‘பள்ளிக்கூடம்' வளர்ந்த கதை
அன்பன்
திரையுலகின் வியாபார நீரோட்டத்தில் கரைந்து போகாமல் தனி அடையாளத்துடன் இருக்க வேண்டுமென யார் நினைத்தாலும் அவர்களுக்குச் சோதனைதான். அச்சோதனைகளைத் தொடர்ந்து அனுபவித்து வரும் தங்கர்பச்சான், தனது அடுத்த படமான ‘பள்ளிக்கூடம்' வெளியீட்டுக்குக் காத்திருக்கிறார். ‘களவாடிய பொழுதுகள்' என்கிற தன்னுடைய நாவலை, ‘பள்ளிக்கூடம்' என்ற பெயரில் திரைக்கதையாக்கி வைத்துக் கொண்டு அவர் பட்டபாடுகளை அவரே விவரிக்கிறார்.
"இந்தத் திரைக்கதையை வச்சுக்கிட்டு நான் ஏறி இறங்காத நிறுவனமே இல்லீங்க. ஏவிஎம், ஆஸ்கார் பிலிம்ஸ் போன்ற நிறுவனங்கள் தொடங்கி எல்லார் கிட்டயும் போயிட்டு வந்துட்டேன். இயக்குநர் சரண் இதைத் தயாரிக்க முன்வந்தார். அதுவும் சரியா வரல. கடைசியா இந்த மனிதர் (விஸ்வாஸ் சுந்தர்) நான் தயாரிக்கிறேன்னு வந்தாருங்க. தயாரிப்பாளர் கிடைக்காத போராட்டம் ஒரு பக்கம்னா இன்னொரு பக்கம் நடிகர்கள் பிரச்சினைங்க. முதல்ல சேரனும், எஸ்.ஜே. சூர்யாவும் நடிக்கிறதா இருந்தது. அவங்க மறுத்துட்டாங்க. அப்புறம் மிஷ்கின், கவுதம் மேனன்னு நான் நிறையப் பேரப் பார்த்தேன். யாரும் உடன்படல. இப்ப நரேன், சீமான், நான் மூணுபேரும் நடிச்சிருக்கோம்.
நடிகைகள் விசயத்திலும் இதேதான் நடந்துச்சு. மீரா ஜாஸ்மின், த்ரிஷாவிலிருந்து நான் கேட்காத நடிகைகளே இல்லை. ஆளாளுக்கு ஏதாவதொரு காரணம் சொல்லி நடிக்க வரமாட்டேன்னுட்டாங்க.
இந்தச் சிக்கலையெல்லாம் தாண்டி படப்பிடிப்புக்குப் போக நினைச்சபோது, சரியான பள்ளிக்கூடம் கிடைக்கல. தமிழகம் முழுவதும் நானும் என் உதவியாளர்களும் மூணு மாசமா தேடி ஆண்டி மடம் பக்கத்துல சூரக்குழினு ஒரு இடத்துல இந்தப் பள்ளிக்கூடத்தப் பார்த்தோம். பார்த்ததும் அப்படி ஒரு சந்தோஷம் எனக்கு. ஆளா இருந்தா ஓடிப்போய் கட்டிப்பிடிச்சுக்கலாம். பள்ளிக்கூடத்த என்ன பண்றது? அப்புறம் அங்க படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கி இரண்டு மூன்று கட்டங்களாகப் போயி படப்பிடிப்ப முடிச்சோம்.
படம் அவ்வளவு பிரமாதமா வந்திருக்கு. படத்தப் பார்த்த உடனே நீங்க படிச்ச பள்ளிக்கூடத்தப் பாக்க வண்டி ஏறிடுவீங்க. தமிழ்ப் படம்னு சொல்லிட்டு ஏதேதோ எடுக்கிறானுங்களே, அந்த மாதிரி இல்லாம இது உண்மையான தமிழ்ப்படம். நம்ம மக்களோட வாழ்க்கையை காட்டியிருக்கேன்.
இதுல குறிப்பா செய்தின்னு ஒண்ணும் நான் சொல்லல. ஆனா படம் பார்க்கிற ஒவ்வொருத்தருக்கும் ஒரு செய்தி இந்தப் படத்துல இருக்கும். அவுங்கவுங்க தன்மைக்கேற்ப அதப் புரிஞ்சுக்குவாங்க.
படத்துல நடிச்ச நடிகர்கள் எல்லாம் நல்லா ஒத்துழைப்புக் கொடுத்தாங்க. நரேன், சீமான், சினேகா, ஸ்ரேயா ரெட்டின்னு எல்லாருக்குமே இந்தப் படம் முக்கியமான படமா இருக்கும்.
படம் முன்னாடியே தயாராயிடுச்சு. வெளியீட்டுக்கு முன்னால அனுப்புனாதான் கேன்ஸ் படவிழாவுல போட்டிக்குப் போக முடியும். அதனால அங்கே அனுப்பினோம். மொத்தம் 2011 படங்கள்ல இருந்து 60 படங்கள்ல ஒண்ணு என்கிற வரைக்கும் வந்துச்சு. இதனால இப்ப 13க்கும் மேற்பட்ட உலகப் படவிழாக்கள்ல படத்தக் கேக்கறாங்க.
அங்க போய் நல்ல பேர வாங்கிக்குடுத்த இந்தப் படத்துக்கு இங்கு திரையரங்கு கெடைக்கிறதுதாங்க கஷ்டமா இருக்குது. எப்படியோ எல்லாப் போராட்டத்தையும் தாண்டி ஆகஸ்ட்ல படம் வந்துடும். பாருங்க'', என்று முடித்துக் கொண்டார்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|