சிக்குன் குனியாவுக்கு சித்த மருத்துவம்
தெ. வேலாயுதம்
இந்தியத் துணைக் கண்டத்தையே அச்சுறுத்தி வரும் சிக்குன் குனியா நோயைத் தடுக்க, சித்த மருத்துவத்தைப் பயன்படுத்த தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. இதை நல்வாழ்வுத் துறை அமைச்சர் மூலம் முதல்வர் கலைஞர் அறிவித்திருக்கிறார். இனி தமிழ் மருத்துவம் தழைக்கும் என்ற நம்பிக்கை சித்த மருத்துவர்களிடையே தளிர்க்கத் தொடங்கி விட்டது.
உலகை உலுக்கிய தேய்வு (எயிட்சு) நோயைக் கட்டுப்படுத்த சித்த மருந்துகள்,
1. இரசகெந்தி மெழுகு
2. அமுக்ரா சூரணம்
3. நெல்லிக்காய் இளகம் என்ற மூன்றும் செயல்பட்டுச் சாதனை நிகழ்த்தியது.
இவ்வரிய கருத்தை அகிலத்திற்கு அறிவித்த, மருத்துவ மேதை செ.நெ. தெய்வநாயகம் அவர்கள், இந்தச் சிக்குன் குனியாவிற்கான மருந்து தேடுதலை மேற்கொண்டார். அவரின் ஆர்வம், எங்களைப் போன்ற சித்த மருத்துவர்களுக்கு ஊக்கம் அளித்ததன் விளைவாய் இரு மருந்துகளைக் கண்டறிந்தோம்.
1. நிலவேம்புக் குடிநீர் - 30 மிலி 2 வேளை 7 நாள்.
2. அமுக்ரா சூரணம் - 2 மாத்திரை 2 வேளை 7 நாள்
ஆகியவற்றைப் பல நோயருக்கு முயன்று, நோய் வராது தடுக்கக் கண்டோம்.
இந்தக் காலகட்டத்தில் கேரளாவில் இருந்து, கொசு மூலம் வந்த இந்நோயைத் தடுக்க, நாம் இம்மருந்துகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் எனத் திட்டமிட்டோம். இதைத் திட்டக்குழு துணைத் தலைவர் பேராசியர் நாகநாதன் அவர்களை அணுகி தெரிவித்தவுடன், அவர் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். இது அரசின் கொள்கையானது. அகம் மகிழ்ந்தோம். சிக்குன் குனியா நோய், தூய நீரில் உருப்பெறும், கொசுவால் பரவுகிறது. தொடர் காய்ச்சல், உடல் வலி, குறிப்பாக மூட்டுகளில் (சிறிய மூட்டுகள் உட்பட), எழுந்து இயங்க முடியாமை, சுரம் போனாலும் மாதக் கணக்கில் வலி நீங்காமை ஆகியவற்றோடு சொல்லொண்ணா துயரம் ஏற்படுத்தும் கொடிய நோய். கொசு ஏந்தி வரும் இந்த வைரசு பற்றிய குறிப்புகள், பழஞ் சித்த இலக்கியங்களில் இல்லை என்றாலும், இந்த நோயின் குறிகுணங்களும் அதற்குத் தீர்வும் கூறப்பட்டே உள்ளன.
இந்நோய் தடுக்கும் / நீங்கும் முதன்மை மருந்தான நிலவேம்பு (Andrographics paniculation) மூலிகை குறித்த பொதுகுணப்பாடல்
வாத சுரம் போகும்... என்றே தொடங்குகிறது. வாதம் என்பது, கீல்வாயு, உடல் நோவு, கனத்தல் ஆகியவற்றைக் குறிப்பதாகும்.
அடுத்த மருந்தாகிய, அமுக்ரா (Withania somifera) என்ற மூலிகை வேன் தூர், வலியைப் போக்குவதோடு எதிர்ப்பாற்றலைக் கூட்ட வல்லது. (Enblancing the immunity). ஆங்கில வலி நிவாரண மருந்துகள் (எ.டு. - Brufen) வயிற்று வலியை ஏற்படுத்துகின்றன. ஆனால், நமது அமுக்ரா சூரணம் வயிற்று வலியைப் போக்கும் தன்மை கொண்டது.
இந்த இரு மருந்துகளும், சிக்குன் குனியா வைரசுக்கு எதிரானதில்லை. ஆனால், நோயினால் ஏற்படும் வேதனை தடுக்கவும், போக்கவும் வல்ல எதிர்ப்பாற்றல் மருந்துகள். எந்தப் பக்க விளைவுகளும் இல்லாமல், குறைந்த செலவில் நிறைந்த பலனைத் தரும் இந்த இரு மருந்துகளும் தமிழக அரசின் கொள்கையால், தமிழ்மண்ணைச் சிக்குன் குனியா நோய் அண்டா மாநிலமாக ஆக்கப் போகின்றன.
சித்த மருத்துவம் இந்நோய்க்கு மட்டுமல்ல, கர்ப்பிணித் தாய்மார்களுக்கான வெளுப்பு நோய் தொடங்கி வெண்புள்ளிநோய், பக்கவாதம் எனப் பல தீரா நிலைகளுக்கும் தீர்வளித்து வருகிறதென்பதால், தமிழகத்தின் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சித்த மருத்துவப் பிரிவு தொடங்க ஆவன செய்ய வேண்டும். மேலும் தமிழ் நிலம் நலம் பெற தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றத்திற்கு அமைப்புக்குழு உருவாக்கிட வேண்டும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|