Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
ThamizhthesamSamooka Neethi Thamizh Thesam
பிப்ரவரி 2009
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்...
தியாகு

விதைக்கின்றோம் விதைக்கின்றோம்
முத்துக்குமாரை விதைக்கின்றோம்!
புதைக்கின்றோம் புதைக்கின்றோம்
காங்கிரசைப் புதைக்கின்றோம்”
- இது வீரத் தமிழன் முத்துக்குமாரின் இறுதிப் பயணத்தில் மாணவர்களும் இளைஞர்களும் எழுப்பிய முழக்கம்!

தமிழகம் எங்கும் கொழுந்து விட்டெரியும் காங்கிரசு - எதிர்ப்பு உணர்ச்சியின் ஒரு குறியீடே இது! தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் தன்னெழுச்சியாகப் போராடும் தமிழர்களின் நெஞ்சில் பற்றிய வெஞ்சின நெருப்பு காங்கிரசைச் சுட்டெரித்துக் கொண்டிருப்பதில் வியப்பில்லை.


சிறப்பாசிரியர்

தியாகு

வெளியீட்டாளர் - ஆசிரியர்:

சிவ.காளிதாசன்

தொடர்புக்கு:

சிவ.காளிதாசன்
1434 (36/22), இராணி அண்ணா நகர்,
சென்னை - 600 078
பேசி: 9283222988
மின்னஞ்சல்: [email protected]


ஓரிதழ் ரூ.8
ஓராண்டு ரூ.100
ஆறாண்டு ரூ.500
புரவலர் ரூ.1000

தமிழீழ ஆதரவுப் பொதுக்கூட்ட உரைக்காகத் தளைப்படுத்தப்பட்ட தோழர்கள் பெ. மணியரசன் கொளத்தூர் மணி, சீமான் ஆகிய மூவரும் ஈரோடு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது திரண்டு வந்த தமிழ் உணர்வாளர்கள் காங்கிரசு அடையாளங்களை அடித்து நொறுக்கியதோடு, காங்கிரசுக்காரர்களையும் விரட்டித் துரத்தினர்.

மதுரையில் போராடிய வழக்கறிஞர்கள் காங்கிரசுக்காரர்களோடு நேரடியாகவே மோதினார்கள். தமிழகத்தின் பல பகுதிகளிலும் காங்கிரசுக் கொடியை எரித்தனர். காங்கிரசுத் தலைவி சோனியா காந்தியின் உருவப் பொம்மைகளையும் படங்களையும் தீயிட்டுக் கொளுத்தினர்.

இந்தக் காங்கிரசு எதிர்ப்பு தமிழகத்தின் எந்த அரசியல் கட்சியும் திட்டமிட்டு வளர்த்தது அன்று. தமிழீழ மக்களை இனப் படுகொலை செய்ய சிங்கள அரசு நடத்தி வரும் கொடும் போருக்கு காங்கிரசுத் தலைமையிலான இந்திய அரசு எல்லா வகையிலும் துணை போவதைத் தமிழக மக்கள் தெளிவாகத் தெரிந்து வைத்துள்ளார்கள். இந்த உண்மையை மூடி மறைக்க தமிழக முதல்வர் கருணாநிதி செய்த முயற்சி எதுவும் பலிக்கவில்லை. இந்திய அரசுதான் சிங்களத்திற்கு முட்டுக் கொடுத்து இந்தப் போரை நடத்தி வருகிறது என்பதை அறிந்து தமிழக மக்கள் காங்கிரசுக்கு எதிராகப் பொங்கி எழுந்துள்ளனர்.

தமிழீழ ஆதரவுப் பேரெழுச்சி காங்கிரசு எதிர்ப்பு உணர்ச்சியாக வெளிப்பட்டு வருவது 1965ஆம் ஆண்டின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது. அந்த மொழிப் போர்தான் தமிழகத்தில் காங்கிரசு ஆட்சிக்கு சவக்குழி தோண்டியது. 1967 தேர்தலில் காங்கிரசு அடைந்த தோல்விக்கு 65 மொழிப் போராட்டமே முதற்பெருங் காரணம். அந்தத் தேர்தலில் பெருந்தலைவர் காமராசரை அவரது சொந்தத் தொகுதியில் ஒரு மாணவரே தோற்கடித்தார். முதலமைச்சராக இருந்த பக்தவச்சலம் தோற்றுப் போனார். அவரது அமைச்சரவையில் ஒரே ஒருவரைத் தவிர அத்தனை பேரும் மண்ணைக் கவ்வினர்.

