சிங்காரவேலரின் அறிவியல் தொண்டு
பா. வீரமணி
சிங்காரவேலர் ஓர் அரசியல் தலைவர், தொழிற்சங்கத் தலைவர் என்பதைத்தான் பலர் அறிவர்; ஆனால் அவரொரு சிறந்த அறிவியல் சிந்தனையாளர் என்பதையும், அறிவியல் சிந்தனைகளைப் பரப்புவதில் பெரும் பணியாற்றியவர் என்பதையும் சிலரே அறிவர். சிங்காரவேலர் ஓர் அறிவியல் துறைப் பேராசிரியரைப் போன்று அறிவியலில் மூல நூல்களை நன்கு கற்றவர். அரசியல், தொழிற் சங்கப் பணிகளுக்கிடையில், தம்முடைய தள்ளாத வயதிலும் அறிவியல் கருத்துகளைப் பரப்புவதைத் தம் கடனாகக் கொண்டிருந்தார் அவர். பொது அறிவியலை மட்டுமின்றி, அறிவியலைச் சார்ந்த உளவியல், மானிடவியல், வானவியல் போன்ற துறைகளையும் கற்று அத்துறைகளைப் பற்றிப் பொதுமக்கள் உணரும் வகையில் பற்பல கட்டுரைகளையும் எழுதி வந்தார்.
அரசியல் தலைவர்களாக இருப்பவர்கள் அறிவியலைப் பரப்புவதில் கவனம் செலுத்துவது மிகக் கடினம். ஆனால், சிங்காரவேலர் இதற்கு விலக்கானவர். பல துறைகளில் அவர் ஒரு முன்னோடியாக விளங்கியதைப் போன்று அறிவியலைப் பரப்புவதிலும் முன்னோடியாக விளங்கினார். அறிவியலில் அவர் மிகுந்த ஈடுபாடு காட்டியதற்குக் காரணம் அவரது சமூக அக்கறையேயாகும். அந்தச் சமூக அக்கறை மக்களின் மூடநம்பிக்கையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டது. அதனாற்றான் அவர் இறுதிவரை அப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரலானார்.
1905ஆம் ஆண்டிற்கு முன்பாகவே அவர் டார்வினின் பரிணாமக் கொள்கையை விரித்துப் பேசியுள்ளார். அப்பேச்சினைக் கேட்ட தமிழ்த் தென்றல் திரு.வி.க. பெரிதும் வியந்து, அன்றே சிங்காரவேலர் தமக்கு ஆசிரியர் ஆனதாகவும், தான் அவருக்கு மாணவனாக மாறியதாகவும் தம் வாழ்க்கைக் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார். சிங்காரவேலர் அறிவியல் சிந்தனைகளைக் குடியரசு, புரட்சி, பகுத்தறிவு போன்ற இதழ்களில் எழுதியதோடு மட்டுமின்றி, அறிவியல் கட்டுரைகளுக்கென்றே 1934இல் தமது 75ஆம் வயதில் புது உலகம் என்ற பெயரில் மாதம் இருமுறை வெளிவரும் இதழைத் தொடங்கினார்.
