கருப்பையின் கதறலாய்த் தொப்புள் கொடி
- இரா. உமா
தொப்புள் கொடி - ஆவணப்படம்,வெளியீடு - மேக்ஸ் பவுண்டேசன், சென்னை. விலை - ரூ.50,
தொடர்புக்கு - 9444498041.
“யாருடைய கனவு அமெரிக்காவில் போய் இறங்குவது என்பதாக மட்டுமே இருந்ததோ, அந்த இளைஞர்கள் கூட இன்று தங்கள் அடையாளம் என்ன என்பதைப் புரிந்து கொண்டு, அதைப் பற்றிப் பேசத் துணிந்திருக்கும் ஒரு சூழல் உருவாகி இருக்கிறது” - தமிழக மாணவர் கூட்டமைப்பின் பிரச்சார ஊர்திப் பயணத்தைத் தொடங்கி வைத்த போது நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் கனிமொழி இவ்வாறு குறிப்பிட்டார்.
அந்த வகையில் இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் ஆவணப் படங்களுக்கும், குறும்படங்களுக்கும் பெரும்பங்கு உண்டு.
ஈழப்பிரச்சினையை மையமாகக் கொண்டு பல குறும்படங்களும், ஆவணப்படங்களும் வெளிவந்துள்ளன. அவற்றின் வரிசையில் அண்மையில் மேக்ஸ் பவுண்டேசன் தயாரித்துள்ள ஆவணப்படம் தொப்புள்கொடி.
அரை நூற்றாண்டுகால விடுதலைப் போராட்டத்தை, நீண்ட நெடியதொரு வரலாற்றை 40 நிமிடங்களில் சொல்லிவிட முயல்கிறது இப்படம். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது.
குண்டுகளின் சத்தத்தையே பின்னணி இசையாகக் கொண்டு காட்சிகள் விரிகின்றன. உரிமைப் போரில் உயிரிழந்த நம் தொப்புள்கொடி உறவுகள் பிணங்களாக ஈழத்து வீதிகளில் சிதறிக்கிடக்கும் காட்சிகள் நம் நெஞ்சை நடுங்கச் செய்கின்றன. பாராண்ட தமிழனின் பிள்ளைகள் பகைவனின் குண்டுகளால் உருக்குலைந்து, உறுப்புகளை இழந்து அழக்கூடத் திராணி யற்றுக் கிடக்கும் காட்சிகளை நெருக்கத்தில்
காட்டும்போது ஆயிரமாயிரம் கருப்பைகளின் கதறல்கள் நம் காதுகளில் கேட்கிறது.
இவர்கள் யாருமற்ற அநாதைகளா என்று திரையில் தோன்றும் கேள்விக்கு, எத்தனை முறை வேண்டுமானாலும் என் இனத்தின் வரலாற்றைச் சொல்லக் காத்திருக்கிறேன் என்று சான்றுகளை அள்ளித் தந்து விளக்குகிறார் பேரா. அரசேந்திரன். ஈழம் என்பது தொடக்கம் முதலே தனி நாடுதான் ; அதுவும் தமிழனின் நாடுதான் ; விஜயனின் பிறப்பு அல்ல, வருகை மட்டுமே வரலாற்றில் உள்ளது என்பதைப் பல்வேறு ஆய்வுரைகளின் துணையோடு ஆணித்தரமாக எடுத்துரைக் கிறார். மறுக்கமுடியாத சான்றுகள் அத்தனையும். பட்டினப்பாலை முதல் பலநூறு சான்றுகளைக் காட்டினாலும், பிழைக்கப்போன இடத்தில் நாடு கேட்கலாமா என்கிறது ‘ நாடற்ற கூட்டம்’.
