ஊர்சுற்றி
வெ.கிருஷ்ணவேணி
ஊர் சுற்றியலைந்து
வீட்டை அடைந்த போது
அம்மா ஏசினாள்
தண்டச்சோறு
உனக்குப் பலனாயிரு - அன்றி
உலகத்திற்குப் பலனாயிரு
விரத்தியுடன்
வீதிகளில் நடந்தேன்.
உடல் முழுவதும்
பனிப் போர்த்தி
இலைகள் தூங்கும்
மார்கழி மாதப் பின்னிரவில்
பழக் கமிஷன் மண்டியில்
தரம் பிரித்து
பழங்களைப் பொறுக்கும்
எழுபது வயது பழக்
கிழவியைக் கண்ணுற்ற போது
தேகத்திற்கும்
குரலுக்கும்
இசைவின்றி
கடும் வெயிலில்
சுடும் தரையில்
கால்கள் பாவ
மார்க்கெட்டில்
மனிதக் கூட்டங்களைக்
கூவியழைத்து
பேனாக்கள் விற்கும்
பெரியவரைப் பார்க்கும் போது
வாய்ச் சவடால்களும்
வம்பளந்த பொழுதுகளும்
வீம்புச் சண்டைகளும்
வீணடித்த நாள்களும்
நினைவில் மோதின
இன்று
பாடம் நடக்கிறது.
பாதியில் படிப்பை நிறுத்தி
மீதியை வீதியில் கழிக்கும்
சின்னஞ் சிறுவர்களுக்கும்
சிரட்டை போல் பரட்டைத்
தலையுடன் அலையும்
பள்ளிப் படியறியா
சேரிக் குழந்தைகளுக்கும்
இன்று பாடம் நடக்கிறது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|