தினமணி - பார்ப்பன பனியாவுக்கான நடுநிலை
வே.மதிமாறன்
புரட்சிக்கு முந்தைய சோவியத்தில் ‘ஸ்úனினயெ’ என்கிற புகழ்பெற்ற பதிப்பகம் மூடப்பட்டது. மேற்கத்திய இலக்கியம், ருஷ்ய இலக்கியம், பண்பாட்டின் வரலாறு இவை பற்றியெல்லாம் நிறையப் புத்தகங்கள் கொண்டு வந்த பதிப்பகம் அது. அந்தப் பதிப்பகம் மூடப்பட்டதில் மக்சீம் கோர்க்கிக்கு மிகுந்த மனவருத்தம். மீண்டும் அதுபோல் ஒரு பதிப்பகத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கோர்க்கிக்கு. ‘ஸ்னேனியெ’ பதிப்பகம் மூடப்பட்டது குறித்தும், புது பதிப்பகத்தின் தேவை குறித்தும் வலியுறுத்தி, தலைவர் லெனினிடம் மாக்சீம் கோர்க்கி முறையிடுகிறார். அதற்குத் தலைவர் லெனின்: ‘‘இலக்கியத்தில் நல்ல எதார்த்தவாதியாக இருக்கிறீர்கள். மக்களைப் பற்றிய மதிப்பீட்டில் கற்பனாவாதியாக விளங்குகிறீர்கள். பருத்த புத்தகங்களை வெளியிட இது சமயம் அன்று. பருத்த புத்தகங்களை ஆர்வத்துடன் படிப்பவர்கள் அறிவுஜீவிகள்தாம். அவர்களோ சோஷலிசத்திலிருந்து பின்வாங்கி மிதவாதத்தை நோக்கிச் செல்வதைக் காண்கி றோம். அவர்கள் தெரிந்தெடுத்துக் கொண்ட பாதையிலிருந்து அவர்களை நம்மால் அகற்ற முடியாது. நமக்குத் தேவையானைவை செய்தித்தாளும், துண்டுப் பிரசுரங்களும்.”
1907வாக்கில் கோர்க்கியிடம் தலைவர் லெனின் சொன்னது, இங்கே தமிழகத்தில் தந்தை பெரியாரின் காதுக்கு 1925இல் வந்து சேர்ந்தது போலும், 1925இல் ஆரம்பித்து 1973 வரை பெரியார் 25 பைசாவிற்கு, 50 பைசாவிற்கு, ஒரு ரூபாய்க்கு, இரண்டு ரூபாய்க்கு என்று நிறைய மலிவுப் பதிப்பில் சமூக ரீதியாக பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய எளிய மக்களின் உயர்வுக்காக, அந்த மக்களின் மொழிநடையி லேயே புத்தகங்களை வெளியிட்டார். குடியரசு, விடுதலை, உண்மை என்று பத்திரிகைகளை நடத்தினார். பெரியாரின் இயல்பு லெனின் சொன்னதற்குப் பொருத்தமாக இருந்தது. பத்திரிகையின் பணி என்ன என்பதற்கான வரையறை தமிழகத்தைப் பொறுத்தவரை பெரியார் நடத்திய பத்திரிகைகளே சான்று ஆகும். அவரிடம் நடுநிலை என்ற நாடகம் ஒரு போதும் இருந்ததில்லை. மதம், சாதி ஆகியவற்றின் இறுக்கமான பிடியிலிருந்து தமிழர்களைத் தளர்த்த தனது பத்திரிகைகளைப் பெரிதும் பயன்படுத்தினார் பெரியார்.
இன்னொரு புறம் சுதேசமித்திரன். இந்தப் பத்திரிகை அப்படியே பெரியார் பத்திரிகைகளுக்கு நேர் எதிர். பெரியார் ஒடுக்கப்பட்ட எளிய மக்களுக்காகப் பத்திரிகை நடத்தினார் என்றால், சுதேசமித்திரன் பார்ப்பன மேல் தட்டு வர்க்கத்திற்கான பத்திரிகை. இதன் ஒரே நோக்கம் ‘சுதந்திர தாகம்.’ இந்துப் பார்ப்பனத் தத்துவ அடிப்படையில் வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பது. ஏகாதிபத்தியத்திற்கு மாற்று முழுமையான இந்துப் பார்ப்பன ஆட்சி. கேவலத்திற்கு மாற்று கழிசடை.
