220 அண்டங்களும் பதினேழு அறைகளும்
நட.சிவக்குமார்
அந்த மரக்கிளைகளில் அமர்ந்த வல்லூறும் ஆந்தையும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்தபடியே காகங்களிடமும் மயில்களிடமும் எதேதோ பேச கிளம்பி கொண்டிருந்தன. நீண்டு வளர்ந்த கமுகம் மரங்களை சுற்றி கிளிகள் சத்தம் போட்டுக் கொண்டும் பாளைகளில் ஏறி உட்கார்ந்து கொண்டுமிருந்தன. கண்ணுக்கெட்டிய வானம் முழுக்கவும் வெள்ளைக் கொக்குகள் தங்களது சிறகுகளை விரித்துக் கொண்டு பறப்பது மாதிரி மோகங்கள் பறந்து கொண்டிருந்தன. செவ்வரளி மணம் மிக்க காற்று அண்ட வெளிகளில் நிரம்பி வழிந்தன.
அங்கே தூரத்தில் ஆமை தோடுகளாலான பலம் வாய்ந்த ஒரு வெளிச்ச பிரவாகம் வானத்தை துரந்து ஊடுருவும் அளவுக்கு குகைக்குள்ளிலிருந்து வந்து கொண்டிருந்தது. கரும் துளசிகளால் சூழப்பட்ட அறைக்குள்ளிருந்து ரேசகமூரககும்ப முறைகளில் வாசியோகம் ஒருவரால் செய்து கெண்டிருப்பது மட்டும் உணர முடிந்தது. ஆனால் குகைக்குள்ளிருக்கும் கரும் துளசி காட்டைத் தான் பலரும் பார்த்திருக்கிறார்கள்; தவிர, அவனையாரும் பார்த்ததில்லை. ஆனால் அவன் குகைக்குள்ளிலிருந்து பஞ்சபூதங்களை இயக்கியபடி அல்லது அவனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தபடி இருந்தான். அவன் மூச்சை ரேசகமூக கும்ப முறைப்படி வெளிவிடும் போது அது இரவாகவும் வலது பாகத்திலிருந்து வந்தால் அது பகலாகவும் மாறிக் கொண்டிருந்ததை கூட பலராலும் அறிந்து கொள்ள முடியவில்லை.
ஒரு நாள் அவன் குகைக்குள்ளிருந்த கரும் துளசிக் காட்டிலிருந்து வெளியே வந்தான். அவனது உடலை சுற்றி இருந்த ஐம்பொன் ரோமங்களிலிருந்து உதிர்ந்த ஒளித் துகள்கள் வழியாக பூமி பரப்பில் மாந்தீரீக செடிகளும் மருத்துவச் செடிகளும் முளைத்து கொண்டிருந்தன.. இடதுகால் பாதபெருவிரல் அழுத்தும் இடங்களில் பொங்கும் நீர் கட்டவிழ்த்து ஓடிக்கொண்டிருந்தது பூமியை உரசிய தலைமுடிகளில் வாழ்ந்து கொண்டிருந்த கெவுளி குஞ்சுகள் வெளி வந்த இடத்திலிருந்து வெட்டுபட்டு பூமிக்கடியில் வன்புணர்ச்சியால் மரணமடைந்த உயிர்கள் உயிர்பெற்று உலாவிக் கொண்டன.
அவன் ஒரு குளிகையை வாயில் வைத்துக் கொண்டும் கமலி என்ற குளிகையை உடலில் அணிந்து கொண்டும் சோதிபோல் இருந்த அண்டத்தில் மிகவேகமாக நுழைந்தான். அங்கே கற்பத்தை உட்கொண்டு சித்தியடைந்த யோகிகளும் ஞானத்தின் எல்லையில் நிற்கும் சித்தர்களையும் கண்டு அவர்களின் பாதங்களில் விழுந்து வணங்கினான். இதை கண்ட அவர்கள் ‘உன்னிடம் என்ன சித்து உள்ளது’ என்று வினவினார்கள். 60 கோடி சித்துகள் என்னிடம் இருக்கிறது என்றவுடன் நீ சிறுபயல் சிரித்தபடி கூறிவிட்டு இன்றும் பார்க்க வேண்டியது நிறைய உள்ளது. அவைகளையும் பார்த்து விட்டு வா அப்போது தான் உனக்கு புரியுமென அவர்கள் கூறினார்கள்.
