தலையங்கம் - இனப்பாசம் எடுபடவில்லை
இந்தியா விடுதலை பெற்று 60 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு பெண் இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆகியிருக்கின்றார். எதிர்க்கட்சிகளின் மிகக் கூடுதலான விமர்சனங்களையும், அவதூறுகளையும் எதிர்கொண்ட போதும் மிகக் கூடுதலான வாக்குகள் வித்தியாசத்தில் பிரதீபா பாட்டீல் வெற்றி பெற்றுள்ளார்.
ஆசிரியர்
சுப.வீரபாண்டியன்
வெளியிடுபவர்:
கோ.தினகரன்
தொடர்புக்கு:
122/130-பி, என்.டி.ராமராவ் தெரு,
ரங்கராசபுரம்,
கோடம்பாக்கம்,
சென்னை - 600 024
|
அவரை எதிர்த்து இரண்டு அணிகள் கருத்துப் பரப்புரை செய்தன. ஆனால் அவை தங்கள் சார்பில், ஒரு வேட்பாளரைக் கூட நிறுத்தவில்லை. தனி வேட்பாளராகப் போட்டியிட்ட பைரோன் ஷெகாவத்தை ஆதரிப்பதாக, பா.ஜ.க. தலைமையிலான இரண்டாவது அணி அறிவித்தது. சின்ன வயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ்.காரராக விளங்கிவரும் ஷெகாவத் தன்னைத் தனி வேட்பாளர் என்று அறிவித்துக் கொண்டதும், கட்சி சாராத அந்த வேட்பாளரை பா.ஜ.க. ஆதரித்ததும் வேடிக்கையான உண்மைகள்.
தங்கள் அணிக்கென்று தகுதியான ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுக்க முடியாத கையறு நிலைக்குக் கவலைப்படுவதா, அல்லது தங்கள் வேட்பாளரைத் தனி வேட்பாளர் என்று அறிவித்த நேர்மையின்மையை நினைத்து வெட்கப்படுவதா என்பதை அரசியல் ஆய்வாளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
மூன்றாவது அணியின் நிலையோ மேலும் மோசமாக இருந்தது. ஒருவரை வேட்பாளராக அறிவிப்பதற்கு முன், அவருடைய ஒப்புதலைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்னும் அடிப்படையைக் கூட அந்த அணி அறிந்து வைத்திருக்கவில்லை. அப்துல்கலாமே மீண்டும் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட வேண்டும் என்று அந்த அணி அறிவித்தது. அவரோ, ஒருமித்த கருத்திருந்தால் மட்டுமே, தன்னால் போட்டியிட முடியும் என்று அறிவித்துவிட்டார். மீண்டும் ஒரு முறை குடியரசுத் தலைவராகும் பெரிய பெரிய ஆசை அவரிடமும் ஒட்டிக்கொண்டு இருந்திருக்கிறது என்பதையே அது காட்டியது. அவருடைய கண்ணியத்திற்குச் சிறு களங்கம் விளைவித்ததுதான் மூன்றாவது அணியால் முடிந்த காயம்.
அதற்குப் பிறகு, வேறு ஒரு வேட்பாளரையும் அந்த அணியில் தேர்வு செய்ய முடியவில்லை. மனசாட்சிப்படி வாக்களியுங்கள் என்று இரண்டாவது அணி கோரிக்கை விடுத்தது. அதற்கும் செவி சாய்க்காமல், தாங்கள் யாருக்கும் வாக்களிக்கப் போவதில்லை என மூன்றாவது அணி முரசறைந்தது.
தேர்தல் நாளன்று ஒரு மிகப்பெரிய கேலிக் கூத்து அரங்கேறியது. மூன்றாவது அணியின் முகமே தான்தான் என்று சொல்லிக் கொண்டு இருந்த ஜெயலலிதா கட்சியின் உறுப்பினர்கள், ஒளிவுமறைவாக ஓடிவந்து ஷெகாவத்துக்கு வாக்களித்தார்கள்.
பா.ச.க.வும், அதிமுகவும் ஒட்டிக் கொள்வதில் வியப்பேதும் இல்லை. இனம் இனத்தோடுதான் சேரும். ஆனால், தனக்குத் தெரியாமல் தன் கட்சி உறுப்பினர்கள் வாக்களித்து விட்டனர் என்றும், தன்னால் அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், ஜெயலலிதா கூறியிருப்பது, ஒரு கட்சிக்குத் தலைமைதாங்கும் தகுதியை அவர் இழந்து விட்டாரோ என எண்ண வைக்கிறது. மதிமுக என்பது ஏறத்தாழ அதிமுகவின் கிளை என்று ஆகிவிட்டபடியால், அக்கட்சி தனி நிலைப்பாடு எதையும் எடுக்காமல், அப்படியே அதிமுகவைப் பின்பற்றியுள்ளது.
தினமணி, துக்ளக் போன்ற ஏடுகளும், பிரதீபா பாட்டீலுக்கு எதிராக வந்து கட்டிக் கொண்டு நின்றன. அதுவும் ஒருவிதமான இனப்பாசம்தான். எல்லாவற்றையும் தாண்டி பிரதீபா பெற்றிருக்கும் வெற்றி பெருமைக்குய வெற்றியாக அமைந்திருக்கிறது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|