காலம் மாறியது. சுதேசமித்திரன் விருப்பப்படியும், பெரியாரின் கணிப்புப்படியும் முழுமையான இந்து பார்ப்பன ஆட்சி ஏற்பட ஆயத்தமானது.
சுதேசமித்திரனின் சிந்தனை, முதலாளித்துவ வடிவம் பெற்றது. அது தன்னிடம் இருந்த ஜோதியை ராம்நாத் கோயங்கா என்கிற ஒரு முதலாளிக்கும் பகிர்ந்து கொடுத்தது. அந்த முதலாளி சுதேசமித்திரன் சிந்தனைக்கு முதலாளித்துவ முலாம் பூசினார்.
பனியா முதலாளி, பார்ப்பன ஆசிரியர் குழு.
இதோ தயாராகிவிட்டது, பார்ப்பன - பனியாவுக்கான ஒரு நடுநிலை நாளிதழ், தினமணி.
**
இதோ அன்று சுதேசமித்திரன் கொடுத்த ஜோதி, அப்படியே இன்றும் பிரகாசிக்கிறது.
1.8.2007 தேதியிட்ட தினமணியில் ‘சேது பந்தனம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை, “தென்னிந்தியர்களுக்கு காசி எவ்வளவு புனித ஸ்தலமோ, அவ்வாறே வட இந்தியர்களுக்கு ராமேஸ்வரம். ராமேஸ்வரத்தை ஒட்டியுள்ள கோடியக்கரை, தனுஷ்கோடி, சேதுக்கரை, தேவிபட்டினம் போன்ற புனித இடங்களுக்கும் புதிய இடர் வரலாம். 11.9.2001இல் நியூயார்க்கில் வணிக வளாகத்தை அல் காய்தாக்கள் கொய்து விட்டனர். ஆப்கானிஸ்தான் பாமியானில் இயற்கையான பாறையில் குடைந்து செதுக்கப்பட்ட 60 மீட்டர் உயரமுள்ள புத்தர் சிலையை தலிபான்கள் குண்டு வைத்து தகர்த்தார்கள். இந்தியாவைப் பொருத்தவரை குறிப்பாகத் தமிழ்நாட்டில் பாரம்பரியப் பெருமையுள்ள ராமர்பாலம் (எ) சேது அணையைத் தகர்க்கும் வளர்ச்சிப்பசி உண்மையில் தலிபான் போர் வெறியைவிடக் கொடுமையாக உள்ளது. அந்தப் பரமபிதாவாகிய சேதுமாதவன் மகாவிஷ்ணுதான் மீண்டும் ஓர் அவதாரம் எடுத்து மன்னார் வளைகுடாவில் சேது பந்தனத்தைக் காப்பாற்ற வேண்டும்.” இந்தக் கட்டுரையை எழுதியவர் பெயர் ஆர்.எஸ். நாராயணன் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. உண்மையில் அவர் ஆர்.எஸ்.எஸ். நாராயணனாக இருக்கிறார்.
எப்போதுமே பார்ப்பனர்கள் தங்கள் நலன் சார்ந்த அரசியலை நேரடியாகச் சொல்ல மாட்டார்கள். நாட்டின் மீதும் மக்களின் மீதும் உள்ள அக்கறையில் சொல்வது போலவே நடிப்பார்கள். ‘இட ஒதுக்கீட்டை வசதி படைத்த பிற்படுத்தப்பட்டவர்களும். தாழ்த்தப்பட்டவர்களுமே அனுபவிக்கிறார்கள். ஏழை தலித் புறக்கணிக்கப்படுகிறார்கள். அதனால் பொருளாதார ஒதுக்கீடே அவசியம்’ என்று பக்கத்து இலைக்கு பாயசம் கேட்பார்கள்.