உடனே அவன் அவ்வண்டத்தை விட்டு மற்றொரு அண்டத்திற்குள் புகுந்தபோது அங்கெல்லாம் நிற்கும் பலரையும் பார்த்தான். அவர்களின் பாதங்களைத் தொட்டு வணங்கி பலமுறை வலம் வந்தபிறகும் அவர்கள் அசைவுற்று நிற்பதைக் கண்டு மௌனசமாதி என முடிவுக்கு வந்தவனாய் வேறொரு அண்டத்திற்கு காலடி வைத்தான். அங்கு சித்தர்களையும் அங்கிருந்த ஒரு பெரிய நூலையும் கண்டு அவர்களிடம் இந்த நூலை எழுதியது யாரென வினவினான். சிவன் பராசக்திக்கு 17 லட்சம் பாடல்களாக எழுதிய நூல் என்றும், இதனை ஆதி முதல் அந்தம் வரை அக்குவேறாக அலசி படித்து விட்டதாகவும் கூறினார்கள். இந்த வார்த்தைகளைக் கேட்ட அவனுக்கு சிரிப்பு வந்தது.
இந்நூலை படித்து கரைகண்ட நீங்கள் ஏன் இதனை சுருக்கி மற்றொரு நூலாக எழுத வில்லை என கேட்டவுடன், இவ்வளவு மகாபெரிய நூலை சுருக்கி எழுத சிவனால் கூட இயலாது. அப்படி யாராவது சுருக்கம் செய்தால் அதனை எங்களிடம் கூறவும் என அவர்கள் அவனிடம் விண்ணப்பித்தார்கள். நூலின் இந்த பதினேழு லட்சம் சாரத்தை அதன் பொருள் குன்றாமல் பிழைகளை எல்லாம் திருத்தி சுருக்கி “பஞ்சபூதபஞ்சீகரன சுலோக குறிப்புகள்” என்று எழுதியுள்ளதாகவும் மேலும் அது இவ்வண்டத்தின் தென்பாகத்தில் உள்ள 160தாவது அண்டத்தில் என்னால் சொல்லப்பட்ட இந்த நூல் உள்ளது. அதனை வாங்கி படித்துப் பாருங்கள் என்றும் அவன் கூறினான்.
அவர்கள், ‘நீங்கள் கூறிய நூலில் எல்லா வகையான அங்கங்களும் பிசகில்லாமல் இருக்குமா? அது ஈசன் நூலை விடவும் உயர்ந்ததா என்றும் வினாவி னார்கள். அவன் இறுமாப்புடன் சிரித்துக் கொண்டு அவர்களின் பின்னே வந்து எனது அண்டத் திலிருந்து எடுத்து படித்து விட்டு கூறுங்கள் என்று கூறிவிட்டு உடனே பறந்து மற்றொரு அண்டத்தில் புகுந்தான். அப்போது அந்த அண்டம் முழுவதும் தீயால் எரிந்து கொண்டிருந்தது. உடனே அங்கிருந்து தப்பித்து மறு அண்டத்தில் புகுந்தான். அங்கே பல பக்தர்கள் உலாவி கொண்டு திரிந்தனர். அவர்களின் மேனி தங்கம் போல் ஜொலித்தது. அவர்கள் அவனை அன்போடு அழைத்தனர். பிறகு நீ யார் எங்கு வசிக்கிறீர்கள் இப்படி ஆகாயத்தில் பறக்கும் குளிகை முறைகளையும் காயசித்தி முறைகளையும் எந்த நூலை பார்த்து கற்று கொண்டீர்கள் என்று மிகுந்த ஆர்வத்தோடு கேட்டார்கள்.
‘அந்த பதினேழு லட்சம் பாடல்கள் கொண்ட நூலை சுருக்கி பிழைதிருத்தி எழுதிக் கொண்டி ருந்த போது இவ்வளவு சித்தி களையும் பெற்றேன். அது மட்டுமின்றி பல அண்டங்களையும் பதினேழு அறைகளையும் தாண்டி பார்த்து விட்டேன்’ என்று கூறினான்.
‘அப்படியானால் நான் ஒருமுறை அந்த குளிகையை கொண்டு பார்த்து விட்டு வருகிறேன். அதை என் கையில் கொஞ்ச நேரம் கொடுங்கள்’ என்று ஒருவர் அவனிடம் கேட்டார். ‘உங்கள் கையில் கொடுப்பதை பற்றி எனக்கு கவலையில்லை யான் பெற்ற இன்ப அனுபவ வெளிகளை நீங்களும் சுவைப்பதற்கு எனக்கும் ஆசையாகத் தான் உள்ளது. ஆனால் நீங்கள் அதனை எடுத்து கொண்டு ஓடிவிட்டால் என்னால் மீண்டும் என்னுடைய அண்டத்திற்கு செல்ல முடியாது’என்று தயங்கினான். அவனது தயக்கம் சரியானது தான் என்பது படிக்கும் உங்களுக்கு தெரியும், இருந்தாலும். . .
