காவல்துறை மீது கொலை வழக்கு!
21-07-2007 அன்று சென்னையில் போலி மோதல் படுகொலை எதிர்ப்புக் கருத்தரங்கம் நடை பெற்றது. அதில் மும்பை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி ஹொஸ்பெட் சுரேஷ், ஆந்திர சிவில் உரிமைக்கழகச் செயலர் கிராந்தி சைதன்யா, பேராசிரியர் ராமசாமி, எழுத்தாளர் பிரபஞ்சன், பேராசிரியர் சரசுவதி, சுகுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில், தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் இதுவரை நடந்த போலி மோதல் கொலைகளில் தொடர்புடைய காவல்துறையினர் அனைவர் மீதும் உடனடியாக இந்திய தண்டனைச் சட்டம் 302 பிரிவின்படி கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். போலி மோதல் கொலைகளில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட காவல்துறைக்கு அளிக்கப்பட்ட பதவி உயர்வு, வெகுமதி போன்றவற்றை உடனே திரும்பப் பெற வேண்டும்.
போலி மோதல்களில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். போலி மோதல் கொலைகளைத் தடுக்க அரசு கொள்கையளவில் முடிவெடுத்து மனித உரிமைகளைக் காத்திட வேண்டும். கிளாஸ்கோ விமான நிலைய தாக்குதலுக்காகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள இந்திய மருத்துவர் ஹனீஃபுக்கும், அந்தக் குற்றத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என நிரூபிக்கப்பட்ட பிறகும், அவர் கைது செய்யப்பட்டுத் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இதைக் கண்டித்துள்ளன. உடனடியாக அவரை விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திராவிட இயக்கம் என்னதான் செய்தது தமிழனுக்கு?: வைரமுத்து
‘இந்தியர் அல்லாத அரசுகள் எழுந்ததும் விழுந்ததும்தான் இந்தியாவின் வரலாறு' என்றார் கார்ல் மார்க்ஸ். தமிழர் அல்லாதவர்கள் தமிழர்களை ஆண்டதுதான் தமிழர்களின் வரலாறு என்பது அதன் உள் உண்மை.
மண்ணின் மக்களை ஆலயத்துக்குள் அனுமதிக்காமல் பூக்களுக்கும் வரிவிதித்துப் புண்ணியம் தேடிக் கொண்டது பல்லவர் அரசு. வருணாசிரமத்தை நெறியென்று கொண்டு சாதிவாரியாய் வீதி அமைத்தது மத மயக்கத்தின் மடியில் கிடந்த மாமன்னன் ராசராசன் அரசு.
மேல்சாதி மக்களுக்குக் கருவூலத் தங்கம் காணிக்கை கொடுத்துவிட்டு, தறிகளுக்கும் மாட்டு வண்டிகளுக்கும் வரி விதித்தது நாயக்கர் அரசு. கீழ் ஜாதி என்று கருதப்பட்ட சாதி இந்து ஒருவர் கோயிலுக்குள் நுழைவது குற்றம் என்று நீதிமன்றத்தில் தீர்ப்பளித்தது பிரிட்டிஷ் அரசு (1874)
இப்படி நூற்றாண்டுகளில் செருப்படியில் லாடமாய்த் தேய்ந்து கிடந்த தமிழனைத் தொட்டுத் தூக்கி நிறுத்தியது திராவிட இயக்கம். மண்ணுக்கும் மனிதனுக்குமான உறவை உணர்த்தியது திராவிட இயக்கம். தொலைந்து போன விழுமியங்களை மீட்டெடுத்தது திராவிட இயக்கம். உயர்வு - இழிவு என்பன பிறப்பால் உருவானதில்லை என்று வரலாற்று ரீதியாக வாதிட்டு வென்றது திராவிட இயக்கம்.
திராவிட இயக்கத்தால் வேறு விளைவுகள் இல்லையா என்று சிலர் வினவலாம். எந்த இயக்கத்தில் குறைகள் இல்லை? அன்பே சிவம் என்று போதித்த சைவப் பேரியக்கம் சமணர்களைக் கழுவேற்றவில்லையா? ஆனால், குறைகள் குறைவு - நிறைகள் அதிகம் திராவிட இயக்கத்தில்.
நன்றி: குமுதம், 9-5-07
ரஜினிக்கு மட்டும் விதிவிலக்கா?
கர்நாடகாவில் பிறமொழிப் படங்களை வெளியிடுவதற்கு ஒரு கட்டுப்பாடு உள்ளது. அந்தப் படங்கள் வெளியாகி ஏழு வாரங்களுக்குப் பிறகுதான் பெங்களூர் உள்ளிட்ட எல்லா நகரங்களிலும் அவற்றை வெளியிட முடியும். பிறமொழிப் படங்கள் என்று பொதுவாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், குறிப்பாகத் தமிழ் மொழிப் படங்களுக்காகவே அக்கட்டுப்பாடு உருவாக்கப்பட்டது.
நடைமுறையில் இந்தி உள்ளிட்ட பிறமொழிப் படங்கள். ஓரு வாரங்களிலேயே பெங்களூருக்கு வந்துவிடும். ஆனால் தமிழ்ப் படங்களுக்கு மட்டும். அந்த நிபந்தனையில் தளர்வு இருக்காது.
அண்மையில் ஒரே ஒரு படம் மட்டும் விதிவிலக்காக ஆகிஉள்ளது. ரஜினிகாந்த் நடித்த சிவாஜி திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியான அதேநாளிலேயே பெங்களூரிலும் வெளியானது. ஒரு திரையரங்கில் அன்று, 13 திரையரங்குகளில் என்ன காரணம்? ஏன் இந்த விதிவிலக்கு?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|