அப்படித்தான் இந்த ஆர்.எஸ்.எஸ். நாராயணனும், இயற்கை வேளாண்மை நிபுணர் என்கிற போர்வையில் இந்த விஷவிதையைத் தூவி இருக்கிறார். (இயற்கை ஆர்வலர் என்றால் சேதுக் கால்வாய் திட்டம், சுற்றுச்சூழலுக்குப் பாதகமானது என்று மட்டும்தானே விளக்கி இருக்க வேண்டும்) ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் புத்தர் சிலையைத் தகர்த்தார்கள் என்று வருத்தப்படுகிறார். அது இருக்கட்டும். இந்தியாவில் இருந்த புத்தர் சிலைகளைத் தகர்த்தது யார்? உங்கப்பன் சேது மாதவன், மகா விஷ்ணுவும் அவனுடைய குரங்குக் கூட்டமும்தானே!.
இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளவை நாராயணனின் தனிப்பட்டக் கருத்துகள் அல்ல. அதுதான் தினமணியின் உள்ளார்ந்த உணர்வும். ராமர் பாலத்துக்கு ஆபத்து என்று தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டு ஜெயலலிதாவிற்கே பாயிண்ட் எடுத்துத் தந்து கொண்டிருக்கிறது புவர் சர்குலேஷன் தினமணி.
**
1939ஆம் ஆண்டு ஜ÷லை 8ஆம் நாள் எ.வைத்தியநாத அய்யர் என்பவர் தாழ்த்தப்பட்டவர்களோடு மதுரை மீனாட்சி கோயிலுக்குப் பிரவேசம் செய்தார் என்பதை ‘எங்க ஜாதிக் காரருக்கு ஜாதிய உணர்வே கிடையாது’ என்று ஒரு ஜாதி வெறியன் பெருமைப்படுவதைப் போல உயர்ஜாதிப் பெருந்தன்மையாக ஆலயப் பிரவேசத்தை தம்பட்டம் அடித்துக் கொள்கிறது, 2007 ஜ÷லை 8இல் தினமணி.
இதில், தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுள் நுழைந்தார்கள் என்பதைவிடவும், அது ஒரு பிராமணர் தலைமையில் செய்யப்பட்டது என்பதுதான் அந்த செய்திக்குத் தருகிற முக்கியத்துவத்தின் பின்னணி.
பார்ப்பன ஜாதி வெறிபிடித்த ராஜாஜியின் ஆலோசனையோடும், ஆதரவோடும்தான் இந்த ஆலயப் பிரவேசம் நடந்திருக்கிறது என்ற ஒன்றே போதும் இதன் கபடத் தனத்தைப் புரிந்து கொள்ள ஜெயேந்திரனையே கைது செய்தார் ஜெயலலிதா என்பதால், ஜெயலலிதாவைப் பார்ப்பன எதிர்ப்பாளராக எப்படிப் பார்க்க முடியாதோ அதுபோல்தான் இந்த ஆலயப் பிரவேச மோசடியும்.
சந்தடி சாக்கில் தினமணி இதுதான் முதல் அரிஜன ஆலயப் பிரவேசம் என்று இன்னொரு வரலாற்றுத் திரிபையும் செய்திருக்கிறது. அய்யர் - அய்யங்கார்களின் கூட்டுத் தயாரிப்பான மதுரை மீனாட்சி ஆலயப் பிரவேசத்திற்குப் பத்தாண்டு களுக்கும் முன்னால், சுயமரியாதை இயக்கத்தின் ஆலயப் பிரவேசம் நடந்திருக்கிறது.
ஈரோடு கோட்டை ஈசுவரன் கோயில் தேவஸ்தான கமிட்டியின் தலைவராக இருந்த தந்தை பெரியார், 4.4.1929 அன்று ஈசுவரன் கோயிலுள் தாழ்த்தப்பட்டவரை அனுமதிக்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார். அத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அன்று மாலையே பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த அ.பொன்னம்பலனாரும், குத்தூசி குருசாமியும் - தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தோழர்கள் ஈரோடு - கச்சேரி வீதி ஈசுவரன், மஞ்சைமேடு பசுபதி, கிருஷ்ணபாளையம் கருப்பன் ஆகியோரோடு கோயிலுள் நுழைந்தனர். ஆத்திரமுற்ற ஆதிக்க ஜாதியினர் அவர்களைக் கோயில் உள்ளேயே வைத்துப் பூட்டி விட்டனர். இரண்டு நாட்கள் கோயில் உள்ளேயேயிருந்த அவர்களுக்கு நாகம்மையார் தான் உணவு கொடுத்து அனுப்பியிருக்கிறார். வெளியூர் சென்றிருந்த பெரியார் திரும்பிய பிறகுதான், கோயில் சிறையில் இருந்து தோழர்கள் வெளியில் வந்தனர்.
