வாழும் வயதில் சாகும் எண்ணம் ஏன்?
க. மயில்வாகனன்
தினம் நாளிதழ் படிக்கும் பழக்கம் உடையவர்களுக்குத் தெரியும் தற்கொலைச் செய்திகள் இடம் பெறாத நாள்களே இல்லை என்று. ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது - ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் 3 பேர்வீதம் தற்கொலைக்கு முயற்சி செய்கின்றனர். அதில் குறிப்பாக 15 வயது முதல் 29 வயது உடையவர்களே - அதிலும் ஆண்களே அதிகம் என்கிறது அந்தப் புள்ளிவிவரம்.
தமிழர்கள் பொதுவாகவே உணர்ச்சி வயப் படக்கூடியவர்கள். அரசியல் தலைவர் இறந்தாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ அதற்காகத் தற்கொலை செய்து கொள்பவர்கள். குறிப்பாக. பள்ளி, கல்லூரி, காதல், வேலை வாய்ப்பின்மை, போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி இவற்றின் தோல்விகளில் இருந்து மீள்வதற்கும் வழி தெரியாமல் தற்கொலைகள் நிகழ்கின்றன. இதற்கு முக்கியக் காரணிகளாக இருப்பவை இரண்டு. ஒன்று வீடும், வீட்டுச் சூழலும், இன்னொன்று கல்வியும் கல்விச் சூழலும். இன்றைக்கு பெரும்பான்மையான வீடுகள் வெறும் மணல், சிமெண்ட் கற்களால் கட்டப்பட்டவை. அவற்றின் பண மதிப்பு மட்டுமே கவனிக்கப்படுகின்றது. ஆனால், அவை உழைப்பாலும் அன்பாலும், பாசத்தாலும், கட்டப்பட்டவை என்பதை மறந்து விடுகிறோம்.
இன்றைய பெற்றோர்கள் குழந்தைகளாக இருந்த காலத்தில் அவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் பெரிய இடைவெளி இருக்கவில்லை. அதனால் பெற்றோர்கள் குழந்தைகளின் படிப்பைவிட நல்ல பழக்க வழக்கங்களுக்கும் பண்புக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
மேலும் தங்களுடைய தினசரி வீட்டு வேலைகளில் குழந்தைகளை ஈடுபட வைத்து, குடும்ப வரவு செலவுகளில் உறவுக்காரர்களின் கொடுக்கல், வாங்கல் விசயங்களை எல்லாம் சொல்லிக் கொடுத்து. தனக்குப் பின் நீதான் குடும்ப நிர்வாகம் என்று புரிய வைத்தனர். அந்தப் புரிதலின் பின்னணியில் தனக்காக வாழ்க்கை முறையினை அமைத்துக் கொண்டார்கள். எந்தப் பிரச்சனையானாலும் அதை தீர்வை நோக்கி நகர்த்தி ஓர் அளவேணும் போராடக் கற்றுக் கொடுத்தார்கள்.
இன்று பெற்றோர் தம்முடைய குழந்தைகள் முதல் மதிப்பெண் பெறவேண்டும் என்பதற்காக அந்தக் குழந்தை எது செய்தாலும், சரி என நினைக்கின்றார்கள். அதனால் அந்தக் குழந்தைகள் பிடிவாதம் பிடித்து சுயநலமாக இருப்பதையும், மனிதாபிமானம் இல்லாமல் இருப்பதையும் பெற்றோர்கள் கண்டு கொள்வதில்லை. நல்ல குழந்தைக்கு அடையாளம் நல்ல மதிப்பெண்கள் வாங்குவது மட்டுமன்று. படிப்பறிவு வேறு, பட்டறிவு வேறு எனப் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மழலைப் பேச்சிலும், செயலிலும் மகிழ்ந்து போகும் பெற்றோர்கள், நடிகர்கள் மாதிரி பேசு, நட, ஆடு என்று ஊக்குவிப்பதும், திரைப்படம், தொலைக்காட்சி, இணையதளம், மிகுந்துவிட்ட இன்றைய சூழலில் குழந்தைகள் நடிகர்களை முன் மாதிரியாகக் கொள்வதும் இயல்பாகிவிட்டது.
பொருளாதார நெருக்கடியில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லவேண்டிய அவசியம் இருந்தாலும் பிள்ளைகள் வளர்ப்பில் அவசியம் ஓர் அளவுக்கேனும் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். அதை விடுத்து அழுகின்ற குழந்தையைத் தொலைக் காட்சியின் முன் அமரவைத்து அமைதிப்படுத்துவது அலுவலகம் செல்லும்போது குழந்தைகளைக் காப்பகத்தில் விடுவது, வீட்டில் வேலைக்கார ஆயாவிடம் விடுவது போன்றவற் றால் பெற்றோர்களின் அன்பும் ஆதரவுமற்ற சூழலில் குழந்தைகள் வளர்கின்றனர். காலப் போக்கில் இது அவர்களின் மனநிலையில் வெற்றிடத்தை ஏற்படுத்துகின்றது. எந்த வயதானாலும் கைக்குழந்தைகளாக எண்ணிக்கொண்டு, எந்த வேலையையும் பழகிக்கொள்ள விடுவதில்லை. அதனால் தன் வேலைகளுக்கே பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையில்... தான் நினைத்தது நடக்கவில்லை, தான் கேட்டது கிடைக்கவில்லை... என்ற நிலை வரும்போது... வளரும் குழந்தைகளுக்கு ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடிவதில்லை... தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அவர்கள் தற்கொலை முயற்சி செய்கிறார்கள். இன்றைய கல்விமுறையின் பாடத்திட்டங்களை பாடம் நடத்திப் புரியவைக்க முடியாமல்...
குழந்தைகளை மிரட்டியும், அடித்தும். வீட்டுப்பாடங்களை, ஒரு தடவைக்குப் பத்துத் தடவை எழுதச் சொல்லியும் படிக்கச் சொல்லியும், ஒரு விலங்கை எப்படி மனிதன் பழக்கப்படுத்துவானோ அதுபோல குழந்தைகளை ஆக்கிவிடுகின்றனர்.
சிட்டுக்குருவி தலையில் பனங்காய் வைப்பதாகவே இன்றையக் கல்வி அமைகிறது.
ஆக, குழந்தைகள் வளர்ப்பு முறையிலும், கல்விமுறையிலும் உள்ள குறைகளே, தற்கொலைக்கு வித்திடுகின்றன. பெற்றோர்களே குழந்தைகளின் கதாநாயகர்களாக இருக்க வேண்டும். அதற்கு குழந்தைகளின் நம்பகத்தன்மையை பெறவேண்டுமானால் குழந்தைகளுக்கு கென்று தாயும் தந்தையும் நேரத்தை ஒதுக்கி அவர்களுடன் நண்பர்கள் போல் பழகவேண்டும். இந்த அன்பும், அரவணைப்பும் அக்குழந்தைக்கு காலப்போக்கில் தன்னம்பிக்கையையும், போராட்டக்குணத்தையும் வளர்க்க உதவும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|