ஜி. மஞ்சுளா கவிதைகள்
விடப்பட்ட இடம்
எதையெல்லாம்
உடைத்துப் பழகியதோ
உன் கை.
பால்ய வயதின் பக்குவமற்ற
உன் குணங்களை சோதித்தறிய
நிறைய வாய்ப்புகள்
அவை விட்டுவைத்த
இடமெல்லாம்
இப்போது நிரம்பிக் கொண்டிருக்கின்றன
அப்போதைக்கப்போது
உன் நிறம் மாறும் குணத்தால்
உடைகிறது
உன்னைச் சுற்றியுள்ள மனங்கள்.
‘மனிதம்’
ஏதோ ஒன்றினால்
தவறாக நிரம்பியுள்ளது
உன்னைப்போல் பலரிடம்
மரத்துப்போன மனிதன்
ஒரு மரத்தின் நிழலாய்
இன்ப துன்பம்
அசைகிறது
நம் வாழ்வில்
ஒரு மரத்தின் குளுமையாய்
குதூகலித்துக் கழிகிறது
நம் இளமை.
ஒரு மரத்தின் இலைகளாய்
உதிர்ந்து கொண்டேயிருக்கிறது
நம் நாட்கள்.
ஒரு மரத்தின் கனிகளாய்
சுவைக்கச் சொல்கிறது
நம் நிகழ்வுக(ளை)ள்.
ஒரு மரத்தின் வேராய்
பற்றியிருக்கச் சொல்கிறது
நம் மதத்தை (மதம்)
ஒரு மரத்தைப் போல்
மரத்துப் போன மனிதனாக
இருப்பதைவிட
நமது வாழ்வே மேல் என்று
கிளைதாவிச் சென்றுவிட்டது
குரங்கு.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|