அடிதடி அர்ச்சகர் - அடக்கிய அரசு
ராஜி
தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளாய் உறுத்திக் கொண்டிருந்த கவலை அனைத்து சாதியினரையும் கோவில்களுக்குள் அழைத்துச் சென்றநம்மால் அவர்களை அர்ச்சகர்களாக்க முடியவில்லையே என்பதுதான். அந்தக் கவலையை ஆட்சிக் கட்டிலில் ஏறியதுமே அகற்றியது கலைஞர் அரசு. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க சட்டம் கொண்டு வந்த அரசு, அர்ச்சகர்களை உருவாக்க ஆறு இடங்களில் பயிற்சிப் பள்ளிகளையும் தொடங்கியது.
ஐந்து இடங்களில் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கிவிட்ட நிலையில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அமைக்கப்பட்ட சைவக் கோவில்களுக்கான அர்ச்சகர் பள்ளி மட்டும் செயல்படவே இல்லை. காரணம்... பி.டி. இரமேஷ் என்ற அர்ச்சகர்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் ‘சின்ன பட்டம்’ என்றழைக்கப்படும் ரமேஷ÷க்கு திரையுலகத்தினர் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், காவல்துறை உயரதிகாரிகள், அரசியல் புள்ளிகள் வரை அனைவருடனும் தொடர்பு உண்டு. அவர்கள் கோவிலுக்கு வரும்போதெல்லாம் வேண்டியதைச் செய்து கொடுத்து காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் ரமேஷ÷க்கு, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதை மட்டும் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.
இதனாலேயே, திருவண்ணாமலை அர்ச்சகர் பள்ளியில் வேதம், ஆகமம் போன்ற பாடங்களைச் சொல்லித்தர எவரும் வராமல் பார்த்துக் கொண்டார். அதையும் மீறி வந்தவர்களை மிரட்டி விரட்டியடித்தார். இதெல்லாம் தெரியாமல் ராசிபுரத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் இராமகிருட்டிணன் என்பவர் கடந்த சூன் மாதத்தில் ஆகம பாட ஆசிரியராக சேர்ந்து, வேதங்களையும் ஆகமங்களையும் சொல்லித்தரத் தொடங்கினார். இதனால் அனைத்து சாதி இளைஞர்களும் அர்ச்சகர்களாக வளரத் தொடங்க, ரமேஷின் மனதிலோ ஆத்திரம் வளர்ந்தது. அதன் விளைவு சூன் 14ஆம் தேதி உணவு விடுதிக்குச் சென்ற இராமகிருட்டிணனுக்கு ரமேஷின் ஆட்களால் அடி உதையும், கொலை மிரட்டலும் பரிசாகக் கிடைத்தது.
மிரட்டலுக்குப் பயந்து இராமகிருட்டிணன் இராசிபுரத்துக்கே சென்றுவிட, அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி மீண்டும் முடங்கியது. ரமேஷின் செல்வாக்கால் இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அவருக்குப் பயந்து எவரும் ஆசிரியர் வேலைக்கு வரவில்லை. பெரியாரின் நெஞ்சில் குத்திய முள்ளை அரசு எடுத்தாலும், சில அர்ச்சகர்கள் அய்யாவின் நெஞ்சில் ஆணியையே அடிப்பது தாமதமாகத்தான் அரசுக்கு தெரிய வந்தது.
இந்தச் செய்தி ‘தமிழ் ஓசை’ நாளேடுகளின் மூலம் கவனத்துக்கு வந்ததும், முதல்வர் கலைஞர் அதிரடியாகச் சில உத்தரவுகளைப் பிறப்பிக்க திருவண்ணாமலை கோவில் நிர்வாகமும், காவல்துறை அதிகாரிகளும் இராசிபுரம் விரைந்து, இராமகிருட்டிணனை சமாதானப்படுத்தி அழைத்து வந்தனர். அதே நேரத்தில் அர்ச்சகர் ரமேஷ் மீது வழக்கு தொடரப்பட்டதுடன் அவரின் அடியாட்களான காந்தி, கம்பிராசா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் இராசிபுரம் பெரியவர் இராமகிருட்டினனுக்கு மாதம் ரூ.8000 ஊதியமும், போதிய பாதுகாப்பும், வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உறுதியளிக்கப்பட்டதால், கடந்த இரு வாரங்களாக திருவண்ணாமலை அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி மீண்டும் சிறப்பாக செயல்படத் தொடங்கியுள்ளது.
எப்படியோ.... பெரியாரின் நெஞ்சில், சில கள்ளிகளால் மீண்டும் குத்தப்பட்ட முள்ளை அரசு அகற்றியுள்ளது. இனி இத்திட்டம் சிறு உறுத்தல் கூட இல்லாமல் செயல்படும் என நம்புவோம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|