******
கர்ணன் திரைப்படத்தில் ஒரு காட்சி. துரியோதனனின் அரசவைக்கு வர இருக்கிற கிருஷ்ணனுக்கு யாரும் எழுந்து மரியாதை செய்யக் கூடாது என்பது மன்னன் துரியோதனனின் உத்தரவு. அப்படியிருந்தும் கிருஷ்ணனின் வருகையின்போது விதுரன் எழுந்து மரியாதை செய்தது மட்டுமல்லாமல், கிருஷ்ணனை ஆதரித்தும் பேசுவார், உடனே துரியோதனன், விதுரனைப் பார்த்துக் கோபத்துடன், சிற்றப்பா, உடன் பிறந்த வியாதி நீ என்பான்.
இந்த வசனத்தைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு இரா.செழியன் ஞாபகத்திற்கு வந்து விடுவார். இரா.செழியன் பற்றிய செய்திகளைப் பார்க்கும் போதெல்லாம் இந்த வசனம் ஞாபகம் வந்துவிடும். பின்னாட்களில் தேசியக் கட்சிகளில் போய்ச் சேர்ந்து கொண்டாலும், பழைய திராவிட இயக்கத் தலைவர் என்கிற காலி பெருங்காய டப்பாவை வைத்துக் கொண்டுதான், மீதிக் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார் செழியன்.
திராவிட இயக்கம் என்பதற்காக மட்டுமே திமுகவையும், கலைஞரையும் எதிர்க்கிற சோ போன்ற கழிசடைகள் - செழியனை, கலைஞருக்கு எதிரான ஒரு திராவிட இயக்கத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தும் போதெல்லாம் - சிறந்த நாடாளுமன்றவாதி, நாணயமானவர், நேர்மையாளர் என்றெல்லாம் புகழ்வார்கள்.
நாணயம், நேர்மை என்பது ஊழல் இல்லாமல் வாழ்வதில் மட்டுமில்லை. தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பதிலும்தான் இருக்கிறது. சோ, சுப்பிரமணிய சாமி மற்றும் திராவிட இயக்க எதிர்ப்புக் கழிசடைகளோடு சேர்ந்து கொண்ட, திராவிட இயக்க எதிர்ப்பாளரான விதுரன் செழியனுக்கு குறைந்தபட்ச நாணயம் கூட இல்லை என்பதுதான் உண்மை.
சொல்லவும் வேண்டுமோ? திமுகவிற்கு எதிர்ப்பு என்றால் அவர் தினமணிக்கு நண்பர். செழியனின் சேவையை மரியாதையோடு பயன்படுத்திக் கொள்கிறது நமது நடுநிலை நாளேடு தினமணி.
பொதுவாக தலைவர்கள், பிரமுகர்கள் பற்றியான செய்திகளில் அவர்களின் அறிக்கைகள், பேட்டிகளின் மேல் தினமணி தன் கருத்தை நுழைத்து வெளியிடுவதில்லை. அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்களோ அப்படியே வெளியிட்டு விடுகிறது.
ஆனால் கலைஞர், மு.க.ஸ்டாலின், மு.க. அழகிரி, கனிமொழி இவர்களின் பேட்டியில், அறிக்கையில் இவர்களைப் பற்றியான செய்திகளில் தினமணி தன் கருத்தின் பின்னணியில் இருந்துதான் செய்திகளைப் பிரசுரிக்கிறது. சில சான்றுகள்:
அழகிரிக்குக் கட்சிப் பதவி!
தமது மகன் மு.க.அழகிரிக்கும் கட்சியில் என்ன பொறுப்பு வேண்டுமானாலும் தரத் தயார் என்று திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி சூசகமாகத் தெரிவித்தார். (தினமணி ஜøன் 30) ஆனால் உண்மை அதுவன்று, மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணியின் மகத்தான வெற்றிக்கு முழுமுதற் காரணமாக அழகிரி இருந்தார் என்று கூட்டணியில் உள்ள அனைவரும் கூறுகிறார்கள். அவரைப் பாராட்டும் வகையில் கட்சியில் அவருக்குப் பொறுப்புத் தரப்படுமா? என நிருபர்கள் கேட்டனர். அவருக்கு என்ன வேண்டும் என்று கேளுங்கள் எனச் சிரித்தபடியே கூறினார். (தினமணி ஜ÷ன் 30) இதைத்தான் தனக்கே உரிய தந்திரத்தோடு, தலைப்பாக பிரசுரித்துள்ளது தினமணி.
