Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruRebelBharathi
பாரதியார் பாடல்கள்

             கண்ணன்- எனது சற்குரு

புன்னாகவராளி - திஸ்ர ஜாதி - ஏகதாளம்
ரஸங்கள் : அற்புதம், பக்தி

சாத்திரங் கள்பல தேடினேன் - அங்கு
        சங்கையில் லாதன சங்கையாம் - பழங்
கோத்திரங்கள் சொல்லு மூடர்தம் - பொய்ம்மைக்
        கூடையில் உண்மை கிடைக்குமோ? - நெஞ்சில்
மாத்திரம் எந்த வகையிலும் - சக
        மாயம் உணர்ந்திடல் வேண்டுமே - என்னும்
ஆத்திரம்நின்ற திதனிடை - நித்தம்
        ஆயிரந் தொல்லைகள் சூழ்ந்தன. 1


நாடு முழுதிலுஞ் சுற்றிநான் - பல
        நாள்கள் அலைந்திடும் போதினில், - நிறைந்
தோடும் யமுனைக் கரையிலே - தடி
        ஊன்றிச் சென்றாரோர் கிழவனார்; - ஒளி
கூடுமுகமும், தெளிவுதான் - குடி
        கொண்ட விழியும், சடைகளும், - வெள்ளைத்
தாடியும் கண்டு வணங்கியே - பல
        சங்கதி பேசி வருகையில், 2


என்னுளத் தாசை யறிந்தவர் - மிக
        இன்புற் றுரைத்திட லாயினர் -"தம்பி,
நின்னுளத் திற்குத் தகுந்தவன், - சுடர்
        நித்திய மோனத் திருப்பவன், - உயர்
மன்னர் குலத்தில் பிறந்தவன், - வட
        மாமது ரைப்பதி யாள்கின்றான்; - கண்ணன்
தன்னைச் சரணென்று போவையேல் - அவன்
        சத்தியங் கூறுவன்" என்றனர். 3


மாமது ரைப்பதி சென்றுநான் - அங்கு
        வாழ்கின்ற கண்ணனைப் போற்றியே, - என்றன்
நாமமும் ஊரும் கருத்துமே - சொல்லி
        நன்மை தருகெனவேண்டினன்; - அவன்
காமனைப் போன்ற வடிவமும் - இளங்
        காளையர் நட்பும் பழக்கமும் - கெட்ட
பூமியைக் காக்குந் தொழிலிலே - எந்தப்
        போதுஞ் செலுத்திடுஞ் சிந்தையும், 4


ஆடலும் பாடலும் கண்டுநான் - முன்னர்
        ஆற்றங் கரையினில் கண்டதோர் - முனி
வேடந் தரித்த கிழவரைக் - கொல்ல
        வேண்டுமென் றுள்ளத்தில் எண்ணினேன் -'சிறு
நாடு புரந்திடு மன்னவன் - கண்ணன்
        நாளுங் கவலையில் மூழ்கினோன்; -தவப்
பாடுபட் டோர்க்கும் விளங்கிடா -உண்மை
        பார்த்திவன் எங்ஙனம் கூறுவான்?' 5


என்று கருதி யிருந்திட்டேன்; -பின்னர்
        என்னைத் தனியிடங் கொண்டுபோய், - "நினை
நன்று மருவுக! மைந்தனே! - பர
        ஞான முரைத்திடக் கேட்பை நீ; - நெஞ்சில்
ஒன்றுங் கவலையில் லாமலே - சிந்தை
        ஊன்ற நிறுத்திக் களிப்புற்றே - தன்னை
வென்று மறந்திடும் போழ்தினில் - அங்கு
        விண்ணை யளக்கும் அறிவுதான்! 6


சந்திரன் சோதி யுடையதாம் - அது
        சத்திய நித்திய வஸ்துவாம்; - அதைச்
சிந்திக்கும் போதினில் வந்துதான் - நினைச்
        சேர்ந்து தழுவி அருள்செயும்; - அதன்
மந்திரத் தாலிவ் வுலகெலாம் - வந்த
        மாயக் களிப்பெருங் கூத்துக் காண் - இதைச்
சந்ததம் பொய்யென் றுரைத்திடும் - மடச்
        சாத்திரம் பொய் யென்று தள்ளடா! 7

"ஆதித் தனிப்பொரு ளாகுமோர்; - கடல்
        ஆருங் குமிழி உயிர்களாம், - அந்தச்
சோதி யறிவென்னும் ஞாயிறு - தன்னைச்
        சூழ்ந்த கதிர்கள் உயிர்களாம்; - இங்கு
மீதிப் பொருள்கள் எவையுமே - அதன்
        மேனியில் தோன்றிடும் வண்ணங்கள்; - வண்ண
நீதி யறிந்தின்பம் எய்தியே - ஒரு
        நேர்மைத் தொழிலில் இயங்குவார்; 8


"சித்தத்தி லேசிவம் நாடுவார்; - இங்கு
        சேர்ந்து களித்துல காளுவார்; - நல்ல
மத்த மதவெங் களிறுபோல் - நடை
        வாய்ந்திறு மாந்து திரிகுவார்; - இங்கு
நித்தம் நிகழ்வ தனைத்துமே - எந்தை
        நீண்ட திருவரு ளால்வரும் - இன்பம்
சுத்த சுகந்தனி யாநத்தம் - எனச்
        சூழ்ந்து கவலைகள் தள்ளியே. 9


"சோதி அறிவில் விளங்கவும் - உயர்
        சூழ்ச்சி மதியில் விளங்கவும் -அற
நீதி முறைவழு வாமலே - எந்த
        நேரமும் பூமித் தொழில் செய்து -கலை
ஓதிப் பொருளியல் கண்டுதாம் - பிறர்
        உற்றிடுந் தொல்லைகள் மாற்றியே -இன்பம்
மோதி விழிக்கும் விழியினார் - பெண்மை
        மோகத்தில், செல்வத்தில், கீர்த்தியில், 10


ஆடுதல், பாடுதல். சித்திரம் - கவி
        யாதி யினைய கலைகளில் - உள்ளம்
ஈடுபட் டென்றும் நடப்பவர் - பிறர்
        ஈன நிலைகண்டு துள்ளுவார் - அவர்
நாடும் பொருள்கள் அனைத்தையும் - சில
        நாளினில் எய்தப் பெறுகுவார் - அவர்
காடு புதரில் வளரினும் - தெய்வக்
        காவனம் என்றதைப் போற்றலாம். 11


"ஞானியர் தம்மியல் கூறினேன் - அந்த
        ஞானம் விரைவினில் எய்துவாய்" - எனத்
தேனி லினிய குரலிலே - கண்ணன்
        செப்பவும் உண்மை நிலைகண்டேன் - பண்டை
ஈன மனிதக் கனவெலாம் - எங்ஙன்
        ஏகி மறைந்தது கண்டிலேன்; - அறி
வான தனிச்சுடர் நான்கண்டேன்! - அதன்
        ஆட லுலகென நான் கண்டேன்! 12



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com