எதிர் கொள்ளப்படுவார்கள்!
த.பழமலய்
கரிய மையால் எழுதுவதுதான் சரி
துயரத்தை இருட்டால் தான்
மொழி பெயர்க்க முடியும்.
நாய்கள் இரவுகளில் ஊளையிடுகின்றன
மலையையோ நிலவையோ பார்த்து
மனிதர்களைப் பற்றிய புகார்களை
மனிதர்கள் கேட்காததால்
இந்த வெள்ளைத் தாளும்
நானும் போல்தான்.
யாரிடமும் முறையிட முடியாதபோது
நமக்கு நாமே புலம்புகிறோம்
கட்டிப் பிடித்து ஒப்பாரி வைக்க
இன்னொருவர் வேண்டும்.
பங்கு பெற முடியாத துயரங்கள்
இருக்கின்றன
புரிந்து கொள்ளல் இல்லாதபோது
பங்குபெறல் ஏது?
இயேசு மலைக்குப் போனார்
நபிகள் குகைக்குப் போனார்
வள்ளலார் கண்ணாடி முன்பு போல
நான் கவிதை முன்பு குந்தலாம்.
வாடிய பயிர்களைக் கண்டு வாடுவதும்
கஞ்சி குடிப்பதற்கு இலாரைக் கண்டு
நெஞ்சு பொறுக்காமையும் இது.
சிரிப்புக்கு இடமோ
அழுகைக்கு இடமோ
நமக்குள்ளேயே முடிந்துபோவது.
தானே தனக்குத் துணை என்கிற
தனிமை!
பிறருக்கு வெளியீடு இரண்டாவது
தனக்கு வெளியேற்றமே முதலாவது
ஏழை மனிதன் வேறு
என்னதான் செய்வான்!
கடந்த 19 நாள்களாகத் தாக்குதல்
மேலும் 10 முதல் 14 நாள்கள்
தேவைப்படலாமாம்.
இஸ்புல் தீவிரவாதிகள் மேல் தாக்குதல் -
என்று சொல்லிக் கொண்டு
இலெபனான் முழுவதையுமே அழிக்கிறார்கள்.
நேற்று (30.7.06) ஞாயிற்றுக்கிழமை
சிற்றூர் கானா மீது குண்டு வீச்சு
22 குழந்தைகள் உள்பட
51 பேர் உயிர் இழந்தனர்.
கிராமமே நாசம்!
இதுவரை 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர்!
அமெரிக்காவின் பின்பலத்தில்
யாரையும் பொருட்படுத்தாத இசுரேல்.
ஐ.நா. இடைக்கால அமைதி காப்புப்படை
இந்திய வீரர்கள் இருவர் காயம் அடைந்துள்ளனர்.
ஆழமான காயங்களின் வடுக்கள்
அடுத்த தலைமுறைகளுக்கும் ஊடுறுபவை
மரங்கள் சாய்ந்தாலும்
விதைகள் முளைப்பவை!
இயேசு நாதரைச் சிலுவையில் அறைந்தவர்கள்
நபிகள் நாயகத்தை ஓட விரட்டியவர்கள்
இப்படியே செய்து கொண்டிருக்க முடியாது.
எதிர் கொள்ளப்படுவார்கள்
இரக்கத்தோடு மன்னிக்கப்படுபவர்களாய்!
இரக்கத்தைக் கற்றுக் கொள்பவர்களாய்!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|