது சரக்காவதில்லை. அதாவது சந்தைக்குப் போவதில்லை. அடிமை விளைவிக்கும் நெல் அதன் இயற்கை வடிவத்திலேயே, அதாவது நெல்லாகவே கை மாறுகிறது. அது இயற்கை வடிவம் அல்லாத ஒரு சமுதாய வடிவம் பூணுவதில்லை. இங்கு அதன் இயற்கை வடிவமும் சமூக வடிவமும் ஒன்றே. அடிமை ஆண்டைக்குக் கொடுப்பவை பொருள்வடிவச் சேவைகள் ஆகின்றன; ஆண்டை அடிமைக்குக் கொடுப்பவை பொருள்வடிவக் கொடுப்புகள் ஆகின்றன.
சரக்குப் பொருளாக்கம் செய்யும் உழைப்பைப் போலவே கட்டாய உழைப்பும் காலத்தால் அளக்கப்படுகிறது. பண்ணை யடிமை பிரபுவுக்கு ஆற்றும் சேவையில் தன் சொந்த உழைப்புச் சக்தியின் குறிப்பிட்ட அளவைச் செலவிடுகிறார். இது அவருக்கே நன்கு தெரியும்.
நம் சாதியச் சமூகத்தில் கீழ்ச் சாதியினரான பண்ணைய அடிமைகள் மேற்சாதியினரான பண்ணையாருக்குச் செலுத்தும் காணிக்கைகளை எடுத்துக்கொள் வோம். பொங்கல் போன்ற பண்டிகையின்போது ஆண்டை வீட்டுக்குப் புல் போடுவது, கோழி போடுவது போன்ற வழக்கங்கள் இன்றளவும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உள்ளன. பறையரோ பள்ளரோ ஆன பண்ணையடிமை கள்ளர் அல்லது உடையாரான பண்ணையார் வீட்டுக்குப் போடும் புல்லுக் கட்டோ கோழியோ சரக்குகள் அல்ல. அதே போல் கள்ளரோ உடையாரோ ஆன பண்ணையார் பள்ளரோ பறையரோ ஆன பண்ணையடிமைக்குத் தரக்கூடிய வேட்டி துண்டு அல்லது வேறு பொருள்கள் சரக்குகள் அல்ல. இங்கு நடைபெறும் பரிமாற்றம் வெளிப்படையாய் மனிதர்களுக் கிடையிலான சமூக உறவாகத் தெரிந்து விடுகிறது. இது கோழி அல்லது புல்லுக்கட்டுக்கும் வேட்டி துணிக்கமான உறவாகத் தோற்றமளிப்பதில்லை. அதாவது மனிதர் களுக்கிடையிலான சமூக உறவு பொருள்களுக்கிடையிலான உற வாகத் தோற்றம் காட்டும் மாய்மாலம் இங்கே இல்லை.
இறைப்பற்றாளர்கள் சாமிக்கோ பூசாரிக்கோ தரும் காணிக்கை, சாமியோ சாமியாரோ வழங்கும் ஆசி மற்றும் பிரசாதம்... இந்தப் பரிமாற்றங்களும் சரக்குப் பரிமாற்றங்கள் அல்ல என்பதால், சரக்குகளின் மாய்மாலத்திற்கு இடமில்லை (சாமியார்களின் மாய்மாலம் என்பது வேறு செய்தி). சரக்குப் பொருளாக்கம் இல் லாத நிலைமைகளில் மனிதர்களுக் கிடையிலான சமூக உறவுகள் பொருள்களுக்கிடையிலான சமூக உறவுகளாக வேடம் பூணுவதில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது.
இலக்கணம்
உழைப்பின் ஆக்கங்கள் சரக்குகளாக மாறாதபோது சரக்குகளின் மாய்மாலம் என்பதற்கு இடமில்லை என்பதே அடிமைச்
சமூகத்தின் பண்டப் பரிமாற்றம் உணர்த்துவது ஆகும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|