அறுபத்தைந்தாம் ஆண்டின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் சாரத்தில் ஒரு தமிழ்த் தேசிய எழுச்சியே ஆகும். தமிழ்த் தேசிய விடுதலைக்கு வழி சமைப்பதாக அமைந்திருக்க வேண்டிய அந்த எழுச்சி வெறும் மாநில ஆட்சி மாற்றத்தில் போய் முடிந்தது. இப்போது தமிழீழ விடுதலைக்கு ஆதரவாகத் தமிழக மக்கள் நடத்தி வரும் போராட்டமும் சாரத்தில் ஒரு தமிழ்த் தேசிய எழுச்சியே ஆகும். இந்தியத் தேசியத்தின் முதற்பெரும் அரசியல் ஆற்றலாக இன்றளவும் காங்கிரசே நீடிப்பதால் இந்தியத் தேசிய எதிர்ப்பு காங்கிரசு எதிர்ப்பாக வெளிப்படுவதில் வியப்பில்லை.

1965-67இல் காங்கிரசு வீழ்த்தப்பட்டாலும் அழிக்கப்பட்டு விடவில்லை. காங்கிரசை வீழ்த்தி வெற்றி கண்ட திராவிட முன்னேற்றக் கழகமே காங்கிரசுக்குப் புத்துயிர் அளிக்கும் வேலையையும் செய்தது என்பது தமிழக வரலாற்றின் பெரிய நகைமுரண்களில் ஒன்று. முதலில் கருணாநிதியும், பிறகு எம்.ஜி.ஆரும் திமுக சார்பிலும் அதிமுக சார்பிலும் காங்கிரசைத் தூக்கிச் சுமந்தனர். இந்தப் போக்கு இன்றளவும் தொடர்கிறது. செத்துக் கொண்டிருக்கும் காங்கிரசுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆக்சிசன் செலுத்திக் கொண்டிருப்பவர் ‘டாக்டர்’ கலைஞர். அவர் கைவிட்டு விட்டால் காப்பாற்றுவதற்குக் காத்திருப்பவர் ‘டாக்டர்’ ஜெ. ஜெயலலிதாவாக இருக்கலாம்.

ஆனால் தமிழகத்தில் காங்கிரசை இனி யாராலும் காப்பாற்ற முடியாது என்ற நிலையை நாம் ஏற்படுத்த வேண்டும். காங்கிரசு சாகும் போது கூடவே தற்கொலை செய்து கொள்ள விரும்புகிறவர்களைத் தடுத்துக் காப்பாற்றும் வேலை நமக்கில்லை. இப்போதைய காங்கிரசு எதிர்ப்பு அலையை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம். சீர்காழியில் காங்கிரசுக் கட்சிப் பொறுப்பாளர் ஒருவரே இந்திய அரசின் இரண்டகத்தைக் கண்டித்துத் தீக்குளித்த செய்தி காங்கிரசுத் தலைமைக்குக் கடும் எச்சரிக்கையாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் பழிவெறி பிடித்தலையும் சோனியா காந்தியும், அவருக்கு அடிவருடிகளாகவும் எடுபிடிகளாகவும் இருந்துவரும் தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன் போன்றவர்களும் இந்த உண்மையை உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஒரு வெள்ளைக்காரன் நிறுவிய காங்கிரசுக் கட்சியை அழிக்கும் வேலைக்கு ஒரு வெள்ளைக்காரியே தலைமை வகிப்பது பொருத்தமே.

Eelam agitation தமிழகத்தில் காங்கிரசு அழிய வேண்டும்; இந்த அழிவு தமிழினப் பகைவர்களுக்கும் துரோகிகளுக்கும் பாடமாக அமைய வேண்டும். ஆனால் காங்கிரசு இன்னும் அழிந்துவிடவில்லை, அது உயிரோடுதான் துள்ளிக் கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். தன்னைத் தோளில் சுமக்கத் தமிழகத்தில் ஆளிருக்கிற வரை அது தொடர்ந்து துள்ளிக் கொண்டுதான் இருக்கும். யார் தோளில் ஏறி வந்தாலும் அதனை அறவே வெட்டிச் சாய்த்திடத் தமிழக மக்கள் விழிப்பாய் இருக்க வேண்டும். நாற்காலியை நாடி அரசியல் நடத்தும் கட்சிகள் வாக்குகளைத் தின்றே வாழ்க்கை நடத்துகின்றன. காங்கிரசின் வாழ்க்கையை முடிப்பதற்கும் அந்த வாக்குகளையே பயன்படுத்த வேண்டுமென தமிழகம் எங்கும் தமிழின உணர்வாளர்கள் கருதுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