சத்தியமூர்த்தி பவன் செல்கிறார் கருணாநிதி!
எந்தக் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகத் தமது இளமைப் பருவத்தில் கொடி பிடித்து, கோஷ மிட்டு தமது அரசியல் வாழ்க்கைக்கு அடித்தள மிட்டாரோ அந்தக் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு முதல்முறையாகச் செல்கிறார் முதல்வர் கருணாநிதி (தினமணி ஆகஸ்ட் 4) பாரம்பரியமிக்க திமுக தொண்டரைப் போல் கவலைப்படுகிறது நடுநிலை. கலைஞர், திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு மாறாக பா.ஜ.க. போன்ற மதவாதக் கட்சியோடு கூட்டணி வைத்தபோது கவலைப்படாமல் இப்போது கவலைப்படுகிறது. ‘பாவம் அந்த ஆடு நனையுது’, என்கிற பாணியில். தேவைப்படும் நேரத்தில் முதல்வரிடம் இருந்து பொறுப்புகளை ஏற்கத் தயாராக இருப்பதாக சூசகமாகத் தெரிவித்தார் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் (தினமணி ஜ÷லை 5)
ஆனால் உண்மை அப்படியில்லை. முதல்வரிடமிருந்து பணிச்சுமையை எப்போது ஏற்றுக் கொள்ளப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. (நிருபர்கள்) முதல்வர் இதுவரை சுமை என்று சொல்லவில்லை. அவர் தமது சுமை பற்றிக் கவலைப்பட்டுக் கேட்கட்டும். அதற்குப் பிறகு பதில் சொல்கிறேன் என்று கூறினார் ஸ்டாலின். (தினமணி ஜ÷லை 5) இந்தச் செய்தியைத்தான் தனக்கே உரிய தகுதி - திறமையோடு பிரசுரித்திருக்கிறது நடுநிலை தினமணி.
****
கலைஞரையும், ஸ்டாலினையும் பற்றி திட்டமிட்டு குதர்க்கமாக செய்தி வெளியிடும் தினமணிக்குத் தமிழ் நாட்டின் மிகப் பெரிய மக்கள் தலைவர்கள் யார் தெரியுமா? இல.கணே சன், ராம.கோபாலன், ப.சிதம்பரம். இவர்களைப் பற்றி மிகவும் கண்ணியமான முறையில்தான் செய்தி பிரசுரிக்கப்படுகிறது. ஆனாலும் மூணு பேருக்கு மட்டும் தலைவரா இருக்கிற இந்த கணேசனுக்கு நடுநிலை கொடுக்கிற பில்டப் ரொம்ப ஓவர். திருநாவுக்கரசுன்னு ஒரு நபர் அதே கணேசன் கட்சியில் (பா.ஜ.க) தலைவராக இருப்பது நடுநிலைக்குத் தெரியாது போலும்.
சரி இல.கணேசன், ராம.கோபாலன் இவர்களுக்குத் தினமணி முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தினமணியின் ஜென்ம விரோதியான பிரதிபாபாட்டிலை ஆதரிக்கிற, சோனியாவை தலைவராகக் கொண்ட காங்கிரஸ்காரர் ப.சிதம்பரத்தை மட்டும் மிகப்பெரிய தேசபக்தராக சித்தரிக்கிறதே என்ன காரணம்? ஆமாம், அதற்குக் காரணம் தினமணியின் நடுநிலைதான். பார்ப்பன-பனியாவுக்கான நடுநிலை.
அதெல்லாம் சரிதான். தினமணியால் நாட் டுக்கு ஒரு நல்லது கூடவா இல்லை என்று நீங்கள் அலுத்துக் கொள்ளலாம். ஒரே ஒரு நன்மையிருக்கிறது. பரவலாக அந்தப் பத்திரிகை கடைகளில் கிடைப்பது இல்லை. புவர் சர்குலேசன்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|