ஈரோடு ஜவுளித் தொழிலாளர்கள் சங்கப் போராட்டம் வெற்றி!
ஈரோட்டில் ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்களில் இத்தொழிற்சங்கத்தைச் சார்ந்த ஏறக்குறைய 200 தொழிலாளர்கள் "பீஸ் செக்கிங்' பணியில் உள்ளனர். நிறுவன முதலாளிகள் இருபால் தொழிலாளர்களுக்கும் அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்சக் கூலியைக்கூடத் தருவதில்லை. ஆனால் நாள் ஒன்றுக்கு 10 மணி நேரம் அவர்கள் பணிபுரிந்தாக வேண்டிய நிலை. தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு வருடமும் சனவரி மாதத்தில் கூலியை உயர்த்தித் தருவது வழக்கமாய் இருந்தது. ஆனால் நடப்பாண்டில் (2008) 6 மாத காலமாகியும் கூலி உயர்த்தப்படாமலே இருந்தது. தொழிலாளர் கள் தொழிற்சங்கமாய் ஒன்றிணைந்ததுதான் முதலாளிகளின் இப்போக்கிற்கான ஒரே காரணம் ஆகும்.
தொழிற்சங்கத்தின் சார்பில் இது குறித்து 18-01-08 மற்றும் 19-01-08ஆம் நாள்களில் அனுப்பப்பட்ட மடல்களுக்கு முதலாளிகளிடமிருந்தும் தொழிலாளர் நல அலுவலரிடமிருந்தும் எவ்வித பதிலும் இல்லை. இந்த நிலையில் 01-06-08ஆம் நாள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் கூடியது. சூன் 23ஆம் நாளுக்குப் பிறகு காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்குவதென ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. 01-07-2008ஆம் நாள் தொடங்கிய போராட்டம் 16-07-2008 வரை நீடித்தது. தொடர்ந்த போராட்டத்தின் விளைவாக ஈரோடு டெக்ஸ்டைல்ஸ் ட்ரேடர்ஸ் அசோசியேசன் மற்றும் ஈரோடு ஜவுளித் தொழிலாளர்கள் சங்கம் தொழில் தகராறுகள் சட்டம் 1947 பிரிவு 18 (1)ன் கீழ் 18-07-2008ஆம் நாள் ஒப்பந்தம் செய்து கொண்டன:
நிறுவனங்கள் ஒப்பந்த நாளான 17.07.2008ஆம் நாளிலிருந்து அடிப்படைச் சம்பளம் மற்றும் இதரப் படிகள் உள்ளடக்கிய தொகையாக ஆண் தொழிலாளர்களுக்கு ரூ. 110, பெண் தொழிலாளர்களுக்கு ரூ. 90 உயர்த்தி வழங்கும்.
இரு பால் தொழிலாளர்களுக்கும் சர்வீஸ் அடிப்படையில் 1-04-2008 தேதிப்படி 6 முதல் 10 வருடங்கள் பணியாற்றியவர்களுக்கு ரூ. 50, 11 வருடங்களும் அதற்கு மேலும் பணியாற்றியவர்களுக்கு ரூ. 60, கூலி உயர்த்தித் தரப்படும்.
கூலி உயர்வானது 01-04-2008 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் 14-04-2008 முதல் அரியர்ஸ் கணக்கிட்டு வரும் வித்தியாசக் கூலித் தொகையை 30-07-2008ஆம் நாளுக்குள் தொழிலாளர்களுக்குப் பட்டுவாடா செய்தாக வேண்டும். இந்த இடைப்பட்ட நாள்களில் வேலை செய்த நாள்களின் அடிப்படையில் அரியர்ஸ் கணக்கிடப்படும்.
வேலை செய்யும்போது ஏற்படும் விபத்துகளுக்கான மருத்துவச் செலவையும் இன்சூரன்சையும் நிறுவனங்களே ஏற்றுச் செயல்படுத்தும்.
டெக்ஸ்டைல்ஸ் டிரேடிங் நிறுவனங்களை உரிமையாளர்கள் நிரந்தரமாக மூட நேரிடும் போது தொழிலாளர்களுக்கு வேலை இழப்பீட்டிற்குரிய சர்வீஸ் தொகையை அசோசியேசன் வழங்கும்.
கூலி உயர்வு தொடர்பான ஒப்பந்தமானது 01.-04-2008ஆம் நாள் முதல் வருகிற 31-03-2010 வரை நடைமுறைப்படுத்தப்படும்.
மேற்கண்ட மொத்த ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுக்குச் சார்பான முடிவுகளும் எட்டப்பட்டன. தொழிற்சங்கப் போராட்டம் இந்த அளவில் வெற்றியை ஈட்டியிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் போது தொழிற்சங்கம் சார்பில் தோழர்கள் இரா. விசயகுமார், தி. சரவணன், அ. சக்தி ஆகியோர் பங்கேற்றனர். தமிழகத் தொழிலாளர் முன்னணி இப்போராட்ட வெற்றிக்கு வழிகாட்டியது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|