சூலூரில் ஒரு அறிவியல் பூங்கா
தேவராசன்
நம் நாட்டில் சில மருத்துவர்களே கோயிலுக்கு வேண்டிக் கொள்கிறார்கள். விஞ்ஞானிகள் சிலர் குறி கேட்கிறார்கள். அறிவியல் படிப்பு வளர்ந்த அளவுக்கு இங்கே அறிவியல் பார்வை வளரவில்லை.
இச்சூழலில், கோவை மாநகரத்தின் அருகிலுள்ள சூலூரில் இயங்கிவரும் அறிவியல் பூங்கா ஒன்று நம் எண்ணத்தை ஈர்க்கிறது. 5.12.2004 அன்று கோவை மு. இராமநாதன் தலைமையில், தோழர் தா.பாண்டியனால் திறந்துவைக்கப் பட்ட இப்பூங்கா, சூலூர் மேனாள் பஞ்சாயத்துத் தலைவர் சூ.ர. தங்கவேலு அவர்களால் நடத்தப்படுகிறது.
பல்வேறு நாடுகளையும், பல்வேறு காலங்களையும் சேர்ந்த 262 விஞ்ஞானி களின் படங்கள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கமும், அவர்களின் கண்டுபிடிப்புகள் பற்றிய செய்திகளும் தங்கவேலு அவர்களால் தொகுக்கப்பட்டு, பார்வை நூல்களாகப் (Reference Books) பூங்காவில் வைக்கப்பட்டுள்ளன.
இயற்கை அறிவியல், சமூக அறிவியல் தொடர்பான நூல்கள் ஏறத்தாழ 5000 இங்கு உள்ளன. பல்வேறு கலைக்களஞ்சியத் தொகுதிகளும் இங்கே வைக்கப்பட்டுள்ளன. அய்ம்பது பேர் இப்பூங்காவில் உறுப்பினர்களா கத் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
கோயில்களுக்கும், குடமுழுக்குகளுக்கும் மட்டுமே தங்கள் பணத்தைச் செலவழித்துக் கொண்டிருக்கும் செல்வர்கள் உள்ள நாட்டில், அறிவியல் பூங்கா அமைக்கும் எண்ணம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது என்று தங்கவேலு அவர்களைக் கேட்டபோது, ‘‘நான் பஞ்சாயத்துத் தலைவராக இருந்த வேளையில், படகுத்துறை ஒன்றும் அங்கு அறிவியல் பூங்கா ஒன்றும் அமைப்பது என்று திட்டமிட்டோம். அதற்கு அரசுத் தரப்பில் இருந்து உரிய உதவிகள் கிடைக்கவில்லை. சேர்த்துவைத்த படங்களும், நூல்களும், வீணாகிவிடுமோ என்று நான் கவலைப்பட்ட நேரத்தில் சிங்கப்பூரில் உள்ள என் மகளும், மருமகனும், தங்கள் கட்டிடத்தின் ஒரு தளத்தை உங்கள் நோக்கத்திற்கு முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறினர். அந்தத் தளத்தில்தான் அறிவியல் பூங்கா இப்போது இயங்கி வருகிறது’’ என்று கூறினார்.
தங்கவேலனாருக்குத் தமிழகம் கடமைப்பட்டுள்ளது.
ஊதியம் மருந்துக்கும் போதாது - அ.இல.சிந்தா
கொட்டும் மழை, கொளுத்தும் வெயில், விடுமுறை நாள், விழா நாள், என்னும் வேறுபாடுகள் எவையுமில்லாமல் பெரும்பாலும் எல்லா நாள்களிலும் திறந்திருக்கும் மருத்துவமனைகளும், மருந்துக் கடைகளும் மற்றவர்களின் நோய்தீர்க்க அலைந்து திரியும் மருந்து விற்பனைத் தொழிலாளர்கள் நிலையோ மிகவும் இரங்கத்தக்கதாக உள்ளது.
மொத்த வணிகர்களிடமிருந்து மருந்துகளைப் பெற்று, மருந்துக் கடைகளுக்கு அவற்றைக் கொண்டு செல்லும் தொழிலாளர்கள், தமிழ் நாட்டில் பல்லாயிரக்கணக்கில் உள்ளனர். சென்னை மாவட்டத்தில் மட்டும் அவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ இரண்டாயிரமாகும், ஒழுங்கமைக்கப்படாத பகுதியினராக இருந்த அவர்கள் அண்மையில்தான் தமிழ்நாடு மருந்து மொத்த விற்பனை தொழிலாளர் பெடரேஷன் என்னும் கூட்டமைப்பின் கீழ் கட்டமைக்கப் பட்டுள்ளனர். இவர்களின் ஊதியம் என்பது, இவர்கள் விற்பனை செய்யும் தொகையில் 1.54% கழிவு மட்டுமே ஒரு மாதத்திற்கு நான்கு லட்சம் ரூபாய்க்காவது மருந்து விற்பனை செய்தால்தான், 6,000 ரூபாய் மாத வருமானம் பெற முடியும். அதற்கு ஒவ்வொரு நாளும் 20 முதல் 30 கடைகளை அவர்கள் தேர்ந்தெடுத்து விற்பனை செய்ய வேண்டும். அத்தனை கடைகளுக்கும் போய்வருவதற்கான எரிபொருள் செலவையும் அவர்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நெடுங்காலத்திற்குப் பிறகு விழித்துக்கொண்டு, ஒன்று சேர்ந்திருக்கும் தொழிலாளர்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையின் முன்பு ஒருநாள் பட்டினிப் போராட்டத்தை நடத்தினார்கள். வைப்புத் தொகை (P.F) பணிக்கொடை (Gratuity), விபத்துக்காலத்தில் உதவி முதலியன தங்களுக்கு வேண்டும் என்பதோடு, தங்களுக்கான கழிவுத்தொகை 2%ஆக உயர்த்தப்பட வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான கோரிக்கையாக இருந்தது.
இன்றைய பொருளாதார நிலை, விலைவாசி போன்றவைகளை நோக்கும்போது 2% கழிவு என்பது மிகமிக நியாயமானதாகவும், அடிப்படை யானதாகவும் உள்ளது. இக்கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் டி.பாபுவை அணுகியபோது, மொத்த மருந்து வணிகர்கள் எங்களின் கோரிக்கைகளை விரைவில் ஏற்றுக்கொள்வார்கள் என்றும், அனைத்துத் தொழிலாளர்களிடமும் பரிவுகாட்டும் இன்றைய தமிழக அரசு எங்களுக்கு உதவும் என்றும் உறுதியாக நம்புவதாகத் தெரிவித்தார்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|