ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி -அண்ணாவின் கனவு கலைஞரின் கனிவு.
இளைய சுப்பு
2006ஆம் ஆண்டு, ஆட்சிக்கு வந்த உடன் கலைஞர் கையெழுத்திட்ட முதல் ஆணை, ஒரு கிலோ அரிசி 2 ரூபாய் என்பதுதான். தேர்தல் வாக்குறுதியை அந்தக் கையெழுத்தின் மூலம் நிறைவேற்றிக் காட்டினார் கலைஞர். இப்போது 1 கிலோ அரிசி 1 ரூபாய்க்கே விற்கப்படும் என்னும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு பேரறிஞர் அண்ணா கண்ட கனவு இது. முதலில் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி, பிறகு படிப்படியாக மூன்று படி என்று அண்ணா அன்று அறிவித்தார். எனினும் பல்வேறு அரசியல் பொருளியல் சிக்கல்களால் அது நிறைவேறாமல் போயிற்று. இன்று அந்தக் கனவிற்கு மிக நெருக்கமாய் இந்த அறிவிப்பைக் கலைஞர் தலைமையிலான தமிழக அரசு அறிவித்துள்ளது.
பத்திரிகைகள் பாராட்டும், பண்பாளர்கள் வரவேற்பார்கள் என்றுதான் நாடு எதிர்பார்த்தது. ஆனால் என்னதான் செய்தாலும், கலைஞரைப் பாராட்ட மனமில்லாதவர்களாகவே, பெரும்பான்மையான இன்றைய ஊடகங்கள் உள்ளன. “அரிசி உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் இருந்து வாங்கி, உற்பத்திச் செலவை விடக் குறைவாக ரேசன் கடையிலே தரும்போது, அதனைப் பயன்படுத்தும் பயனாளிக்கு அதன் அருமை தெரியாமல் போய்விடும்” என்று கவலைப்படுகிறது தினமணி. இது பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பும் முயற்சி என்றும், அரிசி கடத்தல்காரர்களுக்கே இந்த அறிவிப்பு மகிழ்ச்சி தரும் என்றும் தினமணியின் கட்டுரை தன் புலம்பலை வெளிப்படுத்தி உள்ளது.
ஜுனியர் விகடன் இதழோ, இந்த அறிவிப்பைக் கேலி செய்து, சில செய்திகளும், சில கேலிப்படங்களும் வெளியிட்டுள்ளது.
மக்களுக்கு நன்மை செய்து இந்த ஆட்சி நல்ல பெயர் வாங்கிவிடுமோ என்கிற கவலையே இந்த பத்திரிகைகளில் வெளிப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியை ஒழித்துவிட்டு மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் உள்ள அடங்காத ஆசையே இப்படியெல்லாம் உருப்பெறுகிறது.
அவர்கள் ஆசை நிறைவேறப்போவதில்லை என்பதை காலம் விரைவில் காட்டும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|