முதல் இதழில் அவர் கீழுள்ளவாறு எழுதியிருந்தார்: Pure Science - சுத்த விஞ்ஞானத்தை எடுத்துரைக்க தமிழ் பாஷையில் ஒரு தனித்த பத்திரிகைகூட இல்லை; இந்த அவசியத்தைப் பூர்த்தி செய்ய ‘புது உலகம்' என்ற பத்திரிகை வெளிவந்ததைப் போற்றுகின்றோம். பெரும்பான்மையான மக்கள் சயன்சின் மார்க்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளாத தோசத்தால் மூட ஒழுக்கங்களாலும், ஜாதி - சமய துராசாரங்களாலும் வாடி வதங்கி வருகின்றனர். நிழலைக் கண்டு பயப்படும் குதிரை, ஆடு, மாடுகளைப் போல் நமது நாட்டு மக்கள், பூமி நிழலால் மறைக்கப்பட்டு உண்டாகும் சந்திர கிரகணத்தையும், சந்திரன் நிழலால் மறைக்கப்பட்டு உண்டாகும் சூரிய கிரகணத்தையும் கண்டு பயப்படும் அறியாமையை என்னவென்று கூறுவது? இந்தக் குறைகளை நீக்குவதற்கு ஒரு விஞ்ஞானப் பத்திரிகை வேண்டுமென்ற கோரிக்கை இந்தப் ‘புது உலகம்' தோற்றத்தால் நிறைவேறுமென்று நம்புகின்றோம். - (புதுஉலகம் - மே - 1935)
இக்கூற்றை நோக்கினால் அறிவியலை மக்களிடம் பரப்புவதில் அவர் எவ்வளவு நாட்டம் கொண்டுள்ளார் என்பதை நன்கு உணரலாம். 76 வயதிலும் இத்துணை அழுத்தமாக எழுதுகிறாரெனில் அவரது சமூக அக்கறை நன்கு புலப்படுகிறதன்றோ! அவரது அறிவியல் கண்ணோட்டம் எத்துணை விரிந்து பரந்தது என்பதற்கு ஒரு நிகழ்வை நோக்கினால் இனிது புலப்படும். தந்தி அனுப்பும் முறையைக் கண்டுபிடித்த இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானியான சர் அம்பிரோஸ் பிளமிங் (1849 - 1945) என்பவர், ஒரு முறை மனிதத் தோற்ற வரலாற்றைக் குறிப்பிட்டுக் கூறும்போது, மனிதன் டார்வின் கொள்கையின்படி குரங்கிலிருந்து பிறந்தவனல்லவென்றும், பைபிளில் குறிப்பிட்டிருப்பதைப் போன்று கடவுளால்தான் மனிதன் படைக்கப்பட்டானென்றும் கூறினார்.
இதனை யறிந்த அந்நாட்டின் மற்றொரு விஞ்ஞானி சர் ஆர்தர்கீத் என்பவர் அவர் கூற்றை மறுத்துப் பேசியதோடு மட்டுமன்றி அதனைக் கண்டித்து ஒரு நூலையும் எழுதினார். அந்நூலைப் பற்றி ‘மார்னிங் போஸ்ட்', ‘டெய்லி டெலிகிராப்' ஆகிய ஆங்கில நாட்டு இதழ்களில் கட்டுரைகள் வெளி வந்துள்ளன. சென்னையிலிருக்கும் சிங்காரவேலர், தகவல் தொடர்பு சரியாக இல்லாத அக்காலத்திலேயே அந்தச் செய்தி இதழ்களையும், பிளமிங் எழுதிய டார்வினிசமும் அதன் கண்டனவாதிகளும் என்ற நூலையும் படித்திருக்கிறார். இதன் வழி அவரது பரந்த நூற்பயிற்சியையும், உடனுக்குடன் அறியும் அறிவுப் பசியையும் அறியலாம். ஆம், அவர்தான் சிங்காரவேலர். அதனால்தான் பாரதிதாசன் அவரைக் கடல் வான் ஆழ் அகலக் கல்வி கற்றவன் என்று போற்றினார்.
சிங்காரவேலர் அந்நூல்களைக் கற்று வாளாயிராமல், அவரும் பிளமிங்கை மறுத்து ஒரு கட்டுரை எழுதினார். பிளமிங் டார்வினிசத்தைக் கொச்சைப்படுத்துவதற்கு அவரது மத மூட நம்பிக்கையே காரணம் என்றார். மேலும், கடவுள் உண்மையிலேயே இருந்து, மனிதனைப் படைத்திருப்பாரேயானால் அனைத்து நாட்டு மனிதரும் ஒரே தோற்றத்தை உடையவராகத் தானே இருக்க வேண்டுமென்றும், ஆனால் எல்லா மனிதரும் அப்படி இல்லாமல், வெவ்வேறு நிறத்தையும் ஏன் கொண்டிருக்க வேண்டும் என்றும் கேட்கிறார்: அதாவது மங்கோலியரும், கறுப்பர்களும், காக்கியர்களும் வெவ்வேறு தோற்றமும் வெவ்வேறு நிறமும் கொண்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறார்.
