கரும்புலி இலக்கியா வீர நினைவுக்கு...
படையணியொன்றை நிறுவப் போகிறோம்
புன்னகை சேது
இருப்பவை யாவற்றையுமிழந்து
துயரங்கள் நிறைந்தாடும்
இருள்பொழுதொன்றில்
திரட்டத் தொடங்கியிருக்கிறோம்
எங்களது படையை...
இப்படை
சார்லஸ் படையணி, இம்ரான் பாண்டியன் படையணி
மற்றும் கிட்டு பீரங்கிப் படையணியைப் போல
வலிமையானதாக இருக்கும்
இப்படையின் பெண்கள் பிரிவு
பெருங்கோபம் கொண்டதாகயிருக்கும்
மேலும்,
அவர்கள் கோலமிடும் நளினத்துடனும்
பூச்சரம் தொடுக்கும் நேர்த்தியுடனும்
எறிகணைகளைக் கையாள்வார்கள்
சர்வதேச உளவுத்துறையின் சதிகளை
முறியடிப்பதோடு...
57, 58 படைப்பிரிவுகளை...
தேர்ச்சக்கரத்தில் சிக்கும் பூசணியைப் போல்
சிதறடிப்பார்கள்
மஞ்சள் துகிலாடும் மாலைப்பொழுதுகளில்
காஸ்ட்ரோவின் படைகளைப் போல
மக்கள் யாவருக்கும் கல்வி போதிப்பார்கள்
அழகுகள் குவிந்து கிடக்கும் குடிசைகளில்
சிற்றுண்டி முடித்துவிட்டுக்
குழந்தைகளைக் கொஞ்சுவார்கள்
உச்சந்தலையில் உளியடிக்கும் பச்சிப்பொழுதுகளில்
"சே'வின் வர்த்தக ஊழியர்களைப் போல
உழவர்களோடு நெல்லறுப்பார்கள்
தக்காளி பறிப்பார்கள்
கரும்பு வெட்டுவார்கள்
போரில்லாமல் புலரும் பொழுதுகள் யாவிலும்
சாவேசின் இராணுவத்தைப் போல
காய்கறிகளை வாகனங்களிலேற்றிச்
சந்தைக்குச் செல்வார்கள்
தோட்டாக்கள் தூவும் சமர்ப்பொழுதுகளில்
எதிரிகளை அலைக்கழித்து சோர்வடையச் செய்து
அழித்தொழிக்கும்
கெரில்லாக்களாகவும் இருப்பார்கள்
விதையடி விதையாய் முளைக்கும்
புலிகளைப் போலவே இப்படையணி இருப்பதால்
அவசியமாய்த் தேவைப்படுகிறது
எண்ணிலடங்காத் துப்பாக்கிகளும்
சயனைடுக் குப்பிகளும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|