அதற்கு அவர் சீ! குளிகையை எவனாவது திருடுவார்களா? நானென்ன அறிவு கெட்ட ஜென்மமா? சோதித்துப் பார்த்து விட்டு உடனே தருகிறேன் என்று கூறியவுடன் தயக்கமில்லாமல் அவன் அவரின் கையில் குளிகையை வைத்தான். உடனே அவர் கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு மறைந்து பறந்து விட்டார். அவரைக் காணாமல் தவிக்க வேண்டிய நிலமை ஏற்பட்டது. அவன் இப்படி செய்வார் என்று நினைக்காத அவன் கமலி என்ற குளிகையை பயன் படுத்தி அச்சித்திரை பின் தொடர்ந்தான்.
அவரைப் பின் தொடர்ந்து செல்லுகையில் அவர் ஆயிரத்து எட்டு அண்டங்களை தாண்டி சென்று கொண்டிருந்தார். மேலும் புவனங்களை கடந்து செல்லு கையில் கடைசி புவனத்தில் வைத்து அவரைப் பிடித்தான். அப்படி அவரைப் பிடிக்கும் பொழுது மீண்டும் தப்பித்து அண்டவெளியில் பறந்தார். மூன்று வகையான பாழ் மண்டபங்களையும் கடந்து பிடித்து கொள்ள முடியாத அளவுக்கு பறந்து கொண்டிருந்தார் அவர். அவனுக்கு கோபமாக வந்தது. ஆனால் பொறுமை காக்க கூடிய சூழல் ஆகையால் அவன் மூச்சு காட்ட வில்லை. ஏனெனில் குளிகையை அவர் அனுமதியோடுதான் பெற வேண்டும். இல்லாவிட்டால் அவர் சுய நினைவில்லாமல் இருக்கும் வேளையில் தான் கைப்பற்ற வேண்டும். ஆகையினால் அவன் பொறுமையை கடைபிடித்தவனாய் பறந்து போய் மனோன்மணியின் வாசலில் வைத்துப் பிடித்தான் அவரை.
அங்கும் அவர் அவனை தட்டித் தள்ளிவிட்டு நிஷ்களங்கமான ஏகவெளியில் சென்றார். அவ்வெளி முழுவதும் சுற்றி தொடர்ந்து சென்று பிடிக்க முயற்சி செய்த போது அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதாவது அவர் குளிகையின் வேகத்தால் தளர்ச்சியுற்று சோர்வோடு தேவியின் மாயையில் மயங்கி சிக்குண்டு தளர்நிலையில் நின்றார். அச்சமயத்தில் வெகு ஜாக்கிரதையாக அவர் வாயில் உள்ள குளிகையை அவன் கைக்கொண்டு பிடிங்கினான்.
அவரிடமிருந்து பிடுங்கும் பொழுது ‘ஏன் பிடுங்குகிறாய்’என்று வாதம் செய்தார். அவன் அவற்றை கவனியாமல் குளிகை கொண்டு பறக்க ஆரம்பித்தான். உடனே அவர் தொடர்ந்து வந்து, ‘நண்பரே நான் கள்ளனோ நல்லவனோ நீங்கள் எப்படி எடுத்துக் கொண்டாலும் சரி என் அண்டத்திற்கு நான் மறுபடியும் போவதற்கு வழிகாட்டி விட்டுப் போங்கள்’ உடனே அவனுக்கு கோபம் வந்தது.
‘நான் ஒருகாலும் இனி அந்த தப்ப செய்ய மாட்டேன். உனக்கு வழிகாட்டவும் மாட்டேன். நான் பார்த்து வந்த அண்டங்களில் நீ வசிக்கின்ற அண்டமே மிகவும் மோசமானதாகும். நீயே இப்படி இருக்கிறாய் என்றால் உன்னை மாதிரி தானே அவர்களும் இருப்பார்கள். முன்பின் தெரியாத உனக்கு குளிகை தந்து உதவி செய்த எனக்கு கிடைத்த அலைச்சலும் அவதியும் போதும். இதனால் என்ன விளைவு வந்தாலும் எனக்கு கவலையில்லை.
இனி உன்னுடைய அண்டத்திற்கு போனால்போ இல்லா விட்டால் இங்கே கிட’ என்று கூறிவிட்டு உடனே மறு அண்டத்திற்கு பறந்து சென்றான் அவன்.
