தலையங்கம் - சட்ட திருத்தம்
நாடாளுமன்றத்தில் அண்மையில் தனது அறிக்கையைத் தாக்கல் செய்த அலுவலக மொழிக்கான நாடாளுமன்றக் குழு, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் வழங்கப்படும் உத்தரவுகள் மற்றும் தீர்ப்புகளை இந்தி மொழியிலும் வெளியிடுவதற்கேற்றவாறு சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டுமென்று பரிந்துரையை முன்வைத்துள்ளது.
மக்கள் பிரதிநிதிகள் நிறைந்துள்ள நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கருத்தைக் கேட்டறியாமலும் அரசியல் கட்சிகளிடம் ஆலோசனை நடத்தாமலும் அவசர அவசரமாக இந்த அறிக்கை அவையின் முன் வைக்கப்பட்டுள்ளது. அதோடு அறிக்கை சட்ட ஆணையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாடு விடுதலை அடைந்த பின்னர் பலமுறை இந்தியைத் திணிக்கும் முயற்சிகள் நடப்பதும், அந்த முயற்சிகள் முறியடிக்கப்படுவதும் நாமறிந்த ஒன்றுதான்.
இப்போது மீண்டும் தலையெடுக்க முயற்சித்திருக்கும் ‘இந்தித் திணிப்பு முயற்சியை தி.மு.கழகக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். அதன்பின் நடுவண் அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் பிரதமரையும் சந்தித்து குழுவின் அறிக்கையை அமல்படுத்தக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளனர். இந்தி பேசாத மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்திய உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, குழுவின் அறிக்கையைச் செயல்படுத்தமாட்டோமென பிரதமர் உறுதியளித்துள்ளார்.
ஆனால் பா.ஜ.க. வோ இந்த இந்தித் திணிப்பை வரவேற்றுள்ளது. இந்தியாவில் ஒரு மொழி ஒரு கலாச்சாரத்தை நிறுவ வேண்டுமென்ற பாஜகவின் எண்ணம் மீண்டுமொருமுறை நிருபணமாகியுள்ளது. பாஜகவின் இந்த எண்ணம் வேற்றுமையை விதைக்கவே உதவுமேயொழிய ஒருபோதும் ஒற்றுமையை நிலைநாட்ட உதவாது.
தமிழ்மொழி உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளிலேயே உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் அமைய வேண்டுமென தமிழக முதலமைச்சர் கலைஞர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ள நிலையில் வெளிவந்திருக்கும் குழுவின் அறிக்கை மீண்டும் இந்தி பேசாத மக்களின் உணர்வுகளை சீண்டிப் பார்க்க முயல்கிறது.
நீதிமன்ற உத்தரவுகள் அந்தந்த மாநில மக்களின் மொழியினில் வெளியிடப்படும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டுமென குழுவின் அறிக்கை கூறி இருக்குமானால் அது பாராட்டுக்குரியதாக இருந்திருக்கும். ஆனால் இந்தி மட்டுமே என்னும் அழுத்தம்தான் கண்டனத்திற்குரியது. ஏற்றுக்கொள்ளமுடியாதது.
மக்களின் மொழி உணர்வை உரசிப் பார்ப்பதும் வேற்று மொழியைத் திணிக்கப் பார்ப்பதும் விரும்பத்தகாத விளைவுகளுக்கே வழிவகுக்கக்கூடும் என்பதனை ஏற்கனவே நிகழ்ந்த சம்பவங்கள் உணர்த்தியுள்ளன. இருந்தபோதும் மீண்டும் மீண்டும் இது போன்ற முயற்சிகள் தலை தூக்க அனுமதிப்பது ஆபத்தானது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அம்மக்கள் பேசும் மொழிகளில் நீதி வழங்குவதுதான் நியாயமான நடவடிக்கையாக இருக்கமுடியும். நீதிமன்றங்களில் அலுவல் மொழி எது என்ற விவாதம் மீண்டும் கிளம்பி இருப்பதால் உடனடியாக நடுவண் அரசு அந்தந்த மாநில மொழிகளிலேயே நீதிமன்றச் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் சட்டத்திருத்ததைக் கொண்டு வரவேண்டும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|