கடவுளால் மனிதர் படைக்கப்பட்டிருந்தால் எல்லோரும் ஒரே மாதிரியாகவே இருந்திருப்பர். ஆனால், அவர்கள் அவ்வாறு இல்லாமல் வெவ்வேறு விதமாய் இருப்பதற்கும், அவர்களின் நிறமும் குரலும், மொழியும் வேறுபடுவதற்கும் அந்தந்த நாடுகளின் தட்பவெப்ப நிலையும், சுற்றும் சூழலுமே காரணம் என்கிறார். ஆகவே, இவற்றிற்குக் கடவுள் காரணமாக இல்லையென்பது அவரது முடிபு. மேலும், மனிதன் மனிதக் குரங்கிலிருந்துதான் வந்துள்ளான் என்பதற்கு ஒரு நல்ல காரணத்தை அவர் சுட்டிக் காட்டுகிறார். அதாவது மனிதன் தாயின் கருப்பையில் உருவாகும்போது, ஐந்து மாதத்தில் அவனுக்கு வாலொன்று தோன்றுவதற்குக் காரணம் என்ன? அவனின் மூதாதையர் மனிதக் குரங்கிலிருந்து தோன்றியதுதான் என்று அவர் விளக்குகிறார். இதுதான் அறிவியல் உண்மை. அக் கட்டுரையை அவர் முடிக்கும் போது, ஹெர்பட் ஸ்பென்சர் எந்த அறிவு மனிதனுக்கு மிக முக்கியமானது? என்று வினா எழுப்பி அறிவியல் ஒன்றே மிக முக்கியமானது என்று விடையளித்ததைக் கூறிக் கட்டுரையை நிறைவு செய்கிறார்.
நம் மக்களிடத்தில் கைரேகை பார்த்து எதிர்காலத்தைக் கணிக்கும் பழக்கம் பல நூற்றாண்டுகளாக உள்ளது. அப்படிப் பார்க்கும் பழக்கம் ஒரு மூடநம்பிக்கையே என்பதை அவர் அறிவியல் அடிப்படையில் விளக்கியுள்ளார். கைரேகைகள் குரங்குகளுக்கும் உள்ளது; மனிதருக்கும் உள்ளது. குரங்கும் மனிதனும் உணவு எடுக்கவும், கருவிகளைப் பயன்படுத்தவும் கைகள் இலகுவாக முடங்குவதற்காகவே ஏற்பட்டவை கைரேகைகள் என்கிறார் அவர். மரத்தில் கொம்புகளையும் கிளைகளையும் பிடிப்பதற்கும், தாவுவதற்கும் அந்த ரேகை மடிப்புகள் கைகளுக்கு நன்கு உதவுகின்றன என்கிறார் அவர். இந்த ரேகைகள் அந்தக் குரங்கிலிருந்து நமக்கு வந்தவையாகும். பின்னர் நாம் கருவிகளை நன்கு பயன்படுத்தும்போது அவற்றில் சில மாற்றம் ஏற்பட்டு நம் உருவத்திற்கு ஏற்றவாறு அவை அமைந்துவிட்டன என்கிறார்.
இவற்றைக் கொண்டு நம் எதிர்காலத்தைக் கணிப்பது மூடத்தனம் என்கிறார் அவர். கைரேகை மட்டுமின்றி, மனிதனின் ஐம்புலன்களும், மூளையும், இயற்கையைக் கூர்ந்து நோக்கியதாலும், பற்பல கருவிகளைப் பயன்படுத்தியதாலும் ஏற்பட்டவை என்று டார்வின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதிய ‘இயற்கையின் இயங்கியல்' (Dialectics of Nature) என்ற நூலில் எங்கெல்ஸ் குறிப்பிட்டிருப்பது நம்மால் கருதத்தக்கது. அதன் சுருக்கத்தைத் தான் சிங்காரவேலரும் இங்கு விளக்கியுள்ளார்.