யாருக்கு வாக்களித்தாலும், காங்கிரசுக்கு மட்டும் வாக்களிக்கக் கூடாது என்று மக்கள் கருதுகிறார்கள். இந்த எண்ணத்திலிருந்து நாமும் விலகி நிற்கவில்லை. அதேபோது இந்திய வல்லாதிக்கத்தை முறியடித்து தமிழ்த் தேசிய இறைமையை மீட்டெடுப்பதற்கான போராட்ட உத்திகளில் தேர்தல் அரசியலுக்கு இடமில்லை என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கிறோம். நமது தேர்தல் புறக்கணிப்பு நிலைப்பாட்டின் அடிக்கூறுகள்: 1. இப்போதைய இந்திய அரசமைப்புக்கு உட்பட்டு நடைபெறும் தேர்தலின் வாயிலாக நாம் தமிழ்த் தேசிய சமூக நீதிப் புரட்சியை நிறைவு செய்ய முடியாது. 2. நாம் இந்தத் தேர்தலில் போட்டியிடவோ போட்டியிடும் எவரையும் ஆதரிக்கவோ இயலாது. 3. தேர்தல் கூட்டணிகள் அனைத்துமே சந்தர்ப்பவாதக் கூட்டணிகள் தாம். நாம் எந்தக் கூட்டணியிலும் சேரமாட்டோம். எந்தக் கூட்டணியையும் ஆதரிக்க மாட்டோம்.

இந்தத் தேர்தல் புறக்கணிப்பு நிலைப்பாட்டை இப்போதும் நாம் மாற்றிக் கொள்ளவில்லை. மாற்றிக் கொள்ளத் தேவையும் இல்லை. அதே போது காங்கிரசைத் தனிமைப்படுத்தி ஒழித்துக் கட்டுவதற்குத் தேர்தல் களத்தை நாமும் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதாவது யாருக்கும் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுக்காமலே காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள் என்று அறைகூவல் விடுக்கலாம்.

இப்படிச் செய்வதின் மூலம் காங்கிரசை வீழ்த்துவதோடு மற்றக் கட்சிகளுக்கும் வாக்குப் பெட்டி வழியாகவே எச்சரிக்கையும் விடுக்கலாம். காங்கிரசு எதிர்ப்புப் பரப்புரையைத் தமிழீழ ஆதரவுப் பரப்புரையாகவும் தமிழ்த் தேசியப் பரப்புரையாகவும் நிகழ்த்த முடியும்.

தமிழகத்தில் வெவ்வேறு களங்களிலும் தளங்களிலும் நடைபெற்று வரும் தமிழீழ ஆதரவுப் போராட்டம் உணர்வு நிலையில் ஒன்றுபட்டிருப்பினும் கோரிக்கை அளவில் வேறுபட்டிருப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். பல போராட்டங்கள் ‘போரை நிறுத்து, ஈழத் தமிழர்களைக் காப்பாற்று!’ என்ற அளவோடு கட்டுப்பட்டிருக்கின்றன. போரை நிறுத்தச் சொல்வதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் போரை நிறுத்திய பிறகு என்ன செய்வது? போர் நிறுத்தத்தைக் கண்காணிப்பது யார்? போரை நிறுத்திய பின் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது என்றால் யாரும் யாரும் பேசுவது? எது பற்றிப் பேசுவது? பேசி முடிவெடுப்பதாக வைத்துக் கொண்டால் அந்த முடிவைச் செயல்படுத்துவதற்கு என்ன உறுதிப்பாடு?

இந்த வினாக்களுக்குரிய விடை தெரியாமல் வெறும் போர்நிறுத்தம் என்ற கோரிக்கை தமிழர்களுக்குப் பயன்படாது என்பது மட்டுமன்று, அவர்களுக்கு எதிரான சூழ்ச்சிகளுக்கே பயன்பட்டு விடும் ஆபத்தும் உண்டு. முல்லைத் தீவில் புலிப் படையோடு இருந்து வரும் பொதுமக்களைப் பிரித்து வெளியே கொண்டுவருவதற்காகவே அண்மைக் காலத்தில் இந்திய அரசும் சில அய்ரோப்பிய அரசுகளும் போர் நிறுத்தம் பற்றிப் பேசி வருகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். போர் நிறுத்தத்தை முன்மொழியும் அதே மூச்சில் இவர்கள் புலிகளைச் சரணடையச் சொல்கிறார்கள் அல்லது ஆயுதங்களைக் கீழே போடச் சொல்கிறார்கள் என்பதிலிருந்தே இவர்களின் உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.

போர்நிறுத்தம் தேவை! நிலையான போர் நிறுத்தம் தேவை! சிங்கள அரசு போர் நிறுத்தத்தை மீறுவதற்கு முன்பிருந்த நிலைக்கு அதன் படைகள் திரும்பிச் செல்ல வேண்டும். அடுத்து சிங்களப் படைகள் தமிழ்ப் பகுதிகளை விட்டு அறவே வெளியேற வேண்டும். அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற விருப்பத்தில் குறையொன்றும் இல்லை. ஆனால் அந்தத் தீர்வு ஈழத் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளும்படியான தீர்வாக இருக்க வேண்டும்.