1983 ஆம் ஆண்டில், சிங்களர்கள் நடத்திய வெறியாட்டத்தை நேரில் கண்ட 80 வயதுப் பெரியவர் வேலுப்பிள்ளையின் சாட்சியம், தமிழர்களின் உதிரத்தில் உருவான பூமி அது என்பதைப் பதிவு செய்கிறது. நாள் ஒன்றுக்கு வெறும் 29 பைசா மட்டுமே கூலியாகப் பெற்றதாக அவர் சொல்வதைக் கேட்கும்போது ‘செல்லும் இடத்தையயல்லாம் செழிப்பாக்கும்’ தமிழனின் உழைப்பு எப்படியயல்லாம் சுரண்டப்பட்டுள்ளது என்பதறிந்து அதிர்ச்சியாக இருக்கிறது.
தந்தை செல்வாவின் அறப்போராட்டம் தொடங்கி, விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் வரை படக்காட்சிகளாகவும், புகைப்படக்காட்சிகளாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழக மாணவர் கூட்டமைப்பும், இளைஞர் இயக்கமும் இணைந்து மேற்கொண்ட பிரச்சார ஊர்திப் பயணக் காட்சிகளும் இதில் இடம் பெற்றுள்ளன. இப்பயணத்தின் போது பதிவுசெய்யப்பட்ட பொதுமக்களின் கருத்துகளும் நடுநடுவே இடம் பெறுகின்றன. இது மக்களின் புரிதல் எந்த அளவுக்கு உள்ளது என்பதைக் காட்டுகிறது.
அவர்களுக்காக நாங்கள் போராடுவோம் என்று சிறுவர்கள் சொல்கிறார்கள். ஈழத்தில் என்ன நடக்கிறது என்று தனக்கு எதுவுமே தெரியாது என்று சில இளைஞர்கள் சொல்கிறார்கள்.
கொசாவோ, பங்களாதேஷ் பிரச்சினைகளுக்குக் கிடைத்த தீர்வுகளையும், அந்நாடுகளுக்கு இந்தியா செய்த உதவிகளையும் சுட்டிக்காட்டிப் பொதுமக்கள், தனி ஈழமே தீர்வு என்று ஆணித்தரமாகச் சொல்கின்றனர்.
போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசு ஏன் வலியுறுத்தத் தயங்குகிறது? மத்தியில் செல்வாக்குடன் இருக்கிற தமிழக முதல்வரால், மத்திய அரசை நிர்பந்திக்க முடியாதா என்பன போன்ற மக்களின் கேள்விகளும் பதிவாகியுள்ளன.
பிரச்சாரக் குழுவினரின் தெருமுனைக் கூட்டங்களில், ஊர்தியின் பக்கவாட்டில் கட்டப்பட்டுள்ள ஈழப்போரின் அவலக் காட்சிகளைப் பார்த்துவிட்டுச் சோகம் கப்பிய முகங்களோடு செல்லும் மக்களைப் பார்க்க முடிகிறது.
“அவர்களைக் காப்பாற்றுவதில்தான், நமக்கான அடையாளத்தை, நம்முடைய தொப்புள்கொடி உறவினை மீட்பதற்கான அடிப்படை உள்ளது என்பதை நாம் உணரவேண்டும்” என்ற கனிமொழியின் கருத்து மறுக்க முடியாத உண்மை.
2 மணிநேரப் படகுப் பயணத்தில் இராமேசுவரம் வந்து திரைப்படம் பார்த்துவிட்டுச் சென்ற நாள்களும் அன்று இருந்தன என்று பேரா. அரசேந்திரன் சொல்லும்போது, அந்த இரண்டு மணி நேரப் படகுப் பயணம் விரைவில் வாய்க்காதா என்ற ஏக்கம் பிறக்கிறது.
மருத்துவர் தாயப்பனின் தெளிவான குரல் காட்சிகளை அழுத்தமாக மனதில் பதிய வைக்கிறது. இன
உணர்வோடு இயக்கியிருக்கிறார் தோழர் நந்தன். இன்றைய சூழலில் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டிய ஆவணப்படம் இது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|