பொதுமக்களிடத்து மட்டுமில்லாமல், படித்த மக்களிடத்தும் சில மூடநம்பிக்கைகள் உள்ளன; அவை காலந்தோறும் தொடருகின்றன. அவற்றையும் சிங்காரவேலர் கவனத்தில் கொண்டு விடை கூறியுள்ளார். நம் நாட்டில் பனிக்கட்டி மழை சில நேரங்களில் பெய்வதைப் போன்று, அக்காலத்தில் சில இடங்களில் மீன் மழையும் ரத்த மழையும் (செந்நிறச் சாந்து மழை) பெய்துள்ளன. இவற்றைக் கொண்டு நம் மக்கள் காலம் கெட்டுவிட்டதென்றும், ஏதோ ஆபத்து நடக்க இருக்கிறதென்றும், கடவுளின் கோபத்தால் நடந்ததென்றும் பலவாறாகக் கூறுவர்; இதுவும் மத வழியாக உருவான மூட நம்பிக்கையே ஆகும். இந் நம்பிக்கை நம்நாட்டில் மட்டுமன்றிப் பல நாடுகளிலும் உள்ளது. குறிப்பாக அறிவுத் துறையிலும், அறிவியல்துறையிலும் சிறந்து விளங்கிய இங்கிலாந்து நாட்டிலும் இவை போன்ற மூடநம்பிக்கைகள் உண்டு; அவற்றை ரசல் தம் நூலொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்தில் ஒரு முறை பிளேக் காய்ச்சலும், தீ விபத்துகளும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. இங்கிலாந்தின் அரசு, அதன் உண்மைக் காரணத்தைக் கண்டுபிடிக்காமல் வேறு காரணத்தைக் கூறியது. அதாவது, தாமஸ் ஆப்ஸ் எழுதிய நூல்களினால் கடவுள் கோபமடைந்துள்ளதே பிளேக் காய்ச்சலும், தீ விபத்துகளும் ஏற்படுவதற்குக் காரணம் என்றனர். இதனால் தாமஸ் ஆப்ஸ் நூல்களுக்குத் தடை விதித்து, அந்நூல்களை இனி இங்கிலாந்தில் அச்சடிக்கவோ விற்பனை செய்யவோ கூடாதென்றனர். இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ஜார்ஜுக்குப் பைத்தியம் பிடித்தபோது, அதன் உண்மைக் காரணத்தை உணராமல், அவருக்குப் பிசாசு பிடித்ததாக நம்பினர். இவ்வாறான மூடச் சிந்தனைகள் பரவியதற்குக் காரணம் சமய நம்பிக்கைகளே ஆகுமென பெர்ட்ராண்ட் ரசல் தம் நூலில் குறித்துள்ளார்.
இவ்வாறே இரத்த மழையும், மீன் மழையும், கல் மழையும் நம்நாட்டில் பெய்தபோது, அதற்குக் காரணம் கடவுள் கோபமே என்றனர். நன்கு படித்தவர்களும்கூட மூடநம்பிக்கைக்கு மயங்குகின்றனர். சிங்காரவேலரின் நண்பரான ஒரு வழக்கறிஞர், ஒரு முறை அவர் ஊரில் அக்கம் பக்கத்தில் யாரும் கல்லெறியாத நிலையில், மழையுடன் கற்கள் சேர்ந்து கல்மழை எப்படிப் பெய்தது என்றாராம். மேலும், உலகில் அநியாயமும் அக்கிரமும் பெருகி விட்டதால் கடவுள் கோபமடைந்து கல்மழையைப் பெய்ய வைத்திருக்கிறாரெனப் பொதுமக்கள் பரவலாகப் பேசிக் கொள்கிறார்கள் என்றாராம். ஆனால், சிங்காரவேலர் அதனை மறுத்து அதற்கான உண்மைக் காரணத்தைக் கூறியுள்ளார்.
அதாவது, மழைக் காலத்தில் புயல் ஏற்படும்போது, குறிப்பிட்ட இடங்களில் சூறைக் காற்று, பம்பரம்போல் மிகுந்த விசையுடன் சுழன்று வீசும்போது அது ஓரிடத்திலுள்ளக் கற்களை மேலே எடுத்துச் சென்று இன்னோரிடத்தில் மழையுடன் சேர்த்துப் பெய்விக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் குளிர் நாடுகளில் அடிக்கடி ஏற்படும். இதுவே, நம்நாட்டிலும் சில இடங்களில் ஏற்படுகிறது என்கிறார். ஒருமுறை இரத்தம் போன்று மழை பெய்ததால், வானுலகில் தேவர்கள் தங்களுக்கிடையே போரிட்டுக் கொண்டதால் அதனால் ஏற்பட்ட இரத்த இழப்பே மழையாய்ப் பெய்ததாக மக்கள் நம்பியுள்ளனர்.
