|
பாரதியார் பாடல்கள்
கண்ணன் என் காதலன் - 3 (காட்டிலே தேடுதல்)
ஹிந்துஸ்தானி தோடி - ஆதி தாளம்
ரஸங்கள்: பயாநகம், அற்புதம்
திக்குத் தெரியாத காட்டில் - உனைத்
தேடித் தேடி இளைத்தேனே.
1. மிக்க நலமுடைய மரங்கள்; - பல
விந்தைச் சுவையுடைய கனிகள்; - எந்தப்
பக்கத்தையும் மறைக்கும் வரைகள்; - அங்கு
பாடி நகர்ந்து வரு நதிகள்; - ஒரு (திக்குத்)
2. நெஞ்சிற் கனல்மணக்கும் பூக்கள், - எங்கும்
நீளக் கிடக்குமிலைக் கடல்கள், - மதி
வஞ்சித் திடுமகழிச் சுனைகள், - முட்கள்
மண்டித் துயர்கொடுக்கும் புதர்கள், - ஒரு (திக்குத்)
3. ஆசை பெறவிழிக்கும் மான்கள், - உள்ளம்
அஞ்சக் குரல்பழகும் புலிகள், - நல்ல
நேசக் கவிதைசொல்லும் பறவை, - அங்கு
நீண்டே படுத்திருக்கும் பாம்பு, - ஒரு (திக்குத்)
4. தன்னிச்சை கொண்டலையும் சிங்கம் - அதன்
சத்தத் தினிற்கலங்கும் யானை - அதன்
முன்னின் றோடுமிள மான்கள் - இவை
முட்டா தயல்பதுங்குந் தவளை - ஒரு (திக்குத்)
5. கால்கை சோர்ந்துவிழ லானேன் - இரு
கண்ணும் துயில்படர லானேன் - ஒரு
வேல்கைக் கொண்டுகொலை வேடன் - உள்ளம்
வெட்கங் கொண்டொழிய விழித்தான் - ஒரு (திக்குத்)
6. "பெண்ணே, உனதழகைக் கண்டு - மனம்
பித்தங்கொள்ளு" தென்று நகைத்தான் -"அடி
கண்ணே, எனதிருகண் மணியே - உனைக்
கட்டித் தழுவமனம் கொண்டேன்.
7. சோர்ந்தே படுத்திருக்க லாமோ? - நல்ல
துண்டக் கறிசமைத்துத் தின்போம் - சுவை
தேர்ந்தே கனிகள் கொண்டு தருவேன் - நல்ல
தேங்கள் ளுண்டினிது களிப்போம்!"
8. என்றே கொடியவிழி வேடன் - உயிர்
இற்றுப் போகவிழித் துரைத்தான் - தனி
நின்றே இருகரமுங் குவித்து - அந்த
நீசன் முன்னர் இவை சொல்வேன்.
9. "அண்ணா உனதடியில் வீழ்வேன் - எனை
அஞ்சக் கொடுமைசொல்ல வேண்டா - பிறன்
கண்ணாலஞ் செய்துவிட்ட பெண்ணை - உன்றன்
கண்ணாற் பார்த்திடவுந் தகுமோ?"
10. "ஏடீ, சாத்திரங்கள் வேண்டேன்; - நின
தின்பம் வேண்டுமடி, கனியே! - நின்றன்
மோடி கிறுக்குதடி தலையை, - நல்ல
மொந்தைப் பழையகள்ளைப் போலே!"
11. காதா லிந்தவுரை கேட்டேன் - 'அட
கண்ணா!' லென்றலறி வீழ்ந்தேன் - மிகப்
போதாக வில்லையிதற் குள்ளே - என்றன்
போதந் தெளியநினைக் கண்டேன்.
12. கண்ணா! வேடனெங்கு போனான்? -உனைக்
கண்டே யலறிவிழுந் தானோ? - மணி
வண்ணா! என தபயக் குரலில் - எனை
வாழ்விக்க வந்த அருள் வாழி!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|