ஈழத் தமிழர்களின் அமைதியையும் நல் வாழ்வையும் நாடுகிறவர்கள் இப்படித்தான் சிந்திக்க வேண்டும். போர் நிறுத்தம் என்பதற்கு மேல் பேச முடியாமல் பலரும் பேச்சு நிறுத்தம் செய்து விடுகிறார்கள். அவர்களுக்கு என்ன மனச் சிக்கல் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஈழத் தமிழர் போராட்டத்தின் முனைப்பான இரு உண்மைகளை இவர்கள் அறிந்தேற்க மறுக்கிறார்கள் :

1. தமிழீழ மக்கள் நடத்திக் கொண்டிருப்பது ஒரு தேசிய விடுதலைப் போராட்டம்;
2. இப்போராட்டத்தில் மக்களின் முன்னணிப் படையாகக் களத்தில் நிற்பது பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளே!

ஈழத்தில் நடப்பது பயங்கரவாதம் என்றும், விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்றும் பகைவர்கள் பழிதூற்றும் போது நம் போர்நிறுத்தவாதிகள் பதில் சொல்லாமல் ஒதுங்கிக் கொள்கின்றனர். நம்மைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல என்பதிலும், அவர்கள் நடத்திக் கொண்டிருப்பது விடுதலைப் போராட்டம் என்பதிலும் தெளிவாக இருக்கிறோம். விடுதலைப் புலிகள் மீதான தடை பொய்க் காரணங்களைச் சொல்லி விதிக்கப் பட்டது என்பதைப் பலமுறை எடுத்துக்காட்டி உள்ளோம். விடுதலைப் புலிகளைத் தடை செய்வதற்கு இந்தியாவில் சட்டமே இல்லை என்பதுதான் உண்மை நிலை.

இந்தியா தலையிட்டு ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கை இப்போதைய நிலையில் ஏமாற்றுத் தனமானது அல்லது ஏமாளித் தனமானது. இந்தியா தலையிட்டுத்தான் சிங்களப் படைகளைக் கொண்டு தமிழர்களை அழித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையை மாற்றி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியாவைத் தலையிடச் செய்வது எப்படி?

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அறிந்தேற்பதின் வாயிலாகவும், தமிழீழ விடுதலைப் புலி கள் மீதான தடையை நீக்குவதின் வாயிலாகவுமே இந்தியா ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தலையிட முடியும். இந்த இரு நிபந்தனைகளையும் நிறைவேற்றாமல் எப்படியாவது இந்திய அரசைக் கொஞ்சிக் கெஞ்சி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாற்றும் முயற்சி வீண். ஆகவே, ஈழத் தமிழர் நலனைக் கருதிக் காங்கிரசையும் இந்தியத் தேசியத்தையும் நாம் எதிர்ப்பது கொள்கை சார்ந்ததாக இருக்க வேண்டுமானால், நாம் தெளிவான கோரிக்கை களை முன்னெடுத்துப் போராட வேண்டும். காங்கிரசின் தமிழினத் துரோகம் என்பது ஈழத் தமிழர்கள் தொடர்பானது மட்டுமன்று; தமிழகத் தமிழர்கள் தொடர்பாகவும் காங்கிரசின் இரண்டகத்தை நாம் தோலுரித்துக் காட்ட வேண்டும்.

மதச் சார்பின்மையின் பெயரால் காங்கிரசை ஆதரிக்கும் வாய்ப்பிய (சந்தர்ப்பவாத) நிலைப்பாட்டை எப்போதும் போலவே இப்போதும் புறந்தள்ளுகிறோம். இந்தியத் தேசியம் என்பதே இந்துத்துவ உள்ளடக்கம் கொண்டதுதான் என்பது நம் நிலைப்பாடு. காங்கிரசை ஒழிப்பதோடு இந்தியத் தேசியம் ஒழிந்து போய் விடாது என்பதை நன்கறிவோம். அதேபோது இந்தியத் தேசியத்தின் முதன்மை ஆற்றலாகிய காங்கிரசை ஒழிப்பது தமிழ்த் தேசியத்திற்கு வலுவூட்டும் என்பது உறுதி.

காங்கிரசைத் தமிழகத்திலிருந்து வேரோடும் வேரடி மண்ணோடும் களைந்தெறிய இப் போதைய சூழல் தரும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வோம். காங்கிரசைப் புதைப்பதின் மூலமாகவே முத்துக்குமாரை விதைப்பது என்னும் முழக்கம் பொருள் உடைத்தாகும். காங்கிரசைக் கலைக்கச் சொன்னவர் காந்தி யார். காங்கிரசை ஒழிப்பதுதான் முதல் வேலை என்று 1925இலேயே சூளுரைத்தவர் பெரியார். அந்தப் பெருமக்களின் விருப்பம் விரைவில் ஈடேறட்டும்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com