இராமன் எத்தனை இராமனடி?
குமரி மைந்தன்
இராமாயணத்தின் முதன்மை மாந்தர்களான இராவணனும் இராமனும் குமரிக் கண்டத்தினராகவே நம் தொன்மங்கள் தரும் செய்திகள் காட்டுகின்றன.
தசரதனுக்கு எட்டுத் தலைமுறைக்கு முன்பு வேறொரு தசரதன் வருகிறான். அவன் மகன் மூலகன். இவன் நாரீகவசன் என்றும் அழைக்கப்படுகிறான். பரசுராமனின் தாக்குதலிலிருந்து காத்துக்கொள்ள பெண்களைக் கவசமாகப் பயன்படுத்தியதால் அவன் அப்பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. பரசுராமனால் அழிவை எதிர்நோக்கியிருந்த இச்சுவாகு மரபை மீட்டதனால் அவன் மூலகன் எனப்பட்டான். 21 தலைமுறை அரசர்களைப் பரசுராமன் கொலை செய்ததாகத் தொன்மம் கூறுகிறது. ஓர் இராச மரபு 21 தலைமுறைகள் ஆட்சியிழந்து மீண்டும் அரசுரிமை பெற்றதாக இதைக் கொள்ளலாம்.
இந்த வகையில் இராமனுக்கு 29 தலைமுறைகளுக்கு முந்தியவன் பரசுராமனும் அவனால் கொல்லப்பட்டவனான கார்த்தவீரியார்ச்சுனனும், கார்த்தவீரியார்ச்சுனன் காலத்தவர்களாக இராவணனும் வாசுகியும் கூறப்படுகின்றனர். இதன் மூலம் இராமாயணப் போர் பற்றிய கதை கேள்விக்குரியதாகிறது.
இராமனின் உண்மையான வரலாறு புத்தசாதகக் கதைகளில் ஒன்றான தசரத சாதகத்தில் கூறப்பட்டுள்ளது. தந்தை தசரதனின் விருப்பப்படி தம்பி இலக்குவனுடனும் தங்கை சீதையுடனும் காடு சென்ற இராமன் 14 ஆண்டுகள் காட்டினுள் இருந்து விட்டுத் திரும்பி வந்து தங்கையை மணந்துகொண்டு ஆட்சி செய்தான் என்பது தான் இந்தக் கதை.
இந்தக் கதையின் நம்பகத் தன்மையே தங்கையை அண்ணன் மணந்ததில் தான் அடங்கியுள்ளது. இராமாணயம் போன்ற காப்பியங்கள் எழுதப்பட்ட காலத்தில் முறையற்றது என்று கருதப்பட்ட உடன்பிறந்தவர்களுக்கிடையிலான திருமணம் முந்திய மக்களிடையில் இருந்தது என்பதால் இந்தக் கதை உண்மையாக இருக்க வேண்டும்.
அத்துடன் விதேகன் எனப்படும் மிதிலன் இராமனுடைய மரபாகிய இச்சவாகு மரபினன். இது வைதேகி, மைதிலி என்றெல்லாம் அழைக்கப்படும் சீதையும் இராமனும் உடன்பிறந்தவர்கள் என்ற சாதகக் கதையின் கூற்றை உறுதி செய்கிறது.
தசரத சாதகக் கதையின்படி தசரதனின் தலைநகர் அயோத்தி அல்ல. காசியில் தான் தசரதனும் இராமனும் ஆண்டனர் என்கிறது கதை. இராமன் பிறந்த இடம் மெசப்பொட்டோமியாவில் இருந்தது என்று அண்மையில் ஓர் அறிஞர் கூறியிருக்கிறார். பண்டை எகிப்திய அரசர்களில் ராம்சே என்ற பெயருள்ளவர்கள் வருகின்றனர்.
எகிப்திய அரசர்கள் மட்டுமல்ல, மக்களிடையிலும் கூட உடன்பிறந்தவர்களை மணம் புரியும் வழக்கம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் குமரிக் கண்டத்தில் வாழ்ந்திருந்த இராமனின் நினைவாக அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கும் சென்றவர்கள் பெயர்களை வைத்திருக்கலாம் என்று கொள்ள வேண்டியுள்ளது. குமரிக் கண்டத்தில் விதேக தேசத்தின் மிதிலை அவனது தலைநகராயிருக்கலாம்.
தசரத சாதகத்தில் இராம-இராவண போரைப் புகுத்திய சூழலையும் நாம் ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. மெளரிய மரபு வலுவிழந்து சிறுசிறு அரசுகள் வடஇந்தியாவில் தலையெடுக்கத் தொடங்கிய நேரத்தில் வடமேற்கில் கிரேக்க, உரோமர்கள் ஆட்சி செலுத்தினர்.
அரச மதங்களாக மாறிவிட்ட புத்த, சமண சமயங்கள் மக்களிடையில் வேர்களை இழந்திருந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அடித்தள மக்களின் தெய்வங்களை இணைத்து சிவனியம் (சைவம்), மாலியம் (வைணவம்) ஆகிய சமயங்களைப் பார்ப்பனர்கள் உருவாக்கிய போது கிரேக்க, உரோமானிய ஆட்சியாளர்கள் புத்த, சமண சமயங்களுக்கு உதவியது போல் அவற்றுக்கும் உதவினர். அதே நேரத்தில் விந்தியத்துக்குத் தெற்கேயிருந்து வடஇந்தியாவினுள் ஆதிக்கம் செலுத்திய சாதவாகன ஆட்சியாளர்களுக்கெதிரான ஒரு கூட்டணியாக இந்த பார்ப்பனர் - யவனர் உறவு வளர்ந்தது.
அதன் ஒரு இலக்கிய வெளிப்பாடாக கிரேக்கக் காப்பியமான இலியட்டின் வடிவில் தசரத சாதகத்தின் கதை சீதையை இராவணன் தூக்கிப் போனதாகவும் தூக்கிப் போன இலங்கை எனும் தென்பகுதி அரசனான இராவணனை இராமன் கொன்று மீட்டதாகவும் எழுதப்பட்டது. இவ்வாறு வட இந்தியத் தேசியமே ஒரு வெளிவிசையின் துணையுடன் தான் தன்னைத் தோற்றுவித்துக் கொண்டது தெரிய வருகிறது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|