போனால் வருவேனா?
1967ஆம் ஆண்டு - தேர்தல் நேரம். தந்தை பெரியார் காங்கிரஸ் கட்சியை ஆதரித்துத் தமிழகம் எங்கும் கூட்டங்களில் பேசி வருகின்றார். தி.க. மேடைகளிலும், தி.மு.க. மேடைகளிலும் எதிரெதிர்க் கருத்து மோதல்கள் கடுமையாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது ஒரு நாள் இரவு நேரம் தஞ்சையில் கூட்டம் முடித்து நாகை நோக்கி அண்ணா மகிழுந்தில் சென்று கொண்டிருக்கிறார். நாகைக் கூட்டம் முடித்துத் தஞ்சையை நோக்கிப் பெரியார் தன் ஊர்தியில் வந்து கொண்டிருக்கிறார். ஒரு தொடர்வண்டிப் பாதை மறிப்பில் (ரயில்வே கேட்) இரு வண்டிகளும் சந்தித்துக் கொள்கின்றன. இந்தப் பக்கம் அண்ணா காத்திருக்க, அந்தப் பக்கம் அய்யா காத்திருக்கிறார்.
உடனே அண்ணா, தன் அருகிலிருந்த தஞ்சை நடராசனிடம், ‘‘அதோ வண்டியில அய்யா இருக்காரு, இந்தப் பழங்களை எல்லாம் கொண்டுபோய்க் குடுத்துட்டு வாங்க’’ என்கிறார்.
சற்றுத் தயங்கிய நடராசன், ‘‘அண்ணா, நீங்களே போய்க் குடுக்கலாமே’’ என்று சொல்கிறார்.
அதற்கு அண்ணா சிரித்தபடியே, ‘‘நானே போயிடுவேன். ஆனா அய்யாவை நேரில் பாத்தப்புறம், மறுபடியும் இந்த வண்டிக்குத் திரும்பி வருவேனான்னு சொல்லமுடியாது’’ என்றாராம். அவர்கள் பிரிந்திருந்த காலத்திலும், சேர்ந்துதான் இருந்திருக்கிறார்கள்.
தகவல் : தஞ்சை இரத்தினகிரி
(செப்டம்பர் 17 - தந்தை பெரியார் பிறந்த நாள்
செப்டம்பர் 15 - அண்ணா பிறந்த நாள்)
எங்கிருந்து தொடங்கியது?
ஹைதராபாத்தில் குண்டு வெடித்துப் பலரும் இறந்து போன செய்தி இந்தியாவையே உலுக்கிக் கொண்டுள்ளது. கட்சி வேறுபாடின்றி அனைவரும் அதனைக் கண்டித்துள்ளனர். இந்நிலையில், இதுதான் தருணமென்று கருதி, பா.ஜ.க.வின் தலைவர் ராஜ்நாத் சிங்கும், அத்வானியும், ‘மீண்டும் பொடா சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். அதுதான் இதற்கான தீர்வாகும்’ என்று கூறியுள்ளனர்.
இந்தியாவில் நடைபெறும் குண்டு வெடிப்புகளைப் பாபர் மசூதி இடிப்பிற்கு முன், இடிப்பிற்குப் பின் என இரண்டாகப் பிரித்துப் பார்த்தால் தான் உண்மை தெரியும். 1992 டிசம்பரில் நடைபெற்ற அந்தக் காட்டுவிலங்காண்டிச் செயல்தான், இந்தியா முழுவதும் பயங்கரவாதத்திற்கு வித்திட்டது. எனவே, பொடா சட்டத்தைக் கொண்டு வந்து, பாபர் மசூதி இடிப்பிற்குக் காரணமாக இருந்தவர்களை எல்லாம் அச்சட்டத்தின் கீழ்க் கைது செய்து சிறையில் அடைக்கலாமா என்று அவர்களிடம்தான் கேட்க வேண்டும். பொடா சட்டம் இருந்தபோது மட்டும், இங்கு குண்டுகள் வெடிக்கவே இல்லையா என்றும் அவர்களிடம் கேட்க வேண்டும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|