இதனைப் போன்றே ஒருமுறை மழையுடன் மீன்கள் சேர்ந்து விழுந்ததால் அதனை மீன் மழை என்றனர். இவற்றிற்குக் காரணம் என்ன? என்று சிங்காரவேலரை நோக்கிக் குடியரசில் சிலர் கேள்வி கேட்டுள்ளனர். அதற்குச் சிங்காரவேலர் அதே இதழில் விடை கூறியுள்ளார். புயல் வருவதற்கு முன்னர் ஏரி, குளம், குட்டைகள் நீரின்றி வற்றியிருக்கும். அப்போது மீன்கள் நீரின் மேல்மட்டத்திலிருக்கும்போது புயற்காற்று சுழன்று சுழன்று வீசும்போது மீன்கள் காற்றால் மேலே தூக்கப் பெற்று அவை வேறொரு இடத்தில் மழையுடன் சேர்ந்து விழுகின்றன. சில நேரங்களில் மழையின்றியோ சிறு தூரலுடனோ மீன்கள் நிலத்தில் விழுவதுண்டு. இதனையே மீன்மழையென்று பொதுமக்கள் கூறுவர் என்கிறார்.
இரத்த மழை சற்று வித்தியாசம் உடையது என்கிறார் அவர்; அதாவது பெருங்காற்றால் மண்ணிலுள்ள சிவப்புத் தூள் வான மண்டலத்திற்குக் கொண்டுபோகப் பெற்றுத் தொங்கிக் கொண்டே நகர்ந்து கொண்டிருக்கும். அந்நேரத்தில் கனமழை பெய்வதால் வான மண்டலத்திலுள்ள சிவப்புத் தூசுகள் மழையோடு கலந்து விழுகின்றன; பூமியில் இவ்வாறு விழுந்த மழை இரத்தம்போல் காட்சியளிக்கிறது. இதையே மக்கள் இரத்த மழையென்று கூறுகிறார்கள். சில நேரம் செம்மண் சுரங்கங்களில் குவிக்கப்பெற்ற செம்மண்கள் (Iron ORE Heaps) கூடச் சுழற்காற்றால் மேலே கொண்டு போகப் பெற்று சிவந்த மழையாகப் பெய்திருக்கலாம்.
முன்னர் குறித்த மழைகளைப் பற்றி நம்மைக் கேட்டால் விடை கூற முடியாது. அதற்குப் பரந்த நூற்பயிற்சியும், அறிவியலறிவும் வேண்டும். அவை சிங்காரவேலரிடம் இருந்ததால் அவரால் விடை கூறமுடிந்தது எனலாம். இதனைப் போன்றே கோழி முந்தியதா? முட்டை முந்தியதா? எனச் சிலர் சிங்காரவேலரை நோக்கிக் குடியரசு இதழில் கேள்வி கேட்டனர். இந்தக் கேள்விக்கு எல்லோரும் மிக எளிதாகக் கோழிதான் முந்தி என்பர். கோழி, முட்டையை இடுவதால் அவ்வாறு எளிதில் விடை கூறிவிடலாம். கோழி முந்தியதென்றால், அந்தக் கோழி எப்படித் தோன்றியது? என்று நாம் கேட்போம். அதற்கு உடனே பெரும்பாலார் அந்தக் கோழியைக் கடவுள்தான் படைத்தார் என்று எளிதாகக் கூறிவிடுவர். ஆனால், உண்மை அதுவன்று. உண்மையில் முட்டைதான் முதலில் தோன்றியது. ஆனால், எப்படித் தோன்றியது என்று கேட்டால் நம்மால் விடை கூறமுடியாது. பலர் அதற்கும் கடவுள்தான் காரணம் என்பர். ஆனால் அதுவும் உண்மையில்லை.
