கருஞ்சட்டை
சுப. வீரபாண்டியன்
அமெரிக்க நாட்டின் ஒரு மூலையில் ஒரு திருவிழா. எங்கு பார்த்தாலும் ஆட்டம் பாட்டு கொண்டாட்டம். குழந்தைகளும் பெரியவர்களுமாய் கொண்டாட்டத்தில் தங்களை மறந்து பங்கேற்றிருக்கின்றனர்.
விழா தொடங்கும் நேரம். வானில் பலூன்கள் பறக்கவிடப்படுகின்றன. சிவப்பு, நீலம், மஞ்சள் என்று பல வண்ணங்களில் பலூன்கள். எல்லாக் குழந்தைகளும் ஆர்ப்பரிக்கிறார்கள். வண்ணங்களைக் கண்டு மகிழ்கிறார்கள். ஆனால் அந்த நீக்ரோக் குழந்தையின் முகத்தில் மட்டும் ஒரு ஏக்கம் படர்கிறது. அந்தக் குழந்தை தன் தாயைப் பார்த்துக் கேட்கிறது, அம்மா, பலூன்களில்கூட கறுப்பு கிடையாதா?
இப்படித்தான் அந்த நீக்ரோ மக்கள் ஏக்கமும் புலம்பலுமாய் வாழ்கின்றனர். ஜீன்பால் சார்த்தர் ஓங்கிச் சொன்னார், உங்கள் கறுப்பு நிறத் தோலைப் போர்வையாய்ப் போர்த்திக் கொள்ளாதீர்கள். போர்க்கொடியாய் உயர்த்திப் பிடியுங்கள்.
நீக்ரோக்களுக்கு சார்த்தர் சொன்னதைப் போல, தமிழர்களுக்கு தந்தை பெரியார் சொன்னார்: கறுப்பு என்பது இழிவையும் துக்கத்தையும் காட்டுவதற்கு மட்டுமல்ல. அந்த இழிவைத் துடைக்க எங்களை நாங்களே ஒப்படைத்துக் கொள்கிறோம் எனும் தியாகத்துக்கும் வீரத்துக்கும்கூட அடையாளமாகும் என்று.
1945இல் தமிழ்நாட்டில் கருஞ்சட்டைப் படை எழுந்தது. ஆதிக்கத்தை அறியாமையை, மூட நம்பிக்கையை எதிர்த்துப் புறப்பட்ட கருஞ்சட்டைக்கு இன்னும் இந்த மண்ணில் வேலை இருக்கத்தானே செய்கிறது.
ஆரா இயற்கை அவா
இனிமேல் சூப்பர் மார்க்கெட் வேண்டாம். மறுபடியும் மளிகைக் கடைக்கே போகலாம் என்றாள் என் மனைவி.
ஏன்? என்று கேட்டேன்.
செலவு கூடுதலாகிறது.
எப்படி?
இரண்டு இடத்திலும் ஒரே விலைதான். ஆனால் மளிகைக் கடையில் எனக்குத் தேவையான பட்டியலைக் கொடுத்துவிட்டு வந்து விடுவேன். உள்ளே என்ன இருக்கிறது என்றுகூட எனக்குத் தெரியாது. ஆனால் சூப்பர் மார்க்கெட்டில் நாம் நேரடியாக உள்ளே போகிறோம். தேவையானதை மட்டுமல்லாமல் பிடித்ததையெல்லாம் வாங்குகிறோம். ஒரு பக்கம் எனக்குப் பிடித்ததை நான் வாங்குகிறேன். மறுபக்கம் உங்களுக்குப் பிடித்ததை நீங்கள் வாங்குகிறீர்கள். இன்னொரு பக்கம் பிள்ளைகள் அவர்களுக்குப் பிடித்ததை வாங்குகிறார்கள். ஆக மொத்தம் செலவு கூடுகிறது.
போதி மரத்தடியில் அல்ல, அந்த மாலைக் கடைத் தெருவில் எனக்கும் ஞானோதயம் பிறந்தது. என் மனைவி சொல்வது உண்மைதான். மளிகைக் கடையில் தேவைக்கு வாங்குகிறோம். பல்பொருள் அங்காடியில் ஆசைக்கு வாங்குகிறோம். தேவையை நிரப்பலாம், ஆசையை நிரப்ப முடியாது. நம் பாட்டன் வள்ளுவன், ஆரா இயற்கை அவா என்று சொன்ன வரிக்கு இப்போதுதான் பொருள் புரிகிறது. ஆசையின் இயல்பு நிரம்பாத தன்மை உடையது என்றார் வள்ளுவர். மணிமேகலையில் ஒரு பாத்திரம் வரும். அதன் பெயர் அமுதசுரபி. அதற்கு நேர்எதிரான குணம் கொண்டதாக ஆசை எனும் பாத்திரத்தை வள்ளுவர் காட்டுகின்றார். எவ்வளவு எடுத்தாலும் அமுதசுரபி குறையாது. எவ்வளவு கொட்டினாலும் ஆசை நிறையாது. தேவைக்குப் பொருள் வாங்கும் வழக்கம் மாற்றப்பட்டு ஆசைக்குப் பொருள் வாங்கும் கலாச்சாரத்தைத் தான் உலகமயமாதல் நம்மிடம் வளர்த்துக் கொண்டிருக்கிறது.
நுகர்வுக் கலாச்சாரம்தான் நம்முன் நிற்கும் மிகப் பெரிய எதிரி என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தக் கலாச்சாரத்திலிருந்து விடுபடாதவரை நம்மால் வேறு எதையும் சாதிக்க முடியாது. தேவையற்ற பொருள்களை வாங்குவதென்பது பொதுநல அக்கறையிலிருந்த நம்மைப் பிரித்தெடுக்கிறது. அது சமூக மனிதர்களை தனிமனிதர்களாக மாற்றுகிறது. நமக்கு அந்நியமான பொருள்களை வாங்கி நமக்கு இணக்கமான சமூகத்திலிருந்து விலகிப் போகிறோம். நாம் வாங்கவில்லை. நம்மை விற்கிறோம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|