மேலண்டங்களை எல்லாம் சோதித்து கண்டு பின் கீழ் உள்ள அண்டங்களை காண அவன் சென்றபோது அங்குள்ள ஒரு அண்டத்தில் வெண்சங்கு போல உடல் கொண்ட சித்தர்கள் கண்ணில் பட்டனர். அவர்கள் அனைவரும் சமாதி நிலையில் இருந்தார்கள். சமாதியை சுற்றி வந்து வந்தனங்கள் செய்து விட்டு பறக்கும் போது மற்றொரு அண்டத்தில் ரத்த சிவப்பாக சித்தர்கள் உலாவுவதைக் கண்டு அவர்கள் முன்னே இறங்கி கை கூப்பி நடந்து நின்றான். பிறகு ஆயிரத்தெட்டு அண்டங்களை பார்த்து முடித்து விட்டு ஆசை அடங்கியவனாய் கண்டு ஓடி ஓடி ஓய்ந்த பின்னர் சமாதியில் நின்றான். அப்போது தான் அவன் அவனாக இருந்தான்.
அதன் பிறகு அவன் பேசிய தெல்லாம் அமுதவார்த்தைகளாக அனைவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். குறிப்பாக அவனின் சொற் பொழிவுகள் அண்ட உற்பத்தி குறித்தும் பிண்ட உற்பத்தி குறித்தும் இருந்தன. இவ்வுலகம் தோன்றிய விதமானது முதலில் பிருதிவும் அதன்மேல் நீரும், நீரின் மேல் அக்கினியும் அக்கினியின் மேல் வாயுவும் வாயுவின் மேல் ஆகாயமும் ஆகாயம் வளர்ந்து கொண்டே அண்டமாயும் நின்றது எனவும் அதாவது பரந்து நிற்கும் ஆகாயம் முதல் பஞ்சபூத உற்பத்தி குறித்த சொற்பொழிவை அவன் மௌன நிலையில் நடத்திக் கொண்டி ருந்தான்.
பிண்ட உற்பத்தியை பற்றி அவன் கூறும் போது இவ்வுடலில் உள்ள மாமிசங்கள் பூமியின் கூறாகவும், சளி / ரத்தம் ஆகியவை நீரின் கூறாகவும் உடலை சூடு உண்டு பண்ணுவது அக்கினி கூறாகவும் நாம் விடும் மூச்சு வாயு கூறாகவும் ஆயிற்று. நம் உடலில் அக்கினியானது வாயுவுடன் கூடியே உள்ளே செல்கிறது என்று உண்மைகளை உண்மையாக பேசி கொண்டிருந்தான்.
காதிற்குள் ஆகாயத்தின் கூறு புகுந்து நிற்பதாகவும் கடலை நம்முள் இரண்டாகப் பிரித்து சிறுநீராக மாறி உள்ளதாகவும் அவன் பிண்டத்தின் அடிப் படையை கூறிய போது அனைவரும் வியந்து போனார்கள்.
இப்பிண்டமான சரீரத்திற்கு ஆதாரம் பூமியாகும் ஆதாரமான பூமியின் மேல் நீரும் நீரான கடலின் மேல் நெருப்பான சூரியன் உள்ளது. இந்த நெருப்பின் மேல் வாயுவும் வாயுவின் மேல் ஆகாயமும் உள்ளது ஆகாயம் வளர்ந்து அண்டமாயிற்று மீண்டும் அண்டத்தால் பின்டமும் உண்டாயிற்று என்ற வுடன் கைதட்டி மக்கள் கரகோசம் எழுப்பினர்.
அதுமாதிரி பூமிக்கு தலை பகுதியாக உள்ளது மேரு. இந்த மேரு துருவத்தை நேராக்கி வலம் வருகிறது. துருவ நட்சத்திரத்தை மையமாக கொண்டு சூரியன் சந்திரன் மற்றுள்ள கோள்களும் இருப்பதோடு நட்சத்திரங்களும் சுற்றி வருகின்றன. அண்டத்தை சுற்றி ஒரு அசையாத ஓடு உள்ளது. அந்த ஓட்டை எந்த வஸ்துவாலும் அழிக்க முடியாது. அது உருகும் தன்மையுடையது. அதாவது அண்டமான வெளி மண்டலங்கள் பிண்டமான நமது உடலில் உள்ளது என்பதை அவன் அற்புதமான வாயை திறக்காமல் பேசி கொண்டிருந்தான். அவனின் சொற் பொழிவை பிரபஞ்சம் முழுக்கவும் கேட்டு கொண்டிருந்தது. அவனை யாருக்கும் கேள்வி கேட்க தைரிய மில்லை அவனை கொல்லவும் முடியாது என்று ஒருவேளை அவர்களுக்கு தெரியலாம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|