Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthu Ezhuthu
Puthu EzhuthuPuthu Ezhuthu
ஜூலை 2006
சுகிர்தராணி கவிதைகள்

Lady சினையுறாதப் பறவையாகிப் பறக்கின்றேன்
இடவலமெங்கும் தேகத்தின் பெருவெளி
துயரத்தின் கயிறு பிணைக்காத
கால்கள் காற்றை வலிக்கின்றன
இமையற்ற விழியசைவுகளில்
புவியின் வளைக்கோணம்
நெடிய இறக்கைகளின் நிழல்கள்
வாழ்வின் புகைநிலங்களைப் போர்த்துகின்றன.
மயிரின் கதகதப்புக்குள் ஒளிந்திருக்கும்
வெளிர்தசையின் இரத்தம்
புயல்கண்ணாய் சுழல்கிறது
விரலிடைகளில் வனச்சஞ்சாரமும்
மனிதர்கள் கடந்து திரியும் பரப்பும்
சட்டமிட்ட சித்திரமாய் நகர்கின்றன.
என் கூரிய அலகால்
உடலைக் கோதுகின்றேன்
இறகுகள் உதிர்ந்துன்
நீர்நிலைகளில் சொட்டுகிறது இரத்தம்
உன்னிருப்பிடத்தின் உத்திரங்கள்
கரைந்தமிழ
கூடலசைவில் புரண்டுபடுக்கும்
உன் முதுகினில் உறுத்துகிறது,
நானற்ற கூண்டின் பெரும்சாவி.



ஒருவேளை

தோலினால் அடி தைக்கப்பட்டக்
கூடையுடன் அவள் கிளம்புகிறாள்
முனைமழுங்கிய இரும்புத்தகடும்
சேகரிக்கப்பட்ட சாம்பலும்
அவள் கைகளில் கனக்கின்றன.
மனித நெரிசலில் திணறும்
வீடொன்றின் பின்புறம் வந்து நிற்கிறாள்
பார்வையில் படுகிறது.
ஆணியில் சுழலும் சதுரத்தகடு.
ஒற்றைக்கையால் அதை உயர்த்தியபடி
சாம்பலையள்ளி உள்ளே வீசுகிறாள்
பின்
துளையின் முரட்டுப் பக்கங்களில்
முழங்கை சிராய்க்க
இடவலமாய் கூட்டிக் கூட்டி
கூடையில் சரிக்கிறாள்.
நிரம்பிய கூடை தலையில் கனக்க
நெற்றியில் வழியும் மஞ்சள்நீரை
புறங்கையால் வழித்தபடி
வெகுஇயல்பாய் கடந்து போகிறாள்,
அவளுக்காக என்னால் முடிந்தது
ஒருவேளை மலங்கழிக்காமலிருப்பது



புகையும் சாம்பல்

பனைகள் நிரம்பிய முரட்டுவெளியில்
பூஉதிர பிஞ்சுதிர
ஒலித்தடங்குகிறது குரல்.
புதுமொந்தையின் நிறச்சோறு தீர
துக்கத்தைக் கடந்தவன் போல்
விறைத்த சடலத்திற்குத் தீயிடுகிறான்.
நெருப்பின் காமம் தோலாடையை உரிக்க
வெண்தசைகள் பளிச்சிடுகின்றன.
சூட்டின் வலிமை நரம்புகளைச் சுண்ட
உறுப்புகளை உயர்த்துகிறது சுட்ட உருவம்.
நீண்ட கோலினால் தட்டுகிறான்
முகத்தில் தெறிக்கின்றன நெருப்புத் துளிகள்.
சிதையின் பக்கங்களைக்
குத்திக் கிளறுகிறான்.
வண்டல் நிறத்தில் உருகுகிறது உடல்நெய்.
ஆகாயக் கழுகின் வட்டமிடல்போல்
இராமுழுவதும் சுற்றிச் சுழல்கிறான்.
மதுவின் கிறுகிறுப்பும் காற்றின் நெடியும்
அவனைக் கீழே தள்ளுகின்றன
ஆறடி நீளத்திற்குப்
புகைந்து கொண்டிருக்கிறது சாம்பல்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com