சிங்காரவேலர் இதற்குச் சிறந்த முறையில் பதிலளிக்கிறார். அதாவது, பறவைகள் ஊர்வனவற்றிலிருந்தும், ஊர்வன தவளைக் கூட்டங்களிலிருந்தும், தவளைகள் மீன்களிலிருந்தும், மீன்கள் புழு-பூச்சியிலிருந்தும், புழு-பூச்சிகள் சிறு கிருமிகளாலும் சிறுகிருமிகள் நுண்முட்டைகளிலிருந்தும் உயிர் பெற்றவை என டார்வின் கூறுவதை அவர் விளக்குகிறார். இந்தச் சிறுமுட்டைகள்தான் அனைத்து உயிர்கள் தோன்றுவதற்கும் காரணமாகும். தாவரங்களும் அந்தச் செல்களிலிருந்தே உருவாகின்றன. விதைகளும் முட்டை போன்ற வடிவுடையனவே ஆகும். முட்டைகளும், விதைகளும் தாதுக்களால் உண்டானவை. குறிப்பாக, முட்டையானது, பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு, கார்பன் ஆகியவை, தட்ப - வெப்ப இயற்கைச் சூழலால் கூட்டுச் சேர்க்கையாகி முட்டை வடிவம் பெறுவதாக அவர் கூறுகிறார். இந்த முட்டை எல்லா உயிர்களுக்கும் எப்படி மூலமுதலோ, கோழிக்கும் அந்த முட்டைதான் மூலமுதலாகும். எனவே கோழிக்கு முந்தியது முட்டையேயாகும். சிங்கார வேலர் இவ்வாறு பற்பல கேள்விகளுக்கெல்லாம் அறிவியல் அடிப்படையில் விடை கூறியுள்ளார்.
நம் மக்களிடத்துப் பல நூற்றாண்டுகளாக நீடித்து வரும் பேய் - பிசாசு நம்பிக்கை, சாமியாடல், மந்திரம் வைத்தல், பில்லி சூனியம், ஆன்மா, சகுனம் பார்த்தல், குறி பார்த்தல், மை வைத்துப் பார்த்தல் ஆகியவற்றையும் மற்றும் இந்து - கிறித்துவம், இசுலாம், புத்தம், சமணம், சைவம், வைணவம் போன்ற மதங்களிலுள்ள மூடநம்பிக்கைகளையும் அறிவியல் அடிப்படையில் ஆய்ந்து அரிய விளக்கங்களை அவர் எடுத்துக் காட்டியுள்ளார். நமக்கு அறிவியல் கண்ணோட்டம் உருவாவதற்காக, எந்தப் பொருளையும் நிகழ்வையும் ஏன், எதற்கு, எப்படியென்று உற்று நோக்கி ஆராய வேண்டும் என்கிறார். குறிப்பாக, உற்று நோக்கல், சோதித்துப் பார்த்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு பொருளை நோக்கினால் தவறான நம்பிக்கை ஏற்படாமல் சரியான முடிவு கிடைக்கும் என்கிறார்.
இவற்றை அவர், தாம் எழுதிய ‘மெய்ஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும்' என்ற நூலில் விரிவாக ஆய்ந்துள்ளார். விளக்கத்தை அந்நூலில் காண வேண்டுகிறேன். தமிழகத்தில் அறிவியல் உணர்வை வளர்க்க முயன்றவர்களில் சிங்காரவேலரே முதல் மனிதராவார். மதவாத சக்திகளும் மத மூடநம்பிக்கைகளும் பெருகுவதற்கு ஓரிரு கட்சிகள் இந்நூற்றாண்டிலும் பகீரத முயற்சி செய்கின்றன; இந்த மத மூட உணர்வால் ஏற்கெனவே இந்தியச் சமூகம் பல வேதனைகளையும் சோதனைகளையும் கண்டுள்ளது. இந்நிலை தொடருமானால் இந்தியா பல பின்னடைவுகளையும் தோல்விகளையும் சந்திக்கும் என்பதில் ஐயமில்லை. மதவாத சக்திகள் நாட்டு முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பதால்தான், பாபர் மசூதி - இராம சென்ம பூமி, இராமர் பாலம் போன்ற பிரச்சனைகள் எழுகின்றன. இவற்றையெல்லாம் சுக்கு நூறாக்கி மனித சமூகம் அமைதியாகவும் செம்மையாகவும் வாழ வேண்டுமென்றால், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் சிந்தனைகள் பரக்கப் பரவ வேண்டும்; பரப்புதல் வேண்டும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|