|
பாரதியார் பாடல்கள்
நடிப்புச் சுதேசிகள்
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடீ - கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடீ. 1
கூட்டத்திற் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்திற் கொள்ளாரடீ - கிளியே
நாளில் மறப்பா ரடீ. 2
சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்புகளும்
அந்தகர்க் குண்டாகுமோ? - கிளியே
அலிகளுக் கின்ப முண்டோ? 3
கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமையற்ற
பெண்களின் கூட்டமடீ - கிளியே
பேசிப் பயனென் னடீ. 4
யந்திர சாலையென்பர் எங்கள் துணிகளென்பார்
மந்திரத்தாலே யெங்கும் - கிளியே
மாங்கனி வீழ்வ துண்டோ? 5
உப்பென்றும் சீனிஎன்றும் உள்நாட்டுச் சேலைஎன்றும்
செப்பித் திரிவா ரடீ - கிளியே
செய்வ தறியா ரடீ. 6
தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்திஎன்றும்
நாவினாற் சொல்வ தல்லால் - கிளியே
நம்புத லற்றா ரடீ. 7
மாதரக் கற்பழித்து வன்கண்மை பிறர்செய்யப்
பேதைகள் போலுயிரைக் - கிளியே
பேணி யிருந்தா ரடீ. 8
தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள்செய்ய
ஆவி பெரிதென்றெண்ணிக் - கிளியே
அஞ்சிக் கிடந்தா ரடீ. 9
அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்
உச்சத்திற் கொண்டா ரடீ - கிளியே
ஊமைச் சனங்க ளடீ. 10
ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்றுமில்லா
மாக்களுக்கோர் கணமும் - கிளியே
வாழத் தகுதி யுண்டோ? 11
மானம் சிறிதென்றெண்ணி வாழ்வு பெரிதென்றெண்ணும்
ஈனர்க் குலகந் தனில் - கிளியே
இருக்க நிலைமை யுண்டோ? 12
சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல்
வந்தே மாதர மென்பார் - கிளியே
மனதி லதனைக் கொள்ளார். 13
பழமை பழமையென்று பாவனை பேசலன்றி
பழமை இருந்த நிலை - கிளியே
பாமர ரேதறிவார்! 14
நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழிசெல்வத்
தேட்டில் விருப்புங் கொண்டே - கிளியே
சிறுமை யடைவா ரடீ.! 15
சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல்கண்டும்
சிந்தை இரங்கா ரடீ - கிளியே
செம்மை மறந்தா ரடீ. 16
பஞ்சத்தும் நோய்களிலும் பாரதர் புழுக்கள்போல்
துஞ்சத்தம் கண்ணாற் கண்டும் - கிளியே
சோம்பிக் கிடப்பா ரடீ. 17
தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சியுறார்
வாயைத் திறந்து சும்மா – கிளியே!
வந்தே மாதர மென்பார். 18
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|