கொக்கட்டிச் சோலையில் மரண ஓலம்
வடக்கில் மட்டுமின்றி, கிழக்கு மாகாணத்திலும், பல படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. போராளிகளின் கொரில்லாத் தாக்குதலுக்கு உள்ளாகி, ஓரிடத்தில் இராணுவத்தினர் சிலர் உயிரிழந்தால், உடனடியாக அந்நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள ஊருக்குள் புகுந்து நூற்றுக் கணக்கான மக்களைச் சுட்டுத் தள்ளுவது சிங்கள இராணுவத்தின் பழக்கம்.
1987 சனவரி 29 ஆம் நாள், அப்படித்தான் ஒரு வன்கொடுமை அரங்கேறியது. அதற்கு முதல்நாள், தாண்டியடி- கட்டைக்காடு என்னும் இடங்களுக்கு இடையே, படையினரின் வாகனம் ஒன்று கண்ணிவெடிக்கு உள்ளாகிப் பதினான்கு பேர் உயிரிழந்தனர். அக்காலகட்டத்தில், பல்வேறு போராளிக்குழுக்கள் அங்கு வலிமையாக இருந்தன. அந்தக் கண்ணி வெடியை யார் வைத்தார்கள் என்பதைப் பற்றியயல்லாம் கூட இராணுவம் கவலைப்படவில்லை. போராளிக்குழுக்களோடு எதிர்நின்று போராடவும் இராணுவத்தால் இயலவில்லை. மக்களைச் சுட்டுக் கொல்வதொன்றே அவர்களுக்கு எளிதானதாக இருந்தது.
சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் இருந்த கொக்கட்டிச் சோலைக்குள் படையினர் புகுந்தனர். உலங்கு வானூர்தி (யஹலிகாப்டர்) மூலமாகவும், படையினர் வந்து இறங்கியபடி இருந்தனர். ஊருக்குள் நுழைந்ததும் அவர்கள் கண்ணில் பட்டது, ஒரு பெரிய இறால் பண்ணை. அந்தப் பண்ணையில் நூற்றுக்கணக்கானவர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
சடசடவென இராணுவத்தினர் அதனுள் நுழைந்தனர். அங்கே இருந்த கூலித் தொழிலாளர்களுக்கு, இராணுவம் எதற்கு வந்துள்ளது என்பதோ, என்ன செய்யப் போகிறது என்பதோ புரியவில்லை. அனைவரும் மிரண்டு போய் நின்றனர்.
கொக்கட்டிச் சோலை - மகிழடித் தீவு வீதியின் இருபக்கமும் அமைந்திருந்த பண்ணையில் பணியாற்றிய அந்தத்தொழிளார்கள் வேட்டை நாய்களிடம் அகப்பட்ட நிலையில் சூறையாடப்பட்டனர். அடி, உதை, கத்தியால் குத்துவது என்று பல்வேறு வகைத் தாக்குதல்களை நிகழ்த்தினர். இறுதியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 86 பேர் கொல்லப் பட்டனர்.
கொல்லப்பட்டவர்களின் சடலங் களை, உழவு இயந்திரப் பெட்டி ஒன்றில் அள்ளிப் போட்டுக் கொண்டு சென்றவர் கள், அத்தியடி முன்மாரி என்ற இடத்தில் அனைத்துச் சடலங்களையும் தீவைத்துக் கொளுத்தினர்.
அதன்பின்பு, துப்பாக்கிக் கட்டைகளால் அடிபட்டவர்கள், கத்திகளால் குத்தப்பட்டவர்கள் பலர் துடிதுடித்து அடுத்தடுத்த நாள்களில் இறந்து போயினர். அப்படி இறந்துபோனவர்களின் எண்ணிக்கையும் ஏறத்தாழ நூறு இருக்கலாம்.
அன்றாட வயிற்றுப் பிழைப்புக்காக் கூலி வேலை செய்ய வந்தவர்களின் மரண ஓலம், கொக்கட்டிச் சோலைக் காற்றாலைகளில் இன்றும் கலந்துதான் கிடக்கிறது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|